நாக்பூர் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்
- மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சம்ருத்தி விரைவுசாலையை தொடங்கி வைத்ததுடன் 10 கி.மீ. தொலைவுக்கு மோடி காரில் பயணம் மேற்கொண்டார்.
- இந்த விரைவுசாலைக்கு 'பாலாசாகேப் தாக்கரே மராட்டிய சம்ருத்தி மகாமார்க்' என பெயரிடப்பட்டுள்ளது. 701 கி.மீ. தொலைவிலான இந்த சாலையில் முதல் கட்டமாக 520 கி.மீ. தொலைவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மராட்டிய ஆளுநர் பகத் சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் நல வாழ்வு திட்டம் - நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை
- அனைத்து மக்களுக்கும் தரமான, இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டது 'அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்' ஆண்டுதோறும் டிச.12-ம் தேதி (இன்று) அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டில், 'நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்' என்ற மையக் கருத்துடன் இதற்கான விழா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2 நாட்களாக (டிச.10, 11)கொண்டாடப்பட்டது.
- மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்தநிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.
- தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் கடந்த அக்.12-ம்தேதி முதல் டிச.8-ம் தேதி வரை 22.59 லட்சம் பேருக்கு தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- அந்த வகையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தை தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஸ்டாலின்
- உத்தர பிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இல்லத்தையும், பாரதியாரின் மார்பளவு சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
- மேலும், பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.
- மேலும், அந்த நினைவு இல்லத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள், வாழ்க்கை குறிப்பு, அவரது படைப்புகளுடன் சிறு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் 'லேண்டர்' கருவி நிலவுக்கு ஏவப்பட்டது
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, 'ஐ ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 'ரோவர்' கருவியை தயாரித்துள்ளது.
- இந்த இரு கருவிகளும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக, அமெரிக்காவின் கேப் கனாவரெல் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன.
- எரிபொருள் சிக்கனம் கருதி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேண்டர் கருவி, பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., துாரம் சென்று நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.
- சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் சோதனை விண்கலம் ஐந்து நாட்களில் நிலவை அடைந்தது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய அரபு எமிரேட்சின் ரோவர் கருவிக்கு, துபாய் அரச குடும்பத்தின் பெயரான ரஷீத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- 10 கிலோ எடையுள்ள இந்த ரோவர் கருவி நிலவில் இறங்கி, 10 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தேசிய ஸ்குவாஷ் - ஜோஷ்னா 'சாம்பியன்'
- சென்னையில், 78வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா 36, டில்லியை சேர்ந்த அனாஹத் சிங் 14, மோதினர்.
- அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11-8, 11-9, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 19வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் அபய் சிங், வேலவன் செந்தில்குமார் மோதினர். முதல் செட்டை வேலவன் 13-11 எனக் கைப்பற்றினார்.
- பின் எழுச்சி கண்ட அபய் சிங், அடுத்த மூன்று செட்களை 11-7, 11-6, 11-4 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அபய் சிங் 3-1 (11-13, 11-7, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய பட்டம் வென்றார்.
39-வது இந்தியா - இந்தோனேஷியா ஒருங்கிணைந்த ரோந்து பணி
- 39-வது இந்தியா - இந்தோனேஷியா கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
- இந்தோனேஷியாவின் பெலாவன் நகரில் 2022 டிசம்பர் 8ம் தேதி தொடங்கிய இந்த ரோந்து பணி வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- சர்வதேச கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில், கார்பட் எனப்படும் இந்தக் ஒருங்கிணைந்த ரோந்து நடைபெறுகிறது.
- இதில், இந்தியா சார்பில், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கர்முக், தரையிரங்கும் பயன்பாட்டுக் கப்பல் எல்-58 உடள்ளிட்டவை ஈடுபடுத்தப்படுகின்றன.
- இந்தோனேஷியா சார்பில் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
- இந்த ரோந்து பணி, கடல்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாதம், ஊடுருவல், போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதில் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிதலை ஏற்படுத்தும். மேலும், கடற்கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கவும், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றைத் தடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்
- நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமாடலையும், மைல்ஸ்டோன் கண்காட்சி கேலரியையும் அவர் பார்வையிட்டார்.
- நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை தேசத்திற்கு அர்ப்பணித்ததன் மூலம், நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பலப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாடு செயல்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.
- பிரதமரின் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனாவின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவனைக்கு, கடந்த 2017ம் ஆண்டு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- ரூ.1,575 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவத்தின் 30 துறைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும். இதில், OPD, IPD கண்டறியும் சேவைகள், அறுவைசிகிச்சைக்கான தியேட்டர்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
- அதி நவீன மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய இந்த மருத்துவமனை, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த மக்களும், அதனை ஒட்டி அமைந்துள்ள பழங்குடி பகுதிகளான கட்சிரோலி, காண்டியா மற்றும் மெல்காட் மக்களும் தரமான சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும்.
- இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.