ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான
தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து
சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட்
அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால
தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும் பின்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி
அவ்வியக்கத்தைத் துறந்து தன்னிச்சையான கொள்கை கொண்டார்.
அவர்
யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர்
உருவாக்கவில்லை. ஆனால், 20-ம்
நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர்
மதிக்கப்படுகிறார்.
எந்த
நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன்
பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர் கிருஷ்ணமூர்த்தி. உண்மையைத் தேடும்
யாத்திரையை ஒவ்வொருவருக் குள்ளும் சாத்தியப்படுத்தும் வழிமுறை அவருடையது.
கவித்துவமான சொற்களில் தன் எண்ணங்களை இயல்பாக வெளிப்படுத்தியவர்.
முக்கியமான
அறிவியலாளர்களும் தத்துவச் சிந்தனை கொண்டோரும் படைப்பாளிகளும் அவரை மதிக்கிறார்கள்.
அவர் உயிரோடு இருந்தபோது சாமானிய மனிதர்களிலிருந்து அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள்வரை பலரும் அவரோடு தொடர்ந்து உரையாடிவந்தனர்.
அவர் மறைந்த பின்பும் அவரது உரையாடல்களின், உரைகளின்
பதிவுகள் ஆழ்ந்த அக்கறையோடு கேட்கவும் படிக்கவும்படுகின்றன.
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும்
எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே
உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.
வாழ்க்கை வரலாறு
மெட்ராஸ் மாகாணம் மதனப்பள்ளியில் (தற்போது ஆந்திர மாநிலம்
சித்தூரில் உள்ளது) 1895-ல் பிறந்தார். இவரது தந்தை
பிரிட்டிஷ் காலனி நிர்வாகத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவருக்கு 10 வயது இருந்தபோது தாய் இறந்துவிட்டார்.குடும்பம் 1903-ல் கடப்பாவில் குடியேறியது. பலவீனமானவன், கற்பனை
உலகில் சஞ்சரிப்பவன், அறிவுக்கூர்மை இல்லாதவன் என்று
உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் சிறு வயது முதலே இவரை விமர்சித்தனர்.
1907-ல் ஓய்வு பெற்ற அப்பாவுக்கு சென்னை அடையாறில் உள்ள
தியசாபிகல் சொசைட்டியில் கிளார்க் வேலை கிடைத்தது. அதன் தலைவராக இருந்த
அன்னிபெசன்ட் அம்மையார் சிறுவனிடம் மிளிர்ந்த ஆன்மிகத் தேடல் அறிகுறிகளையும் திறனையும்
உணர்ந்தார். அவனை தத்தெடுத்துக்கொண்டார்.அமைப்பின் சார்பில் கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்பு பயிற்சிகளும் பெற்றார். ‘அனைத்துலக
ஆசான்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தியசாபிகல் அமைப்பின் எதிர்காலத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார்.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார்.18 வயதில்
வினோதமான அனுபவங்கள் ஏற்படத் தொடங்கின.
மொழிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தத்துவம், ஆன்மிகம் குறித்துப் பேசவும் எழுதத் தொடங்கினார்.
வாழ்வியல், தியானம், தேடல், மனித உறவுகள், சமூக மாற்றம், மனம்,
சிந்தனை, விடுதலை ஆகியவை குறித்து உலகம்
முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசினார்.தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம்,
தி ஒன்லி ரெவல்யூஷன், கிருஷ்ணமூர்த்தீஸ்
நோட்புக் உள்ளிட்ட அவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். இவரது உரைகள், உரையாடல்களில் பெரும்பாலானவை புத்தகங்களாக வந்துள்ளன.
வெளி உலகில் தோன்றவேண்டிய மலர்ச்சியைவிட மனிதனின் மனத்தில்
மலர்ச்சி தோன்றுவதே முக்கியம் என்றார். புரட்சி என்பது மத, அரசியல், சமூக ரீதியான வெளிமுக
மாற்றம் அல்ல. அகத்தில் இயல்பான மறுவடிவம் பெறுதல்தான் புரட்சி என்றார்.இவர் 1922-ல் பலமுறை ஆன்மிக விழிப்புணர்வு நிலை அடைந்ததாகவும் அந்த அனுபவங்கள் இவரது
வாழ்க்கையையே புரட்டிப் போட்டதாகவும் கூறப்படுகிறது. தான் ஒரு தனிமனிதனாக
மாறவேண்டும் என்ற உணர்வை இவரது அனுபவங்கள் தந்தன. எல்லாவிதமான தளைகளில் இருந்தும்
விடுபட முடிவு செய்தார்.
அறக்கட்டளைகள், அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வெளியேறினார். 1929-ல் ‘அனைத்துலக ஆசான்’ பட்டத்தையும்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் துறந்தார். ‘நான்
யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல்
சுதந்திரமாக இருந்தால்தான் என்னால் சுதந்திரம் பற்றிப் பிறருக்குக் கூறமுடியும்’
என்றார். கடவுள், கோயில், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று
உள்ளிட்ட அனைத்துமே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்றார். மத மாற்றம்,
கொள்கை மாற்றம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு எந்த நன்மையும்
செய்யப் போவதில்லை என்றும் கூறினார்.மனிதகுல மேம்பாட்டுக்காக தனது பேச்சாலும்,
எழுத்தாலும் முக்கியப் பங்காற்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 91
வயதில் (1986) மறைந்தார்.
பீடங்களைத்
தவிர்த்த பயணம்
தத்துவ
ஞானிகளின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் உலக குரு கிருஷ்ணமூர்த்திதான்
என்று அன்னிபெசன்ட்டும் அவரது நண்பர்களும் அறிவித்தார்கள்.
அத்தகைய
மகானின் வெளிப்பாட்டுக்கு உலகைத் தயார்ப்படுத்துவதற்காக உலகளாவிய ஓர் அமைப்பை
(ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) நிறுவி இளம் கிருஷ்ணமூர்த்தியை அதன் தலைவராக
நியமித்தார்கள்.பின்னாளில், பல்வேறு படிமங்களையும்
பீடங்களையும் அதிகாரக் கோட்பாடுகளையும் கலைக்கவிருந்த இளம் கிருஷ்ணமூர்த்தி, 1929-ல் அந்தப் பதவியைத் துறந்தார். பெரிய அளவில்
ஆதரவாளர்களையும் ஏகப்பட்ட சொத்துகளையும் கொண்டிருந்த அந்த அமைப்பையும் கலைத்தார்.
அதன் பிறகு,
1986 பிப்ரவரி 17-ல்
மரணம் அடைவதுவரையிலும் சுமார் 60 ஆண்டுகள்
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மனித இனத்தில் தீவிரமான மாற்றங்கள் நிகழ
வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிவந்தார்.
கிருஷ்ணமூர்த்தி
என்ன சொன்னார்? அவர் எதையுமே சொல்லவில்லை என்று சொல்லலாம்.
எதையும் சொல்ல வில்லை. எதையும் கற்றுத்தரவில்லை. எந்தத் தத்துவத்தையும்
கண்டுபிடிக்கவோ நிறுவவோ இல்லை. பிறகு எப்படி அவர் முக்கியமான தத்துவ ஞானியாகப்
பார்க்கப்படுகிறார்?கிருஷ்ணமூர்த்தி தெளிவாகப் பார்க்கச்
சொல்கிறார். அதையும் அவர் கற்றுத்தருவதில்லை. பார்க்க உதவுகிறார். எதைப் பார்க்க
உதவுகிறார்?
எல்லா
ஞானிகளையும் மார்க்கதரிசிகளையும் போலவே அவரும் மனித துக்கத்தைப் பற்றிப்
பேசுகிறார். துயரம், அவலம், பகைமை, பொறாமை, வன்முறை, நிம்மதியின்மை, துரோகம், மதம், சேவை, கள்ளத்தனம், அதிகாரம், மோசடி, தியாகம், உன்னதம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார். அவரிடம்
வருபவர்கள் தங்கள் கேள்விகளையும் குறைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்
உரைகளிலும் உரையாடல்களிலும் இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ஆனால், எந்தத் தீர்வையும் அவர் தருவதில்லை.
இவற்றையெல்லாம்
நாம் அணுகும் விதத்திலேயே பிரச்சினை இருக்கிறது என்கிறார். நமக்கு உவப்பற்ற
விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் அணுகுமுறையில் பிரச்சினை இருக்கிறது
என்கிறார். என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் என்ன இருக்க வேண்டும் என்பதையே
பார்த்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருப்பதன் விபரீதத்தை அடையாளம்
காட்டுகிறார்.
மோதல்கள்
பற்றிப் பேசுகிறார். வெவ்வேறு மனிதர் களுக்கிடையிலும் இனக் குழுக்களுக்கிடையிலும்
சமூகங்களுக் கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் இருக்கும் மோதல்கள் பற்றி மட்டுமல்ல.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் பற்றியும் பேசுகிறார். நாம்
எதிர்மறையானது என்று நினைக்கும் ஒன்றின் இருப்பைப் போக்குவதாலோ அதை மாற்றுவதாலோ
இந்த மோதல் இல்லாமல் ஆகிவிடாது என்கிறார். மாறாக, இத்தகைய முயற்சியால் அந்த மோதல் அதிகரிக்கவே செய்யும்
என்கிறார். மாற்ற வேண்டும் என்ற முயற்சியே மோதலுக்கு வழிவகுக்கும் அல்லது மோதலை
அதிகரிக்கும் என்கிறார் ஜித்து.
எனில், நம்மைத் துன்புறுத்தும் விஷயங்களை என்னதான் செய்வது? பாருங்கள் என்கிறார் ஜே.கே. நன்றாகப் பாருங்கள், அதன் சகல அம்சங்களையும் அவற்றின் வேர்களோடும் கிளைகளோடும்
கண்டு உணருங்கள் என்கிறார். இந்த ஆழமான அறிதல் அல்லது உணர்தலே தேவை. இந்த உணர்தல்
மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார். மாற்ற வேண்டும் என்னும் முயற்சி மோதலைத்தான்
கொண்டுவரும். ஆகவே, நாம் செய்ய வேண்டியது நம்மைப் பற்றியும் நமது
சூழலைப் பற்றியுமான நமது புரிந்துகொள்ளலை, விழிப்புணர்வை
ஆழமாக்கிக்கொண்டே போவதுதான்.
சுய
படிமங்கள் அற்ற, சுயநலம் அற்ற, உரிமைகோரல்கள் அற்ற, அதிகார
வேட்கை அற்ற,
வசதியைக் கருத்தில் கொள்ளாத நிஜமான
விழிப்புணர்வாக, புரிந்துணர்வாக இது அமைய வேண்டும். இது இயல்பான
மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
உரையாடல்
என்னும் தரிசனம்
கிருஷ்ணமூர்த்தியைப்
போல உரையாடியவர்கள் அரிது. கேள்விகளை எதிர்கொண்டவர்களும் அரிது. ஆனால், கேள்விகளுக்குப் பதிலளிப்பது தன் வேலை அல்ல என்று அவர்
கருதுகிறார். ஆனாலும் அவரிடம் பேசுபவர்களுக்குத் தங்கள் கேள்விகளுக்கான பதில்கள்
கிடைக்கவே செய்கின்றன. இது எப்படிச் சாத்தியம்?
கேட்டவரிடமிருந்தே
பதில்கள் வருகின்றன. கிருஷ்ணமூர்த்தி கேள்விகளுக்குப் பதிலாகக் கேள்விகளையே
முன்வைப்பார். எனக்குக் கோபம் அதிகமாக வருகிறது, இதுதான் என் பிரச்சினை என்று அவரிடம் ஒருவர் வருகிறார்
என்றால், கோபம் என்பது என்ன என்று அவரைக் கேட்பார் ஜே.கே.
இது
என்ன? எங்கிருந்து வருகிறது? ஏன்
வருகிறது?
இதன் வேர்கள் என்ன? கிளைகள், விழுதுகள் என்னென்ன? விளைவுகள் என்ன? இவற்றையெல்லாம்
கிருஷ்ணமூர்த்தியும் அவரைச் சந்திக்க வருபவரும் சேர்ந்து ஆராயத் தொடங்குவார்கள்.
பதில்கள் அந்த நபரிடமிருந்து வரும். உரையாடல் தொடரத் தொடர அந்த நபர் தனக்கான
விடைகளைக் கண்டுகொள்வார். ஜே.கே-வுடனான உரையாடல் என்பது அகம் காட்டும் கண்ணாடி.
இதுதான்
கிருஷ்ணமூர்த்தியின் ஆகப் பெரிய பங்களிப்பு என்று சொல்லலாம். அவர் சொன்ன ஒரே ஒரு
சொல்லைக்கூட நீங்கள் நினைவுவைத்திருக்க வேண்டியதில்லை. அவர் சொன்ன எதையும் நீங்கள்
பின்பற்ற வேண்டியதில்லை. உங்களை நீங்களே நிர்வாணப்படுத்திக்கொண்டு உங்களைப் பற்றிய
அப்பட்டமான உண்மைகளை, பூச்சுகள் அற்ற உண்மைகளை உணரத் தலைப்பட்டீர்கள்
என்றால், அந்தப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஜே.கே-வைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று
பொருள்.
ஜே.கே-யின்
சிந்தனைகளின் மூலம் வாழ்க்கையுடன் இயல்பாக உறவாடுதல் நமக்குச் சாத்தியமாகலாம். ஒரு
மலையைப் பார்த்து ரசிக்கும்போது, அந்த மலையின் காட்சியில்
தன்னை இழப்பது ஓர் அனுபவம். அந்த மலையின் நிலவியல் பற்றியோ அதன் கடந்த காலம், எதிர்காலம் பற்றியோ யோசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த
மலைக்கும் நமக்குமான அனுபவம் நீர்த்துப்போகிறது.
இவ்வளவு
அழகான மலையைப் பார்த்து ரசிக்க மற்றவர்களுக்குத் தெரியவில்லையே என்று
நினைக்கும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மலை உங்களை விட்டு விலகுகிறது.
காலம், இடம், ஆளுமைகள், உறவுகள், சொந்தம் கொண்டாடுதல், உரிமைகோரல், அறிவு, துக்கம், அதிகாரம், படிமம், விருப்பு, வெறுப்பு, பதற்றம், மார்தட்டல் என எந்தக் குறுக்கீடும் அற்று ஒன்றும்போதுதான்
உண்மையான அனுபவம் சாத்தியமாகிறது. இந்த அனுபவம் சாத்தியமாகும் இடத்தில் மோதலுக்கோ
வன்முறைக்கோ துயரங்களுக்கோ இடமில்லை.
உலகில்
நமக்கான பாத்திரத்தை ஏற்றுச் செயல்படுவது ஒரு தளம். நடைமுறை வாழ்க்கைக்குத்
தேவையானது இது. நம் சூழலோடு இசைவிணக்கத்துடன் உறவாடுவது இன்னொரு தளம். இந்த இரு
தளங்களுக்கிடையிலும் சமநிலை காண்பதே நாம் செய்யக்கூடிய ஆகப் பெரிய சாதனை. இந்தச்
சமநிலை நிலவும் சூழலில் வன்முறைக்கும் மோதல்களுக்கும் இடம் இருக்காது. ஜே.கே-யின்
சொற் களோடு புழங்கப் புழங்க இதுபோன்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். இதை அடைவதற்கான
பார்வையை ஜே.கே-யின் சிந்தனைகளிலிருந்து பெறலாம்.
திறந்த
சிந்தனையின் வீச்சு
கிருஷ்ணமூர்த்தியின்
சிந்தனைகள் பல்வேறு நூல் களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. கல்வி, வன்முறை, சமாதானம், கடவுள், போர்கள், அறிவு எனப் பல விஷயங்களைப் பற்றியும் ஜே.கே. பேசுகிறார்.
இவை முன்கூட்டியே யோசிக்கப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடு கள் அல்ல.
அடிவாரத்திலிருந்து படிப்படியாக மலை ஏறும் அனுபவம் போன்றது. அந்தக் கணத்தில்
நிகழும் பயணம். பயணத்தினூடே உருவாகும் பாதைகள்.
மனக்
கட்டுப்பாடு,
புலனடக்கம் ஆகியவற்றை ஜே.கே. ஏற்கவில்லை.
கட்டுப்பாடு,
நீக்குதல், களைதல்
என்பவை எல்லாமே எதிர்மறையான அணுகுமுறைகள் என்கிறார் ஜே.கே. விழிப்புதான் தீர்வு
என்கிறார். அன்பு செலுத்து என்று அவர் சொல்லவில்லை. தேர்வுகள் அற்ற மெய்யான
விழிப்பு இருந்தால் அன்பு செலுத்தும் மனமும் பொறாமை அம்சங்கள் தவிர்த்த மனமும்
இயல்பாக மலரும் என்பதே ஜே.கே-யின் அணுகுமுறை.
தேர்வுகள்
அற்ற விழிப்புணர்வு, வாழ்வெனும் நீரோட்டத்தில் முடங்கிவிடாமல், மூழ்கிவிடாமல் மிதந்தபடி இருத்தல், படிமங்களின் சுமைகளிலிருந்து விடுதலை, அறிவின் சுமையிலிருந்து விடுதலை, அனுபவத்துக்கும் அனுபவிப்பவருக்கும் இடையேயான இடைவெளி
தவிர்த்தல்,
தற்கணத்தில் வாழுதல் எனப் பல சொற்றொடர்களைக்
கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளாகச் சொல்லலாம்.
இவற்றைப்
பின்பற்ற முயற்சிசெய்யலாம். பிரச்சாரம்கூடச் செய்யலாம். ஆனால், தன்னை உள்ளது உள்ளபடியே அறிதல் என்னும் முயற்சியில் ஒரு சில
எட்டுக்களேனும் எடுத்து வைக்க இயலாதவர்களுக்கு இந்தச் சொற்களால் எந்தப் பலனும்
இல்லை.
இந்த
இடத்துக்கு வந்து சேரப் பாதை இல்லை. ஜே.கே. சொல்வதுபோல, உண்மை என்பது பாதைகள் அற்ற நிலம். உண்மையான அறிதலை, விழிப்பை, விழையும் மன இயக்கம்
கொண்டவர் ஜித்து கிருஷ்ணமூர்த்தியைத் தன் சக பயணியாகக் கண்டு உணர்வார்.
நெருக்கடி
நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக
தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.