'கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்போம்'... ஜி20 நாடுகளின் அதிரடி முடிவு
- மக்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும்பகுதி கழிவாகக் கடலில்தான் போய்ச் சேருகிறது. ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கும் பல மில்லியன் டன் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
- இதன் பாதிப்பைத் தடுக்க சமீப காலமாகப் பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அதேபோல ஒரு முடிவை ஜி20 நாடுகளும் எடுத்திருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னால் ஜப்பானின் கரிஸவா (Karuizawa) பகுதியில் ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.
- அப்போதுதான் கடல் மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இது தொடர்பான கூடுதல் முடிவுகள் எடுக்கப்படலாம்.
- இந்த முடிவின்படி இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தும். கடல் மாசுபாட்டைக் குறைக்கவும் பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருள்களை உருவாக்கவும் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்க விரும்புவதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே விருப்பம் தெரிவித்திருக்கிறார். மேலும், வளரும் நாடுகளுக்கு இந்த விஷயத்தில் உதவும் வகையில் வழிகாட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு
- பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு குறித்த பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது
- இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்வானார். டெல்லியில் நடந்த பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
மனம் கவர்ந்த நிறுவன பிராண்ட்: அமேசான் இந்தியாவுக்கு முதலிடம்
- நிதி நிலைமை, பயன்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் அமேசான் இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- இதற்கு அடுத்தபடியாக மைக்ரோஸாஃப்ட் இந்தியா இரண்டாவது இடத்தையும், சோனி இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 10 நிறுவனங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில், மெர்ஸிடிஸ்-பென்ஸ் (4), ஐபிஎம் (5), லார்சன் & டூப்ரோ (6), நெஸ்லே (7), இன்ஃபோசிஸ் (8), சாம்சங் (9), டெல் (10) ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக பைஸ் அமீத் நியமனம்
- பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின் தலைவரான நவீத் முக்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு பதிலாக ஆசிம் முனிர் நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்காலம் பொதுவாக மூன்று ஆண்டுகள் ஆகும்.
- ஆனால் தற்போது முனிம் இந்த பதவியில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் குர்ஜன்வாலா படைப் பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பைஸ் அமீத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று பாக் ராணுவம் அறிவித்தது.
- பைஸ் அமீத் ஏற்கனவே ஐஎஸ் உளவுத்துறையின் புலனாய்வுப் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் ராணுவ தலைமையகத்துக்கு கடந்த எப்ரல் மாதம் 12 அன்று இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஐஎஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
உலக வில் வித்தை போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது
- உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நெதர்லாந்தில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் ரிகர்வ் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொண்டது.
- இதில் தொடக்கத்தில் முன்னிலை வகித்த இந்திய அணி, அதன் பிறகு சரிவுக்குள்ளாகி 2-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதாயிற்று.
- 6-வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவுக்கு இன்னும் தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
- இந்த போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.