சிவகங்கை அருகே 17 -ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், பில்லூர் அருகே உள்ள அழுதாங்கிபிள்ளை குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில் இந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
- இந்த நடுகல் 17 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பழங்காலத் தமிழர்கள், போரில் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப் பெறும் வீரக்கல், பெருநிறை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப் பெறும் நினைவுக் கல் நடுகல் எனப்படும். இதுபற்றி தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியப் பாடல்களிலும் குறிப்பு காணப்படுகிறது.
- அந்த வகையில் அழுதாங்கிபிள்ளை குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்லில், வீரர் ஒருவர் கையில் வில் அம்பு ஏந்திய நிலையில் ஒரு கை வில் தண்டையும், மற்றொரு கை நாணில் அம்பேற்றிய நிலையிலும் உள்ளது. வீரனின் முதுகுப் பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் காணப்படுகிறது.
- இடுப்பிலிருந்து முழங்காலுக்கு ஆடையும், கை புயங்களில் வீரக்கழலும், காதில் காதணியும் காணப்படுகிறது. மேலும், தலை முடி கொண்டையாக கட்டப்பெற்றுள்ளது. வீரனின் இடதுகால் அருகே சிறிய உருவம் ஒன்று காணப்படுகிறது. அதில் தலைமுடி கொண்டையிட்டு கைகள் வணங்கிய நிலையில் உள்ளது. இவைகளை வைத்துப் பார்க்கும் போது பெரிய உருவம் படைத் தளபதியாகவும், சிறிய உருவம் படை வீரனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்கலாம்.
- இதுதவிர, சிலையின் மேல் 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18-ஆம் நூற்றாண்டின் தொடக்க கால எழுத்தமைதியில் முத்தணன் என பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நடுகல் இந்த பகுதியில் வாழ்ந்து வீர மரணம் எய்திய வீரனை குறிக்கும் விதமாக நடப்பட்டிருக்கலாம்.
பொறியியல் கல்விக் கட்டண உயர்வு: அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதல்
- அண்ணா பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வுக்கு அரசும், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளன.
- இந்த உயர்வின்படி இப்போது ஒரு பருவத்துக்கு (6 மாதங்கள்) ரூ.8,500 என்ற அளவில் இருந்த கல்விக் கட்டணம், ரூ. 15,000-ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு படிப்புக்கும் இந்தக் கல்விக் கட்டணம் மாறுபடும். அந்த வகையில், குறைந்தபட்சமாக ரூ. 15,000 என்ற அளவிலும், அதிகபட்சமாக ரூ. 23,000 வரையிலும் கட்டண உயர்வு இருக்கும்.
- நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அண்ணா பல்கலைக்கழகம், அதன் நான்கு பிரிவுகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடவியல் பள்ளி, எம்.ஐ.டி. மற்றும் 13 உறுப்பு கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்த முடிவு செய்தது.
- அதன்படி, பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு பல ஆண்டுகளாக ஒரு பருவத்துக்கு ரூ. 8,500 முதல் ரூ. 12,000 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் குறைந்தபட்சம் ரூ. 20,000-ஆகவும் அதிகபட்சமாக ரூ, 30,000-ஆகவும் உயர்த்த முடிவு செய்தது.
- இந்த உயர்வுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் நிதிக்குழு ஒப்புதலுடன், அரசின் ஒப்புதலுக்காக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. ஆனால், இந்த கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி அளிக்காததோடு, கட்டண உயர்வை சற்று குறைத்து மீண்டும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுக்கு எடுத்து வருமாறு அறிவுறுத்தியது.
- இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்சிக்குழுவில் அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், பரிந்துரைத்த பொறியில் கட்டண உயர்வை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்தார்பூர் நடைபாதைக்கு அடிக்கல் நாட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான
- சீக்கியர்களின் நம்பிக்கை நிறுவனர் குரு நானக் கடைசியாக வாழ்ந்த இடம் கர்தார்பூர். கர்தார்பூர் பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் ராவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
- கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் எல்லையை இணைக்கும் இடத்தில் நடைபாதை அமைக்க இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து முடிவு செய்தன.
- அட்டாரி-வாகா எல்லையிலிருந்து நடைபாதையை இந்திய தரப்பு தொடங்குவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்
- கடந்தாண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) 2022 காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
- இந்த நிலையில், ஐசிசி மற்றும் இசிபி வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு, 2022-இல் இங்கிலாந்தின் பிர்மிங்கமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைத்துள்ளது.காமன்வெல்த் கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு ஐசிசி வரவேற்பு தெரிவித்துள்ளது.
- இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு, காமன்வெல்த் கூட்டமைப்பின் 71 உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே மீதமிருக்கிறது. இதற்கு 51 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். இதற்கான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.
வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
- உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 'காம்பவுண்டு' பிரிவில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.நெதர்லாந்தில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, துருக்கி அணிகள் மோதின.
- இதில் ஜோதி சுரேகா, ராஜ் கவுர், முஸ்கன் கிரார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 229-226 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இது, இந்த சீசனில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.
- பெண்கள் தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, துருக்கியின் யேசிம் போஸ்டன் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 145-145 என சமன் ஆனது. பின் 'டை பிரேக்கரில்' அசத்திய ஜோதி சுரேகா 10-9 என வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.