Type Here to Get Search Results !

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Sri Ramakrishna Parakamsar) - TNPSC History PDF in TAMIL By TNPSCSHOUTERS




ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 18, 1836
இடம்: காமர்புகூர், மேற்குவங்கம் மாநிலம், இந்தியா
இறப்பு: ஆகஸ்ட் 16, 1886
தொழில்: ஆன்மீகவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.



ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்
தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்,  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார்.
பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்
  • ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
  • இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
  • உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
  • சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
  • மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
இறுதி வாழ்க்கை
தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel