ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் ரூ.28 கோடியில் பசுமைப் பூங்கா: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- சென்னை அருகே ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்பட்டு பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, நடைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- இந்த ஏரியை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
- இந்தப் பூங்காவில் ஏரியை சுற்றிலும் 3 கி. மீட்டர் நீளத்துக்கு பொது மக்கள் நடைபயிற்சி செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடைபாதை, திறந்தவெளி அரங்கம், பார்வை மேடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிற்றுண்டி கட்டடம், படகுகள் மூலம் ஏரியின் அழகை கண்டுகளிக்க படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.425 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
- தமிழகத்தில் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலை ரூ.425 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
- ஆரணி-விழுப்புரம் சாலை: திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரணி முதல் விழுப்புரம் வரையிலான ஆற்காடு-விழுப்புரம் மாநில நெடுஞ்சாலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
- இதன்மூலம், பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டு பயண நேரமும் வெகுவாகக் குறையும். பொதுமக்களின் வசதிக்காக இந்த வழித்தடத்தில் 35 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன.
- அதில், 15 பேருந்து நிறுத்தங்களில் சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் சாலையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
- சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
- பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. நீராதாரங்கள் வற்றி போன நிலையிலும், குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள் தண்ணீர், லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான தலைவராக சுப்பா ரெட்டி நியமனம்
- கடும் எதிர்ப்புகளுக்கிடையே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக சுப்பாரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- இந்நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி , திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக சுப்பாரெட்டி நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரெட்டி 22-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 ஆயிரம் கோடியில் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டம் - திறந்து வைத்த சந்திரசேகர் ராவ்
- தெலங்கானாவில் 80 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட காலேஷ்வரம்நீர்ப்பாசனத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலங்கானா, ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
- மகாராஷ்டிராவில் உருவாகும் கோதாவரி நதி தெலங்கானா மாநிலத்தின் வழியாக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று கடலில் களக்கிறது. விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காக கோதாவரி நதியின் மெடிகட்டா பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது சந்திரசேகர் ராவ் அரசின் கனவு திட்டம் ஆகும்.
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 35வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்
- டெல்லியில் 35வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
- வாகனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் மீதான ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக மார்க் எஸ்பர் நியமனம்: வெள்ளை மாளிகை
- அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி வந்த பெட்ரிக் ஷனஹான் தனது குடும்ப பிரச்னை காரணமாக பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, ராணுவ உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் மார்க் எஸ்பரை அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரணதிக்கு வெண்கலம்
- சீனியர் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- வால்ட் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு 6-ஆவது வீராங்கனையாக தகுதிபெற்றிருந்த பிரணதி, 13.3 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் யூ லின்மின் 14.3 புள்ளிகளுடன் தங்கமும், ஜப்பானின் அயாகா சகாகுசி 13.5 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்.