உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 64 ஆண்டுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி
- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தாரில் நடைபெற உள்ளது.
- இந்தத் தொடருக்கான தகுதி சுற்றின் பிளே ஆஃப் ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் - உக்ரைன் அணிகள் நேற்று முன்தினம் வேல்ஸில் உள்ள கார்டிப் நகரில் மோதின.
- வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. உக்ரைன் அணி கடைசி வரை போராடிய போதிலும் கோல் அடிக்க முடியாமல் போனது.
- முடிவில் வேல்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசியாக 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது. தற்போது 64 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.
பெங்களூருவில் நாட்டின் முதல் ஏசி ரயில் முனையம் தொடக்கம்
- ரூ.314 கோடி செலவில் சர்வதேச விமான நிலைய தரத்தில் நாட்டிலேயே முதல் முறையாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட (ஏசி வசதி கொண்ட) ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
- 4,200 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தின் அனைத்து பணிகளும் கடந்த 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது.
- இந்நிலையில், ஜூன் 6 முதல் இந்த ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து நேற்று மாலை 7 மணிக்கு பெங்களூரு பானஸ்வாடியில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலை தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணும் வகையில் நாணயங்கள் வெளியீடு
- நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் 'ஐகானிக் வாரம்' கொண்டாட்ட நிகழ்ச்சி டெல்லியின் விக்யான் பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- குறிப்பாக பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நாணயங்களின் தொகுப்பை பிரதமர் வெளியிட்டார்.
- இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நாணயங்களை பிரதமர் வெளியிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து! முதலிடத்தில் தமிழ்நாடு
- மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நிகழ்ந்த முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
- அதேநேரம், முந்தைய 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளை விட 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 17,633 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் அது 15,269ஆக குறைந்துள்ளது.
- அதேபோல, விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு குறைந்திருக்கின்றன. வாகனங்களில் பழுது, பழைய வாகனங்களை இயக்குவது, வாகனங்களில் அதிக சுமையை ஏற்றிச் செல்வது, ஓட்டுநரின் அஜாக்கிரதை போன்றைவே விபத்துக்கள் நிகழ காரணமாக கூறப்படுகின்றன.
- அதேநேரம், மத்திய அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் படி, 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த 1,19,693 விபத்துக்களில், 41,537 வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவான வாகனங்கள் தான் அதிக விபத்துகளுக்கு ஆளானதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.76,390 கோடி மதிப்பில் இந்தியாவில் தயாரித்த தளவாடங்கள் வாங்க ஒப்புதல்
- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.76,390 கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மத்திய அரசின் சுயசார்பு கொள்கையின்படி (ஆத்ம நிர்பார் பாரத்) முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவத்துக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை வாங்க ஆய்வு செய்யப்பட்டது.
- மலைப் பகுதிகளிலும் செயல்படும் போர்க் லிப்ட், பாலம் கட்டும் டேங்குகள், சக்கரங்கள் கொண்ட போர்க்கருவி வாகனங்கள், பீரங்கி அழிப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை அனைத்தும் இந்திய ராணுவத்துக்கென பிரத்யேகமாக உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் தயாரிக்கப்பட்டவை.
- பாதுகாப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக, டிஜிட்டல் கடலோர காவல் திட்டம் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்
- சீனா தலைமையில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார்.
- இக்கூட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பு அறிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
- இக்கூட்டத்தில் பேசிய திருமதி நிர்மலா சீத்தாராமன், அனுபவங்கள் குறித்து உரையாடுதல், பரிமாறிக்கொள்ளுதல், நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை தெரிவித்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
- இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு குறித்து பேசிய நிதியமைச்சர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும் முதலீடும் தொடர்ந்து உதவி புரியும் என்று தெரிவித்தார்.