காரைக்குடி அழகப்பா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
- காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜேந்திரனின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி நிறைவடைந்தது.
- இந்நிலையில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, காரைக்குடி அழகப்பா பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்க யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தலைமையில் புதிய தேடுதல் குழுவை அமைத்தார்.
- அந்தக் குழு பரிந்துரைத்த 3 பேரில் ஜி.ரவியை அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பிச்சுமணியின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது.
- புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை பணியில் தொடர அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது தேடுதல் குழுவின் பரிந்துரையின்படி புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிறுவன தோட்டக்கலைத் துறை தலைவராக உள்ள டி.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
- சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 28 முதல் ஆக.9 வரை நடந்தது. இந்நிலையில், பிரதமரை சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், சென்றார்.
- இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய 'ஹோம் ஆஃப் செஸ்' என்ற நூலையும், தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பெட்டகத்தையும் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் பரிசளித்தார்.
- அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த முதல்வர், அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
- அதைத் தொடர்ந்து மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மாலை 4.30 வரை நீடித்தது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்ததற்காகவும், விருந்தோம்பல் குறித்து பாராட்டியதற்கும் பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். பின்னர், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.
- குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவது, ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது, புதிய கல்விக் கொள்கை, தமிழகத்துக்கு துறைகள் வாரியாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள், இலங்கை கடற்படையால் தமிழக மீனர்கள் சிறைபிடிக்கப்படுவது, நதிநீர் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த சந்திப்பின் போது, பிரதமருக் கும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூல் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
உலகளவிலான காற்று மாசு தலைநகர் டெல்லி முதலிடம்
- அமெரிக்காவைச் சேர்ந்த, 'சுகாதார பாதிப்பு அமைப்பு' என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலகளவில் 7,239 நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, நைட்ரஜன் டை ஆக்சைடு மாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
- அதிக தீங்கு விளைவிக்கும் மோசமான காற்று மாசுவால் (பிஎம்2.5) உலகளவில் 7,239 நகரங்களில் 17 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு, மத்திய ஐரோப்பாவில் உள்ள நகரங்கள் பெரியளவில் பாதித்துள்ளன.
- 2010-2019ம் ஆண்டு வரையில் பிஎம் 2.5 மாசு அதிகரித்துள்ள 20 நகரங்களில் 18, இந்தியாவில் உள்ளன. மற்ற 2 நகரங்கள் இந்தோனேசியாவில் உள்ளன.
- பிஎம் 2.5 மாசு பாதிப்பு மிகக் கடுமையான அதிகரித்துள்ள 50 நகரங்களில் 41, இந்தியாவில் உள்ளன. 9 நகரங்கள் இந்தோனேசியாவில் உள்ளன.
- இதே காலக்கட்டத்தில் இந்த மாசு மிகவும் குறைந்துள்ள 20 நகரங்கள் அனைத்தும் சீனாவில் உள்ளன. நைட்ரஜன் டை ஆக்சைடு பாதிப்பில் சீனாவின் ஷாங்காய் முதலிடமும், ரஷ்யாவின் மாஸ்கோ 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிஎம் 2.5 அளவு காற்று மாசு நுண்ணிய துகள்களை கொண்டது. சுவாசத்தின் மூலம் இவை சுவாசக் குழாய், நுரையீரலில் ஊடுருவி அழற்சியை உண்டாக்குகின்றன. இது இருதய, சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரை பறிக்கிறது. இந்த துகள்களால் டெல்லியில் 2019ம் ஆண்டில் லட்சம் பேரில் 106 பேர் இறந்துள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கிய 9 நெல், தானியங்களின் சிறப்பு அம்சம்
- குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தமிழகத்தின் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி ரகங்கள் இடம் பெற்ற பெட்டகத்தை நினைவுப் பரிசாக முதல்வர் வழங்கினார்.
- அந்த பரிசுப் பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார், சீரகசம்பா, குடவாழை ஆகிய பாரம்பரிய அரிசி ரகங்கள், கேழ்வரகு, கம்பு, சாமை, திணை, வரகு ஆகிய சிறுதானியங்கள் இடம் பெற்றிருந்தன.
- பெட்டியின் மேல் 'கோல்டன் கிரைன்ஸ் ஆஃப் தமிழ்நாடு' என்று ஆங்கிலத்திலும் மிழ்நாட்டின் தானியங்கள் என்று தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.
- ஓடி ஓயாது உழைக்கும் விளிம்பு நிலை மனிதனின் வயிற்று பசியையும், மரத்தின் விளிம்பில் நின்று கொண்டு காடு வளர்க்கும் பணி செய்யும் பறவையின் பசியையும் ஆற்றிய நிலம், 100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும், பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம்.
- மாப்பிள்ளை சம்பா - சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடன்ட் தன்மையை கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.
- குள்ளக்கார் - பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.
- கருப்புக்கவுனி - நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றை தடுக்கும் கருப்பு அரிசி.
- சீரக சம்பா - பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.
- குடவாழை - தோலுக்கு பொலிவு அளிக்கும் மரபு சிகப்பு அரிசி இது.
- கம்பு - அருந்தானியங்களின் அரசன் இவன். அரிசியைவிட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிக்கான லோ கிளைசிமிக் அரிசி.
- வரகு - தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பி கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.
- சாமை - பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.
- தினை - கண்ணுக்கும் குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.
- கேழ்வரகு - இரும்பும் கால்சியமும் நிறைந்த, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு.
பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலக தரவுகளை அனைவரும் பயன்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பயனாளிகள் பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் தரவுத்தளத்தை விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- புதிய கல்விக் கொள்கை 2020ன் கீழ், பாரதிய ஞானப் பரம்பரை மூலம் சிந்தனை மற்றும் தலைமை அறிவுத்திறனை புகுத்துவதற்கு பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் நோக்கமாக உள்ளது.
- இந்திய பாரம்பரிய அறிவு தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சேவை செய்வதற்கான மகத்தான ஆற்றலை அளிக்கிறது. இதன் மூலம் சமூக நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வழங்குகிறது.
- உதாரணமாக, நம் நாட்டில் இருந்து பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம். சித்தா, யுனானி மற்றும் ஆரோக்கியத்திற்கான சோவ ரிக்பா, யோகா ஆகியவை இன்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளுக்கு சேவை செய்கின்றன.
- கொவிட்- 19 பாதிப்பின் போது, இந்திய பாரம்பரிய மருந்துகளின் நன்மைகளை காண முடிந்தது. நோய் எதிர்ப்பு, நிவாரணம், வைரஸ் எதிர்ப்பு ஆகிய பயன்களை இந்த மருத்துவ முறையில் உணர முடிந்தது.
இந்திய போக்குவரத்து துறையில் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலையிலான மத்திய அமைச்சரவை இந்திய போக்குவரத்து துறையில் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம், 6,ஜூலை, 2022 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய அறிவியல் முடிவுகள், புதிய நுண்ணறிவு கொள்கை, விஞ்ஞான தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன்களை மேற்கொள்ள முடியும்.
அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்ட கடனுதவிக்கான நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
- கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அவசர கால கடனுதவி திட்டம் 31.3.2023 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மூன்று லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- விவசாயிகளுக்கு 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரை 3 லட்சம் ரூபாய் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதிநிலையையும் சாத்தியத் தன்மையையும், உறுதி செய்யும். குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதால், வேலைவாய்ப்பு உருவாகவும் வழிவகுக்கும்.
- உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4% வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.