1st FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தூத்துக்குடியில் ரூ.2500 கோடி முதலீடு - ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
- தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.
- இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
- சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
- அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Jesper Kanstrup மற்றும் இயக்குநர் Albert Lorente ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
- சந்திப்பில், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது.
- இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- இது இடைக்கால பட்ஜெட் என்பதால் 56 நிமிடத்தில் அவர் உரையை முடித்து கொண்டார். இந்நிலையில் தான் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவரது 6வது பட்ஜெட்டாகும். மொத்தம் 56 நிமிடம் வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்தார்.
- இந்த சமயத்தில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி ஆனாலும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதையும் அவர் செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பில் பழைய நிலையை தொடரும் என அவர் அறிவித்தார்.
- இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியான நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மத்திய பாதுகாப்பு துறைக்கு (ராணுவம்) அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.6.2 லட்சம் கோடி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு அடுத்தப்படியாக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2.55 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.13 லட்சம் கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2.03 லட்சம் கோடியும், கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.77 லட்சம் கோடியும், மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்துக்கு ரூ.1.68 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுதவிர மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.37 லட்சம் கோடியும், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.27 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகாராக மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், 2 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மேலும் 1000 புதிய விமானங்கள் வாங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறிய அளவில் உள்ள சுற்றுலா மையங்களின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அந்த சுற்றுலா மையங்களில் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக நீண்ட கால வட்டியில்லா கடன்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலான ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாயை விட 10 சதவிகிதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும்.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் தான், ஜிஎஸ்டி வசூல் வருவாயில் அதிகபட்ச மாதாந்திர வருவாயாகும்.
- மேலும் இந்த நிதியாண்டில் ரூ. 1.70 லட்சம் கோடி அல்லது அதற்கு மேல் வசூலாவது இது மூன்றாவது முறையாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து மத்திய அரசுக்கான் ஜிஎஸ்டி ஆக ரூ. 43,552 கோடியும், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி ஆக ரூ. 37,257 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரையிலான கால கட்டத்திற்கான ஜிஎஸ்டி வர் வருவாயாக, 16 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை காட்டிலும் 11.6 சதவிகிதம் இதுவாகும்.
- முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் (ஏப்ரல் 2022-ஜனவரி 2023) ஜிஎஸ்டி வரியாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது குறிப்பிடத்தகக்து.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களின், குறிப்பாக பெரிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதன் விளைவாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இது வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஒப்புதல் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் தற்சார்பு இந்தியாவின் இலக்கை அடையவும் இது உதவும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2009 மே 1 முதல் 2015 நவம்பர் 17 வரையிலான காலத்திற்கு உரத் தொழிற்சாலைகளுக்கு வீட்டு எரிவாயு வழங்கல் மீதான சந்தைப்படுத்தல் விகிதத்தை நிர்ணயிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த ஒப்புதல் ஒரு கட்டமைப்பு சீர்திருத்தமாகும். சந்தைப்படுத்தல் விகிதம் நுகர்வோரிடமிருந்து எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் எரிவாயுவின் விலையை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
- யூரியா மற்றும் சமையல் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு எரிவாயு வழங்குவதற்கான சந்தைப்படுத்தல் விகிதத்தை அரசு முன்பு 2015-ல் நிர்ணயித்திருந்தது.
- இந்த ஒப்புதல், 01.05.2009 முதல் 17.11.2015 வரையிலான காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட உள்நாட்டு எரிவாயு மூலம் பல்வேறு உரத் தொழிற்சாலைகளுக்கு 18.11.2015 முதல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த விலையின் அடிப்படையில், விற்பனை விகிதங்களுக்கு கூடுதல் மூலதனத்தை வழங்கும்.
- தற்சார்பு இந்தியா என்ற அரசின் பார்வைக்கு ஏற்ப, இந்த ஒப்புதல் உற்பத்தியாளர்களின் முதலீட்டை அதிகரிக்க ஊக்குவிக்கும். இந்த முதலீடு உரத்துறையில் தன்னிறைவுக்கு வழிவகுக்கும். எரிவாயு உள்கட்டமைப்பு துறையில் எதிர்கால முதலீடுகளுக்கு ஒரு உறுதியான அம்சத்தை வழங்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 29,610.25 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் திட்டங்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (2025-26 வரை) தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பால்பண்ணைப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்களை பன்முகப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் விளைபொருட்களை பன்முகப்படுத்துதல், கால்நடை தீவன ஆலை, இனப்பெருக்கப் பண்ணை, கால்நடைக் கழிவுகளிலிருந்து வள மேலாண்மை (வேளாண் கழிவு மேலாண்மை) மற்றும் கால்நடை தடுப்பூசி, மருந்து உற்பத்தி வசதிகள் ஆகியவற்றுக்கான முதலீடுகளை இத்திட்டம் ஊக்குவிக்கும்.
- பட்டியலிடப்பட்ட வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், நபார்டு போன்றவற்றிடமிருந்து 90 சதவீதம் வரையிலான கடனுக்கான வட்டியை இரண்டு ஆண்டுகள் வரை ஒத்தி வைப்பது உட்பட 8 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கும்.
- தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன சட்டத்தின் 8-வது ஷரத்துப்படி உள்ள நிறுவனங்கள் இதற்கு தகுதியானவை.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன் உத்தரவாத நிதியிலிருந்து பெறப்பட்ட 750 கோடி ரூபாய் கடனில் 25 விழுக்காடு வரை மத்திய அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும்.
- இத்திட்டம், தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு தளமாக அமையும். அத்துடன் கால்நடைத் துறையில் செல்வத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானியத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தத் திட்டம் பரம ஏழை மக்களுக்கும் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்வதுடன், அவர்களின் உணவில் ஆற்றலை சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இதன் மூலம் நாட்டில் உள்ள சுமார் 1.89 கோடி அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு ஏற்கனவே பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்கி வருகிறது. 'பாரத் மைதா', 'பாரத் பருப்பு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மலிவு விலையிலும், நியாயமான விலையிலும் விற்பனை செய்வது, இந்தத் திட்டத்துக்கு அப்பால் மக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளாகும்.
- சுமார் 3 லட்சம் டன் பாரத் பருப்பு மற்றும் சுமார் 2.4 லட்சம் டன் பாரத் மைதா ஆகியவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சாதாரண நுகர்வோருக்குப் பயனளிக்கிறது.
- இவ்வாறு, மானிய விலையில் பருப்பு, கோதுமை மாவு மற்றும் சர்க்கரை கிடைப்பது 'அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் ஊட்டச்சத்து' என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றும் சாதாரண மக்களுக்கான உணவை உறுதி செய்துள்ளது.
- இந்த ஒப்புதலுடன், இதில் பங்கேற்கும் மாநிலங்களுக்கு, அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு, நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை விநியோகிக்க அரசு தொடர்ந்து மானியம் வழங்கும். சர்க்கரையை கொள்முதல் செய்து விநியோகிக்கும் பொறுப்பு மாநிலங்ளைச் சேர்ந்ததாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆடைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளுக்குத் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை 2026 மார்ச் 31-ம் தேதி வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- முன்மொழியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு திட்டத்தை தொடர்வதன் மூலம் நிலையான கொள்கை நடைமுறை உருவாகும். இது நீண்டகால வர்த்தகத் திட்டமிடலுக்கு அவசியமாகும். குறிப்பாக ஜவுளித் துறையில், நீண்ட கால விநியோகத்திற்கு முன்கூட்டியே பணி ஆணைகளை வழங்க முடியும்.
- முன்னதாக மத்திய அமைச்சரவை 31.03.2020 வரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, அதனைத் தொடர்ந்து 2024, மார்ச் 31 வரை இதனை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும். ஏற்றுமதிக்கான மாநில வரிகள் மற்றும் தீர்வைகளின் தள்ளுபடி என்பது போக்குவரத்து, சுய தேவைக்கு மின்சாரம், பண்ணைத் துறை, ஏற்றுமதி ஆவணங்கள் மீதான முத்திரை வரி, கச்சா பருத்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற உள்ளீடுகளுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி, பதிவு செய்யப்படாத விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல், போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.