2018- ம் ஆண்டுக்கான `இயல்' விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமயம்
- 2018-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய தோட்ட இயல் விருதை எழுத்தாளர் இமயம் பெற்றார். வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமயத்துக்கு விருது வழங்கப்பட்டது.
- நடுகல் நாவலுக்கான புனைவுப் பரிசு தீபச் செல்வனுக்கு வழங்கப்பட்டது.
- காக்கா கொத்திய காயம் என்ற நூலுக்காக புனைவுப் பரிசு உமாஜிக்கு வழங்கப்பட்டது.
மத்திய ஜல் சக்தி துறையின் முதல் ஆலோசனைக் கூட்டம்
- பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய ஜல் சக்தியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் இன்று தொடங்கியது.
- ஜல் சக்தித் துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
- தமிழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றுள்ளார். நதிநீர் பராமரிப்பு, குடிநீர் பற்றாக்குறை, நீர்நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு
- அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், ஜூன் 3ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானம், இந்திய விமானப் படையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
- விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
- சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ராணுவம், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் உதவியுடனும் தேடுதல் பணி நடந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டது.
- இந்நிலையில், 8 நாட்களுக்கு பின்னர், மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள், அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில்இருந்து 16 கி.மீ., தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது 12 ஆயிரம் அடி உயரம் உள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை, இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.
விண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விண்வெளி போர் தொடர்பான ஆயுதங்களை தயாரிக்க புதிய அமைப்பிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- விண்வெளியில் இந்திய ராணுவத்தினர் போரில் உபயோகப்படுத்த ஆயுதங்களை தயாரிக்க ஒரு புதிய அமைப்பை மத்திய அரசு நிறுவ உள்ளது. இந்த அமைப்பு விண்வெளியில் நவீன தொழில்நுட்பங்கள் உடைய ஆயுதங்களை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் புதிதாக விண்வெளி போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை தயாரிக்க டிபன்ஸ் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி (DSRA) என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
- மேலும் இந்த அமைப்பு டிபன்ஸ் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி (DSA) அமைப்பிற்கு தேவையான உதவியையும் ஆராய்ச்சியை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிஎஸ்ஏ அமைப்பில் இந்தியாவின் முப்படையின் வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்த அமைப்பு பெங்களூருவில் ஏர் வைஸ் மார்ஷல் என்பவரின் கீழ் அமைக்கப்படும். இந்த முடிவு இந்தியா கடந்த மார்ச் மாதம் செய்த 'மிஷன் சக்தி' என்ற செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் சோதனைக்கு பிறகு எடுக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய குடிநீர்: மத்திய அரசு இலக்கு
- வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய குடிநீர் அளிப்பதே அரசின் இலக்கு என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
- உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தூய குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) இடைக்கால ஆணையராக , ஊழல் கண்காணிப்பு ஆணையர் சரத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த கே.வி. செளதரியின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுற்றது. அவருக்கு அடுத்த ரேங்கில் இருந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம். பாஸினின் பதவிக்காலம் திங்கள்கிழமையுடன் முடிவுற்றது.
மாநிலங்களவை பாஜக தலைவர் தாவர்சந்த் கெலாட்
- மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் (71) நியமிக்கப்பட்டுள்ளார்.
- முந்தைய ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, இந்தப் பொறுப்பை வகித்தார். உடல்நிலை காரணமாக அவர் இந்த முறை அமைச்சர் பதவியோ முக்கியப் பொறுப்புகளோ வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.
மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் நியமிக்கப்பட்டார்
- பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரேந்திரகுமார் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது மகம்கர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
- இவர் 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- வரும் 17 ஆம் தேதி அன்று புதிய மக்களவையின் முதல் நாள் கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்துக்காக இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் நியமிக்கப் பட்டுள்ளார்.
- கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நாளை மறுதினம் (14-ந்தேதி) முடிவடைகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
- அவர் இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.இதற்காக பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
- ஆனால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வான்வெளியை அந்த நாட்டின் இம்ரான்கான் அரசு மூடி வைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான்கான் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
- அதைப் பரிசீலித்த இம்ரான்கான் அரசு, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.