பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இணக்கமான நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியா
- புது தில்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, நமது அண்டை நாட்டை, உலக நாடுகளிடம் இருந்து தனிப்படுத்தும் பணிகளும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
- மேலும், இதுவரை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்த இணக்கமான நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இது வணிக ரீதியாக ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு வழங்கும் அந்தஸ்தாகும். 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா இந்த அந்தஸ்தை வழங்கியது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வுக்கு கோரிக்கை
- ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரது செயல்பாட்டுக்கு தடை விதிக்கும்படி ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மசூத் அசாருக்கு முழு சுதந்திரம் அளித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதத் தேவையான உதவிகளை பாகிஸ்தான் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த அறிக்கையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
போக்ரான் அருகே விமானப் படை இன்று பிரமாண்ட போர் பயிற்சி
- ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் 'வாயு சக்தி-2019' என்ற பெயரில் இந்திய விமானப்படை இன்று முழு அளவிலான பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
- விமானப்படை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'வாயு சக்தி' என்ற பெயரில் முழு அளவிலான போர் பயிற்சியில் ஈடுபடும். முதல் பயிற்சி கடந்த 1953ம் ஆண்டில் டெல்லி தில்பத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டுக்கு பின் இந்த பயிற்சி ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை அருகேயுள்ள போக்ரானுக்கு மாற்றப்பட்டது.
- சுமார் 2 மணி நேரம் நடக்கும் இந்த பயிற்சியில் மிக்-29, ஜாகுவார், சுகாய், மிராஜ்-2000 போன்ற போர் விமானங்களும், ஏஎன்-32, சி130 போன்ற சரக்கு விமானங்களும், எம்.ஐ-17, எம்.ஐ-35 ரக ஹெலிகாப்டர்களும் பங்கு பெறுகின்றன.
- ஆகாஷ் ஏவுகணைகளை வீசுதல், ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது, மிக்-29 விமானத்திலிருந்து தரை இலக்கு தாக்கப்படுவது போன்ற பயிற்சிகள் முதல் முறையாக இன்று மேற்கொள்ளப்படுகின்றன.
- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானம் மற்றும் போர்க்கருவிகள் போன்றவை இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ன. இந்த போர் பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார்.
வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருகிறது. அந்த வகையில், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் என்ற ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரித்தது.
- இந்த ரயிலின் சோதனை ஓட்டங்கள் அண்மையில் நிறைவடைந்தன. அப்போது மணிக்கு 180 கிமீ வேகம் வரை இயக்கப்பட்டு வந்தே பாரத் ரயில் பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
- பின்னர், தலைநகர் தில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது. அப்போது, பியூஷ் கோயல், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமனம்
- இந்திய வருமானத் துறை அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடந்த 1982 ஆம் வருடம் இந்திய வருமானத்துறை அதிகாரிகள் தேர்வில் வெற்றி பெற்ற பிரமோத் சந்திர மோடி வருமான வரித்துறையில் பணி புரிந்து வந்தர். இந்த துறையில் பல பதவிகளிலும் பல பணிகளிலும் திறமையாக பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தில் பிரமோத் சந்திர மோடி நிர்வாக உறுப்பினராக இருந்து வந்தார். இந்த வாரிய தலைவராக சுஷில் சந்திரா பணி ஆற்றி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவர் தேர்க்தல் ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி
- நாடு முழுவதும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் 75 முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் பெரிய அளவிலான தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
- அதன்படி, தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை வெள்ளிக்கிழமை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா தேசியக் கொடி ஏற்றினார்.
'பாண்ட் ஆப் பிரதர்ஸ்' தலைப்பு புகைப்படம் பெற்றது விருதை
- அமெரிக்காவில், 2019 ஆண்டிற்கான சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வாஷிங்டனில் நடந்தது. இவ்விழாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
- அவற்றில் 25 புகைப்படங்களை 'இயற்கை வரலாற்று அரங்காட்சியகம்' தேர்வு செய்தது. இந்த 25 புகைப்படங்களில் மக்களிடம் அதிக வாக்குகள் பெறப்படும் புகைப்படத்திற்கு விருது வழங்கப்படும்.
- அதன்படி, மக்களிடம் நடந்த வாக்கெடுப்பில், நியூசிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் டேபிட் லாய்ட் எடுத்த 'பாண்ட் ஆப் பிரதர்ஸ்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்டிருந்த இரு ஆண் சிங்கங்கள் தங்கள் பாசத்தினை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிக வாக்குகள் பெற்று, சிறந்த வனவிலங்கு புகைப்பட விருதை தட்டிச் சென்றது.
எல்லையில் அதிரடி நடவடிக்கை தொடங்கியது - தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் நாடாளுமன்ற ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட அதிரடி முடிவு
- அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பொழுது அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்று கூறினார்.
- சுமார் 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்ட அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு அகதிகள் குடியேற்றங்களை தவிர்க்க கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
- நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் நிலவி வந்தாலும் எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
- சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியை சமாளித்து அவரால் சுமூகமான உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.
- இந்நிலையில், எல்லையில் சுவர் கட்டும் முடிவை உடனடியாக அறிவித்த அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.
- தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால்தான் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அதிபர் தன்னிச்சையாகவே முடிவெடுக்க முடியும். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை தற்போது ட்ரம்பால் ஒதுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.