தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு' அறிமுகம், உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்
- உப்பளத் தொழில் பருவகால தொழில் என்பதால், உப்பளத் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் 9 மாதங்கள் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். மழைக் காலத்தில் போதிய மாற்றுப் பணிகள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
- இந்நிலையில், மழைக் காலங்களில் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்களுக்காக உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
- பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு, இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டம் மூலம் மலிவு விலையிலும், மதிய உணவு திட்டத்துக்கும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
- அதன்படி, 'நெய்தல் உப்பு' என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச்சந்தை விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிறந்த புலன் விசாரணைக்கான விருது 2022
- மத்திய உள்துறை அமைச்சக்கம் இன்று (ஆக. 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் சிறந்த புலன் விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதில், சிபிஐ அதிகாரிகள் 15 பேர், மகாராஷ்டிரா காவலர்கள் 11 பேர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச காவலர்கள் தலா 10 பேர், கேளரா, ராஜஸ்தான், மேற்கு வங்க காவலர்கள் தலா 8 பேர், பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவலர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இதில் 28 மகளிர் காவலர்களும் அடக்கம்.
- இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த நான்கு பெண்கள் உள்பட 5 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வராஜன் ஆகியோர் மத்திய உள்துறையின் சிறந்த புலன் விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதை பெறுகின்றனர்.
தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு
- சுதந்திர தின விழாவையொட்டி வருடம் தோறும் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சிறப்பாக பணியாற்றிவர்களுக்கும் அவர்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்ய ஆய்வு செய்தனர்.
- இதில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதியாக ரூ.25 லட்சத்தை சேலம் மாநகராட்சிக்கு வழங்குகிறார்.
- இதேபோல், நடப்பாண்டு சிறந்த நகராட்சிக்கான முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.15 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.
- கடந்த வருடம் அதாவது 2021ம் ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக தஞ்சை தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சி பட்டியலில் ஊட்டிக்கு முதலிடம் கிடைத்தது. திருச்செங்கோடு மற்றும் சின்னமனூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தது.
அகஸ்திய மலையில் யானைகள் சரணாலயம் - மத்திய வனத்துறை அமைச்சர் அறிவிப்பு
- ''தமிழகத்தில் அகஸ்திய மலையில் புதிய யானைகள் சரணாலயம் அமைக்கப்படும்,'' என, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.
- தேக்கடியில் நடந்த சர்வதேச யானைகள் தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றி, 1 கி.மீ., இடைவெளியில் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய அரசும், அமைச்சகமும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்.
- யானைகள், மனிதர்களுக்கு இடையேயான மோதலை கட்டுப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய கவனம். யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, நிவாரணத் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
- போலி பத்திரப்பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், புகார் அளித்ததால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட பதிவு செய்யப்படுகிறது.
- இவ்வாறு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் போது, ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவு பணியின் போது, மூலபத்திரங்களை கேட்டு ஆய்வு செய்வதில்லை. அதேபோன்று அந்த சொத்துக்கான வில்லங்கமும் பார்க்காமல், பத்திரம் பதிவு செய்கின்றனர்.
- இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரிஜினல் உரிமையாளர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
- ஏற்கனவே, இது போன்ற வழக்குகள் ஏராளமானவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், போலி ஆவண பதிவு விவகாரத்தில் உடனடியாக தீர்ப்பு கிடைப்பதில்லை. இதனால், ஒரிஜினல் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை பயன்படுத்த முடியாத நிலையில், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை தான் உள்ளது.
- இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களுக்கு வழங்கும் அதிகாரம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
- இந்த சட்டமசோதாவின் படி, போலி பத்திரப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யலாம். இதனால், யாருக்காவது இடர்பாடு ஏற்பட்டால் ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அவர் ஐஜியிடம் முறையீடலாம்.
- அதன்பிறகு செயலாளர் வரை முறையிடலாம். போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் சட்டத்திருத்ததில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஒன்றிய அரசின் சட்டத்துறைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
- இதையடுத்து ஒன்றிய அரசின் சட்டத்துறை செயலாளருக்கு தமிழக அரசின் சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதியது. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அதிகாரிகளும் ஒன்றிய அரசின் சட்டத்துறை அதிகாரிகளுடன் பேசி வந்தனர்.
- அதன்படி ஒன்றிய அரசின் சட்டத்துறை இந்த மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- இந்நிலையில் தற்போது மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
- இதன்படி சட்டதிருத்த மசோதா அமலுக்கு வருகிறது. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் சட்ட விரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்த நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சொத்துகளை உரியவர்களுக்கு பெற்று தர முடியும்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழு கூட்டம்
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
- இக்கூட்டத்தில், குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.