உலக தடகளப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை
- 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
- ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
- கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரத்துக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
- இந்நிலையில், நேற்று காலை நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 88.13 மீட்டர் தூரம்ஈட்டி எறிந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- இதே பிரிவில் கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து,சாதனை படைத்தார். செக். குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலத்தை வசப்படுத்தினார்.
- உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா ஒருமுறை மட்டுமே பதக்கம் வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம்வென்றிருந்தார்.
- அதன்பிறகு, இதுவரை எந்த இந்தியருமே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லவில்லை. அந்த ஏக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்த்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா.
- தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
இரண்டாவது ஆய்வு கூடம் வெற்றிகரமாக ஏவியது சீனா
- அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. சீனா தனித்து, 'டியாங்காங்' என்ற சர்வதேச ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.
- இதன் பிரதான ஆய்வுக் கூடம், 'டியான்ஹி' என்றும், கூடுதலான இரண்டு துணை ஆய்வுக்கூடங்கள், 'வென்ஷியான்' மற்றும் 'மெங்ஷியான்' என்றும் அழைக்கப்படுகின்றன
- .இதில், 'டியான்ஹி' ஆய்வுக்கூடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு மையத்தில் நிலைநிறுத்தப்பட்டது. 'மெங்ஷியான்' துணை ஆய்வுக்கூடம், அக்டோபரில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- இந்நிலையில், 'வென்ஷியான்' துணை ஆய்வுக்கூடம் விண்ணில் ஏவப்பட்டது.சீனாவின் ஹாய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்3' ராக்கெட் வாயிலாக இந்த ஆய்வுக்கூடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- இது வெற்றிகரமாக ஆய்வு மையத்தில் நிலை நிறுத்தப்பட்ட உடன், மையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், ஆய்வுக்கூடத்தை பரிசோதிப்பர் எனக்கூறப்படுகிறது.
- சீனாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலைய பணிகள், இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.