ஜப்பானின் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை
- ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை.
- எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் மர்மநபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2 லட்சம் 'இல்லம் தேடி கல்வி மையம்' துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் திறக்கப்படாத காலத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதித்ததோடு, கற்றல் இடைவெளி ஏற்பட்டது.
- இதை சரி செய்ய, தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' திட்டம், 2021 அக்டோபரில் துவக்கப்பட்டது. அதன் இரண்டு லட்சமாவது மையத்தை, திருவண்ணாமலை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான காணொலி யையும், புகைப்பட விளக்க புத்தகத்தையும் வெளியிட்டார். கடந்த ஜூன் 1 முதல் 12 வரை, இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 'ரீடிங் மாரத்தான்' என்ற தொடர் வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.
- திருச்சி லால்குடி வட்டாரம் முதலிடம், மதுரை அலங்காநல்லுார் வட்டாரம் இரண்டாம் இடம், மதுரை மேலுார் மூன்றாம் இடம் பிடித்தது. மேலும், சிறந்த தன்னார்வலர்களுக்கான தேர்வில், மதுரை மாவட்டம், சிறந்த மாணவர்களுக்கான தேர்வில், திருப்பத்துார் மாவட்டமும் வென்றது.