ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
- தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர்.
- இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.
- இதையடுத்து, கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.
- இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.
ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசரச் சட்டம் - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
- கடந்த ஜூன் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
- இந்தக் குழு தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதன்படி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
- இதில், துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை விவாதிக்கப்பட்டு, விளையாட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
- தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விண்ணப்பித்த புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், அனுமதிகள் வழங்குவதற்கான ஒப்புதல்களும் அளிக்கப்பட்டன.
பசுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யுங்கள் - 'ஜி7' நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
- அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, தெற்கு ஜெர்மனியின் மலைப்பகுதியான எல்மாவில் உள்ள மிகப் பழமையான ஸ்கால்ஸ் எல்மா என்ற நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.
- இதில் விருந்தினராக பங்கேற்க நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார்.
- இந்நிலையில், மாநாடு நடக்கும் ஸ்கால்ஸ் எல்மா நட்சத்திர விடுதிக்கு பிரதமர் சென்றார். அவரை ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.
- மோடியைப் போலவே, அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்க தலைவர்களும், ஜி - 7 மாநாட்டில் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
- இந்த மாநாட்டில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யவும், ரஷ்யா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிப்பது குறித்தும், ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.
- மாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜி - 7 நாடுகளின் தலைவர்களுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.
- பிரதமர் மோடி பேசியதாவது:சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில், இந்தியா திட்டமிட்டதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 40 சதவீத இலக்கை அடைந்துள்ளது. பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை 5 மாதங்கள் முன்னதாகவே அடைந்துள்ளோம்.
- முற்றிலும், சூரிய சக்தியில் இயக்கும் உலகின் முதல் விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடு இத்தகைய வளர்ச்சியை காட்டும்போது, இதர வளரும் நாடுகளும் உத்வேகம் பெறுகின்றன.
- இந்தியாவின் முயற்சிகளுக்கு ஜி - 7 நாடுகள் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். இந்தியாவில், பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்திற்கான மிகப் பெரிய சந்தை உருவாகி வருகிறது.
- இதற்கான ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் ஜி - 7 நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்.சுழற்சி பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடுகள் இந்திய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
- கடந்த ஆண்டு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற இயக்கம் துவங்க அழைப்பு விடுத்தேன்.
- இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் அந்த இயக்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
- இதுபோன்ற வாழ்க்கை வாழ்பவர்களை, 'பூமிக்கு ஆதரவான மக்கள்' என அழைக்க வேண்டும். இது போன்ற எண்ணம் உடைய மக்களின் எண்ணிக்கையை நம் நாட்டில் அதிகரிக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு இதுவே நாம் அளிக்கும் மிகப் பெரிய பங்களிப்பாக அமையும்.
- கஜகஸ்தானில் நடைபெறும் காசனோவ் நினைவு தடகள மீட்டில் இந்தியரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.தனலட்சுமி, மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
- பந்தய இலக்கை 22.89 விநாடிகளில் எட்டிய அவர், தனது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டைப் பதிவு செய்தார். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான டூட்டி சந்த், 23.60 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடித்தார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக தேசிய விருது
- மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு நாட்டின் பல மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு மேற்கொண்டு, அதில் இருந்து 112 பின் தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது.
- அவற்றை முன்னேற்றும் அடிப்படையில் கடந்த 2018-ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவற்றில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக, தேசிய விருதுக்கு விருதுநகர் மாவட்டமானது தேர்வு செய்யப்பட்டு உள்ளது.