ராஜ்யசபா தேர்தல் - 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு
- நாடு முழுவதும் 15 மாநிலங்களிலிருந்து இருந்து காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்திலிருந்து 11 பேரும் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் பீகாரில் இருந்து 5 பேரும், ஆந்திராவிலிருந்து 4 பேரும், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும், சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து தலா 2 பேரும் உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து ஒருவரும் போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
- இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 11 பேரும் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
- அவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப சிதம்பரம், ராஜீவ் சுக்லா, பாஜகவை சேர்ந்த சுமித்ரா வால்மீகி, கவிதா படிதர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மிசா பாரதி, ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
- தமிழகத்தில் காலியாகும் ஆறு இடங்களையும் சேர்த்து மொத்தம் 57 இடங்களுக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
- அதே நேரத்தில் திமுக, அதிமுக. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்
உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் பதவியேற்பு
- 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வந்த சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சத்திக்குமார், சுகுமார குரூப், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ் செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- முதல்கட்டமாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் ஏற்கெனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் சுந்தர்மோகன் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோரை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
- இவர்களுக்கு விரைவில் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75 என்ற நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 17-ஆக உள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரு வெள்ளி பதக்கம்
- அஜர்பைஜானின் பாகு நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில், டென்மார்க்கின் ரிக்கே இப்சனுடன் விளையாடினார். இதில் அஞ்சும் மவுத்கில் 12-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணிகள் பிரிவில் ஸ்வப்னில் குசலே, தீபக்குமார், கோல்டி குர்ஜார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 7-17 என்ற கணக்கில் குரோஷியா அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் தங்க சாலை மேம்பாலப் பூங்கா அருகில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' என்ற தீவிர தூய்மைப் பணி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் மாணவ, மாணவிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
- இதையடுத்து, பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்க சாலை மேம்பாலத்தின்கீழ் உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு, நகர்ப்புற அடர்வனம் அமைக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பி.எப். வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைப்பு
- கடந்த மார்ச் மாதம் வருங்கால வைப்பு நிதியின் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும், மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், 2021 - 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.
- முந்தைய ஆண்டு, 8.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 - 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 1977 - 1978ம் ஆண்டில் தான் மிகவும் குறைவாக, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதற்கு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குறைவான வட்டி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.
துருக்கி நாட்டின் பெயர் மாற்றம் - ஐ.நா ஒப்புதல்
- துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசாங்கத்தால் முடிவெடுக்கபட்டுள்ளது.
- அதனால் துருக்கி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை விடுத்தது. இதன் காரணம் உலக அளவில் துருக்கி நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கவே துருக்கியே என மாற்ற அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.
- இதுகுறித்த ஒப்புதலுக்காக துருக்கி காத்திருந்த நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை துருக்கி என்ற நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
- இ-சஞ்சீவனி திட்டத்தை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
- இந்த ஒருங்கிணைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனியை தற்போது பயன்படுத்தி வருவோர், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை எளிதில் உருவாக்கி அதனை பயன்படுத்தவும், ஏற்கனவே பெறப்பட்ட சிகிச்சைக்கான பரிந்துரைகள், பரிசோதனை விவரங்களை தொடர்ந்து பராமரிக்க வகை செய்கிறது.
- பயனாளர்கள் தங்களது சுகாதார ஆவணங்களை இ- சஞ்சீவனி திட்ட மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவதால், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்கிறது.