
18th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத்தை வீழ்த்தி தமிழ்நாடு முதலிடம்
- 'NIRYAT' தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2024-25ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 7,997.17 மில்லியன் டாலர்களாகப் பதிவாகி, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நெருங்க முடியாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
- கடந்த ஆட்சிக் காலத்தில் 2020-2021ம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் அபரிமிதமான எழுச்சியைக் கண்டுள்ளது.
- அரசின் சார்பாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளி மையங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளால், ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளை விட 29 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்து 7,997.17 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
- தொழில் வளர்ச்சியில் தங்களை முன்னணி மாநிலங்களாகக் காட்டிக் கொள்ளும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது சிறப்பான செயல்பாடுகளால் வெகுவாகப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
- இப்பட்டியலில், தமிழ்நாடு – 7,997.17 மில்லியன் டாலர்கள் (முதலிடம்)
- குஜராத் – 5,646.01 மில்லியன் டாலர்கள் (இரண்டாம் இடம்)
- மகாராஷ்டிரா – 3,831.28 மில்லியன் டாலர்கள் (மூன்றாம் இடம்)
- உத்தரப் பிரதேசம் – 3,679.5 மில்லியன் டாலர்கள் (நான்காம் இடம்) என உள்ளன.
- குஜராத்தை விட தமிழ்நாடு சுமார் 2,351 மில்லியன் டாலர்கள் அளவுக்குக் கூடுதலாக ஏற்றுமதி செய்து, இந்தியாவின் ஜவுளித் தலைநகரம் தமிழ்நாடுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
- பிற மாநிலங்களின் நிலையை பொறுத்தவரை மத்தியப் பிரதேசம் (1,324.97), மேற்கு வங்கம் (921.95), ராஜஸ்தான் (855.37) போன்ற மாநிலங்கள் பல மடங்கு பின்தங்கியுள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திரா (506.42), கேரளா (434.14), தெலங்கானா (111.09) ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பவானாகத் திகழ்கிறது.
- ''எளிதான தொழில் தொடங்கும் சூழல்", உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் கோடி முதலீடுகள், புதிய மினி ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் போன்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகளே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதி செய்யவும் 1,718.56 கோடி நிதியை இந்தியப் பருத்திக் கழகத்திற்கு (Cotton Corporation of India) வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பருத்தி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலமும், வலுவான கொள்முதல் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஜவுளித் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், சுமார் 1500 மெகாவாட் திறன் கொண்ட சிறிய நீர்மின் சக்தி (SHP) திட்டங்களை நிறுவுவதற்காக, ரூ. 2584.60 கோடி ஒதுக்கீட்டில், ‘2026-27 முதல் 2030-31 நிதியாண்டுகள் வரையிலான சிறிய நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டம், பல்வேறு மாநிலங்களில் சிறிய நீர்மின் திட்டங்கள் (1 முதல் 25 மெகாவாட் திறன் கொண்டவை) அமைவதற்கு ஆதரவளிக்கும்; குறிப்பாக, இத்தகைய திட்டங்களை அமைப்பதற்கான அதிக ஆற்றல் கொண்ட மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்.
- வடகிழக்கு மாநிலங்களிலும், சர்வதேச எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 3.6 கோடி அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் - இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை - மத்திய நிதி உதவியாக வழங்கப்படும்; எனினும், ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ. 30 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மற்ற மாநிலங்களில், ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 2.4 கோடி அல்லது திட்டச் செலவில் 20 சதவீதம் - இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை - வழங்கப்படும்;
- இங்கு ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ. 20 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள சிறிய நீர்மின் சக்தி ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள இது உதவும்.
- இத்தகைய திட்டங்களுக்காக ரூ. 2,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சிறிய நீர்மின் சக்தித் துறையில் சுமார் ரூ. 15,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது;
- இதன் மூலம் தூய எரிசக்தி முன்னெடுப்புக்கும், தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டை அதிகரிப்பதற்கும், குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உத்வேகம் கிடைக்கும்.
- இம்முதலீட்டின் மூலம், ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான உபகரணங்கள் 100 சதவீதம் உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படும்; இது ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும் உதவும்.
- தொழில்துறை வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், நாடு முழுவதும் 100 ‘செருகு-மற்றும்-பயன்படுத்து’ (Plug-and-Play) வகையிலான தொழில்துறை பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ. 33,660 கோடி நிதி ஒதுக்கீட்டில், ‘பாரத் ஔத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்குவதையும், உற்பத்தித் திறனை வெளிக்கொணர்வதையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட 'தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களின்' (Industrial Smart Cities) வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, 'BHAVYA' திட்டம் மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, உத்தரப்பிரதேசத்தில் பாராபங்கி முதல் பஹ்ரைச் வரையிலான (101.515 கி.மீ) தேசிய நெடுஞ்சாலை-927-ஐ, 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையாக, 'கலப்பு ஆண்டுத் தொகை முறை'யின் (HAM) கீழ் ரூ.6969.04 கோடி மதிப்பில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-927-இன் பாராபங்கி–பஹ்ரைச் வழித்தடத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணியானது,
- அப்பகுதியில் நிலவும் கடுமையான வடிவமைப்பு குறைபாடுகள், கூர்மையான வளைவுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைச் சரிசெய்யும் வகையில் அமையும்.
- தொடர்ச்சியான சேவைச் சாலைகளுடன் கூடிய, அணுகல்-கட்டுப்பாட்டு வசதி கொண்ட 4-வழி நெடுஞ்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முக்கிய குடியிருப்புப் பகுதிகளைத் தவிர்த்துச் செல்லும் வகையில் அமையும்.
- இதன் மூலம் சராசரி பயண வேகம் அதிகரிக்கும்; பயண நேரம் சுமார் ஒரு மணி நேரமாகக் குறையும்; மேலும் ஒட்டுமொத்த சாலைப் பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் வாகன இயக்கச் செலவுகள் ஆகியவை மேம்படும். இதன் வாயிலாக, அப்பகுதியின் போக்குவரத்து வசதியும், சமூக-பொருளாதார வளர்ச்சியும் மென்மேலும் வலுப்பெறும்.

