லோக் ஆயுக்த தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் பொறுப்பேற்பு
- தமிழ்நாடு லோக் ஆயுக்த தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, தேவதாஸ் தேர்வு செய்யப்பட்டார். நீதித்துறை உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- இதில் நீதித் துறை அல்லாத உறுப்பினர்கள் இரண்டு பேரின் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
- இதனிடையே, லோக் ஆயுக்த தலைவராக நீதிபதி தேவதாஸ், நீதித் துறை உறுப்பினர்கள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திங்கள்கிழமை பொறுப்பேற்றனர்.
- இதற்கான நியமன உத்தரவுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூன்று பேருக்கும் அளித்தார். ஆளுநர் மாளிகையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகா குழுக்களுடன் ஒப்பந்தம் நீட்டிப்பு
- வடகிழக்கு மாநிலமான, நாகாலாந்தில் உள்ள, மூன்று நாகா போராட்டக் குழுக்களுடனான, போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி., நான்காம் கட்ட திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
- ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் நான்காம் கட்ட திட்ட பணிகளை தொடர, மத்திய அரசு, ஒப்புதல் அளித்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில், அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்காக, ஜி.எஸ்.எல்.வி., மூலமாக செயற்கைக்கோள் ஏவும் திட்டத்துக்கு, 2003ல், மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி.,யின் நான்காம் கட்ட திட்ட பணிகளுக்கு, மத்திய அமைச்சரவை குழு, நேற்று ஒப்புதல் வழங்கியது. இதற்காக, 2,729 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2021 - 24க்குள், 2 டன் எடை உடைய, ஐந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'நிர்பய்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 'நிர்பய்' ஏவுகணை தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.
- அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன்பெற்ற இந்த ஏவுகணை 1000 முதல் 1500 கி.மீ. வரையிலான தொலைவு வரை சென்று தாக்கும் வல்லமை உடையதாகும்.
- இந்த ஏவுகணை கடந்த 2017-ம் ஆண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் பாலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக தனது இலக்கை தாக்கி அழித்தது.
சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
- சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
பிரசாரம் செய்ய யோகி, மாயாவதிக்கு தடை
- மத ரீதியில் பேசியதாக, உத்தர பிரதேச முதல்வரான, பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான, மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேனகா காந்தி பிரச்சாரம் செய்ய தடை
- மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியதால் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை மேனகா காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு
- கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
- இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு
- பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில் தங்கிவிட்ட இந்துக்கள் சிறுபான்மையினத்தவராகிவிட்டனர்.
- அதன்பின்னர், அங்கிருந்த இந்து கோயில்கள் மற்றும் நிலங்களை மதராஸாக்கள் எடுத்துக் கொண்டன.
- தங்களது கோயில்களை புனரைமைக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து இந்துக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை புனரமைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, கோயில்களை புனரமைத்து இந்துக்களிடம் அரசு கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"670 கோடி வங்கி இருப்பு" - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்
- அரசியல் கட்சிகளின் வங்கியில் அதிக இருப்புத் தொகை வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் எனத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- பகுஜன் சமாஜ் ரூ 670 கோடி
- சமாஜ்வாதி ரூ. 471 கோடி
- காங்கிரஸ் ரூ. 196 கோடி
- தெலுங்கு தேசம் ரூ. 107 கோடி
- பாரதிய ஜனதா ரூ. 83 கோடி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ. 3 கோடி
- ஆம் ஆத்மி ரூ. 3 கோடி
உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு - தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு
- இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
- இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.