மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ராஜினாமா
- மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
- முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கூட்டணி அரசு கடந்த இரண்டரை வருடமாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ந்தேதி சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் பலர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
- சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணிதிரண்டு உள்ளனர். இவர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் ஆளுநரின் உத்தரவின் படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தது.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது ராஜினாமாவை கடிதத்தை வெளியிட்டார்.
- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்ததுடன் தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி வைத்தார். ஆளுநரும் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பற்றிய கியூ.எஸ்., தரவரிசை பட்டியல்
- ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கியூ.எஸ்., எனப்படும் குவாக்குவாரளி சைமண்ட்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு செய்து, சிறந்த பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- இந்த ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை, கியூ.எஸ்., வெளியிட்டுள்ளது. மொத்தம் 140 நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில், இந்தியாவின் நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, 103வது இடத்தையும், கர்நாடக தலைநகர் பெங்களூரு, 114வது இடத்தையும், சென்னை, 125வது இடத்தையும், புதுடில்லி, 129வது இடத்தையும் பிடித்துள்ளன.
- கடந்த ஆண்டு மும்பை, பெங்களூரு நகரங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன. இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பிரிட்டன் தலைநகர் லண்டன் பிடித்துள்ளது.
- இரண்டாவது இடத்தை தென் கொரியா தலைநகர் சியோல் பிடித்துள்ளது. இந்தியாவில் 2018 - 19ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 427 மாணவர்கள் தான், உயர் கல்வி படிக்கின்றனர்.
- இதை, 2023ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்
- கடந்த இரண்டு நாட்களாக, சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- குறிப்பாக, ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டும் வகையில் வழங்கப்படும் இழப்பீட்டை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 47வது கூட்டத்தின் முடிவின் படி, சில பொருட்களுக்கான வரி, ஜூலை 18ம் தேதி முதல் அதிகரிக்கிறது.
- பிராண்டு அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள், 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
- இதுவரை இவற்றுக்கு வரி இல்லாமல் இருந்தது. இதையடுத்து லஸி, மோர், தயிர், கோதுமை மாவு, தேன், அப்பளம், பருப்புகள், பதப்படுத்தப்படாத இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பலவற்றின் விலை அதிகரிக்கும்
- ஓர் இரவுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கட்டணம் கொண்ட ஹோட்டல் அறைகள் மற்றும் தினசரி ஐந்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் கொண்ட மருத்துவமனை அறைகள் ஆகியவற்றுக்கு, 12 சதவீத வரி விதிக்கப்படும்.
- சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல் ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
- எல்.இ.டி., விளக்குகள், கத்தி பேனா, மை, பிளேடு போன்றவற்றுக்கு வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது
- மோட்டார் பம்பு, பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரியும் 18 சதவீதமாக அதிகரிதுள்ளது.
- இ- - வேஸ்ட் எனும் மின்னணு பொருள் குப்பைக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்கிறது.
ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வான முதல் தமிழ் நடிகர் சூர்யா
- அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோரை தேர்வு செய்து விருது வழங்குகிறது.
- இந்த அமைப்பு, அமெரிக்கா நீங்கலாக, 53 நாடுகளில், திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவையாற்றி வரும் 397 கலைஞர்களை, ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளது.
- ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சூர்யா, ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வான முதல் தமிழ் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார்.
- ஹிந்தி, தமிழ் படங்களில் நடித்த கஜோல், இந்தாண்டு சிறந்த ஆவணப் படமாக தேர்வாகி ஆஸ்கர் வென்ற ரைட்டிங் வித் பயர் படத்தின் இயக்குனர்கள் கோஷ், தாமஸ், சம்சாரா என்ற திபெத்திய படத்தின் இயக்குனர் நலின் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக உள்ளனர்.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
- தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்தக் கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உட்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபியாஸ் என்ற அதிவேக விமான வாகன சோதனை வெற்றி
- டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் '' அபியாஸ்'' என்ற அதிவேக விமான வாகனத்தை வடிவமைத்துள்ளது.
- முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
- இதன் சோதனை ஜூன் 29 ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து (ஐடிஆர்) வானில் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கியது.
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
- இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் பி எஸ் ராஜூ, பாதுகாப்பு கணக்குத்துறையின் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு ரஜ்னீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருநாள் மாநாட்டில் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்கு துறையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அக்னிபாத் திட்டத்தை குறித்த நேரத்தில் அமல்படுத்துவது மற்றும் அக்னி வீரர்களுக்கான சம்பளம் மற்றும் படி குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை கட்டுப்பாடின்றி விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனையை கட்டுப்பாடின்றி மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி செயல்பாட்டாளர்களுக்கு சந்தைப்படுத்தல் சுதந்திரத்தை அமைச்சரவையின் இந்த முடிவு உறுதி செய்யும்.
- உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களில் கச்சா எண்ணெயை அரசு அல்லது அதன் நியமனம் அல்லது அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான நிபந்தனை ரத்து செய்யப்படும்.
- அனைத்து நிறுவனங்களும் இப்போது தங்கள் நிலங்களில் இருந்து உள்நாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனையை மேற்கொள்ள முடியும்.
- உரிமம், வரி போன்ற அரசு வருவாய்கள் அனைத்து ஒப்பந்தங்களிலும் ஒரே மாதிரியான அடிப்படையில் தொடர்ந்து கணக்கிடப்படும். ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படாது.
- இந்த முடிவு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும். வர்த்தகத்தை எளிமையாக்குவதற்கும், வெளிப்படை தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் இம்முடிவு வகைசெய்யும்.
பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து 31 நாடுகள், 6 சர்வதேச அமைப்புகள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் இந்த CDRI-யில் உறுப்பினராக இணைந்துள்ளன.
- பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளை உறுப்பினராக சேர தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் CDRI தனது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இடையேயான நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த உடன்படிக்கை ஜனவரி 2022-ல் கையெழுத்தானது.
- இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த பசுமை எரிசக்தி மாற்றம் குறித்த லட்சியம், தலைமைப்பண்பு மற்றும் அறிவாற்றலுக்கு வழிவகுப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கம்.
- இந்த உடன்படிக்கை, இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உதவுவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் உலகிற்கு உதவிகரமாக இருக்கும்.
- இந்த உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், 2030-க்குள் இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிமம் - அல்லாத எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பது என்ற குறிக்கோளை அடைய உதவிகரமாக இருக்கும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மை எரிசக்தி தொழில்நுட்பத்தை அதிகரிப்பதில் இந்தியாவிலிருந்து அறிவாற்றல் பகிர்தலுக்கு வழிவகுக்கும்
- நீண்டகால எரிசக்தி திட்டமிடலுக்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்
- இந்தியாவில் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்த ஒத்துழைக்கும்
- பசுமை ஹைட்ரஜன் பரவல் மற்றும் ஊக்கமளிக்கும் வளர்ச்சி வாயிலாக குறைந்த செலவிலான கார்பன் பயன்பாடு இல்லாத நிலையை நோக்கிச் செல்லுதல்
- எனவே இந்த நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உறுதுணை புரிவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் உலகிற்கு உதவிகரமாக இருக்கும்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2022-ல் கையெழுத்தானது.
- புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மனிதவள பயிற்சி, ஒத்துழைப்புகள் மூலம் ஐ.பி. உற்பத்தி மேற்கொள்ள வழிவகுக்கும் நடைமுறையை வழங்குவதோடு, இருநாடுகளிலும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு திறனை உருவாக்க உதவும்.
- வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் & தொழில்நுட்பம்;
- அதிநவீன உற்பத்தி மற்றும் பொறியியல்;
- பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி, தண்ணீர், பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள்;
- தரவு அறிவியல், பொறியியல் தொழில்நுட்பங்கள்;
- அதிநவீன சாதனங்கள்; மற்றும்
- சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பம்
- உள்ளிட்ட ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தக் கூடிய பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்த ஒப்பந்தத்தின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.