ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி
- முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ அதிகாரிகள் செய்திருந்தனர். தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
டைமெண்ட் லீக் தொடரின் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா
- தடகள உலகில் மிகவும் மதிப்பு மிக்க தொடர்களில் ஒன்று டைமெண்ட் லீக் தொடர். இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.
- இதில் ஈட்டி ஏறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பில் 89.94 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனையை படைத்தார்.
- அத்துடன் தனது முந்தைய தேசிய சாதனையான 89.30 மீட்டர் தூரத்தை அவரே முறியடித்தார்.
- இதன்மூலம் இந்த லீக் சுற்று போட்டியில் 89.94 என்ற சிறந்த தூரத்தை பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்தார். உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றார்.
ஹாங்காங் அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு
- பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது.
- இதற்காக நிர்வாக தலைவர் சீனா அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹாங்காங், அரசு நிர்வாகத்தின் தலைவராக ஜான் லீ நியமிக்கப்பட்டார்.
- இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஹாங்காங் இணைந்ததன் 25 வது ஆண்டுவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
- முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் 25,600 கோடி ரூபாய் முதலீடு செய்திடவும், 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
- சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்திப் பொருள் விநியோகஸ்தர்கள், உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகிய திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும்.
- இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25,000 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனம், ப்ராஜெக்ட் சூரியா என்ற பெயரில் செமிகண்டக்டர் புனையமைப்பு திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.
- இதற்காக, இந்தியாவில் செமிகண்டக்டர் புனையமைப்பு திட்டங்களை அமைப்பதற்கான ஒன்றிய அரசின் \\'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்\\' திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்துள்ளது.
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரி ராஜன் நியமனம்
- ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரியும், உளவுத்துறையின் சிறப்பு இயக்குனருமான ஏ.எஸ்.ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஏ.எஸ்.ராஜன். இவர், பீகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். இருபது ஆண்டுகள் மத்திய உளவு பிரிவில் பணியாற்றினார். பீகாரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ராஜன் 1999ல் உளவுப்பிரிவில் சேர்ந்தார்.
- மத்திய உளவுத்துறையில் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் பணியாற்றினார். லண்டனில் உள்ள இந்திய தூதகரத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றியுள்ளார்.
- தற்போது ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு - தமிழக அரசு
- தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த அமைப்பில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மைப்பு, அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும்.
ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 1.44 லட்சம் கோடி
- கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வசூலான ரூ.92,800 கோடியை விட 56 சதவீதம் அதிகம் ஆகும்.ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும்.
- கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
- ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூலான ரூ.1,44,616 கோடியில், சிஜிஎஸ்டி ரூ.23,306 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40,102 கோடி உட்பட) செஸ் ரூ.11,018 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,197 கோடி உட்பட) அடங்கும்.
- ஜூன் மாத வசூலானது, கடந்த ஏப்., மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து மிகப்பெரிய தொகையாகும். கடந்த மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
முதல்வர் தொடங்கி வைத்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்
- சென்னை, நொச்சிக்குப்பத்தில், 'காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025' என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக, காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் காசநோய் உள்ளதா என்பதை கண்டறிய, முதல் கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- தற்போது இரண்டாம் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு தலா 46 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
- இவ்வாகனம் ஏழை எளிய மக்களைத் தேடிச் சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப் பகுதிகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும்.
- காசநோய் உள்ளவர்களை கண்டறிய, அவர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும்.
- காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
- நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
- ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு காசநோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
- காசநோயாளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். காசநோய் நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம், தினை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது.
- காசநோயாளிகள் முழுமையாக குணமடைய அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து உள்ள பொருட்களை வழங்கி, உறுதுணையாக இருந்த 100 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பாராட்டும் விதமாக தமிழக முதல்வர், 10 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதோடு மூன்று காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.
- காசநோய் இல்லா தமிழகம்-2025 என்னும் இலக்கின்படி, 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 217 காசநோயளிகள் என்று இருந்த விகிதத்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 44 காசநோயாளிகளாக குறைக்க வேண்டும்.
- சிறப்பாக செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 40 விழுக்காடு குறைத்ததற்காக நீலகிரி மாவட்டத்திற்கும், 20 விழுக்காடு குறைத்ததற்காக திருவண்ணாமலை, கரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் காசநோய் துணை இயக்குநர்கள், என மொத்தம் 8 காசநோய் துணை இயக்குநர்களுக்கு தமிழக முதல்வர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.