தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் நியமனம்: தமிழகஅரசு அறிவிப்பு
- தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
- மேலும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் உறுப்பினர்களாக பொதுப்பணி துறையின் கட்டிடங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் மனோகர் மற்றும் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனும், நிர்வாக உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லீனா நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸி.அணியின் உதவி பயிற்சியாளர் ஆனார் ரிக்கி பாண்டிங்
- ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கிடையே நடப்பு சாம்பியன் ஆஸி. மீண்டும் பட்டத்தை கைப்பற்ற தீவிரமாக உள்ளது. அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் உள்ளார். பெளலிங் பயிற்சியாளராக இருந்த டேவிட் சகேர் விலகி விட்டார்.
- இதனால் புதிய உதவி பயிற்சியாளராக பாண்டிங் (44) நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக உள்ள கிரேம் ஹிக்குடன், இணைந்து பணிபுரிய உள்ள பாண்டிங், வரும் உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் அணி நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பார். ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது ஆஸி.
அருணாசலில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- அருணாசலப் பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
- மாநிலத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு அதீத கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 55 மாதங்களில் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. தற்போது ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
- அதிவேக வளர்ச்சி: லோகித் மாவட்டத்திலுள்ள தேஜு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அப்பகுதியில் விளையும் பழங்களும், பூக்களும் நாட்டின் பல்வேறு சந்தைகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலும், ஹோலாங்கி பசுமை விமானநிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம், மாநிலத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்து, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். புதிய ரயில் போக்குவரத்துத் திட்டங்களால், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மேம்பாடு அடையும்.
- சேலா சுரங்கப்பாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தவாங் பள்ளத்தாக்குப் பகுதிக்கான பயணநேரம் 1 மணிநேரம் குறையவுள்ளது. இதன்மூலம், அப்பகுதி மக்களும் பாதுகாப்புப் படையினரும் பெரும்பயனடைவர்.
- இந்த நிகழ்ச்சியின்போது, 110 மெகா வாட் திறன் கொண்ட பரே நீர்மின் நிலையம், தூர்தர்ஷன் சார்பில் அருணாசலப் பிரதேசத்துக்கான பிரத்யேக சேனல், 50 சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.