இலங்கையில் மீண்டும் அவசர நிலை - அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
- இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- இந்நிலையில், நாடு தழுவிய அளவில் தொழில்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று, கடைகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டக்காரர்களும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தனர். போக்குவரத்து மற்றும் ரயில்வே தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்ததால், முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
- போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, இலங்கையில் நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளாா்.
தமிழக அரசு - இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையம் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்துடன் அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய மாநிலங்களில் பயன்மிகு ஆளுமைக்கான மையமானது லாப நோக்கமற்ற அமைப்பாகும்.
- இது மாநிலங்களின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த மையம் ஏற்கனவே சில மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இந்த மையமானது, மாநில வருவாயை பெருக்குதல், அரசு கொள்முதலின் செயல் திறனை மற்றும் பணத்திற்கான மதிப்பினை மேம்படுத்துதல், மனிதவள மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பினை ஒருங்கிணைப்பிற்கான பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளில் தமிழ்நாடு அரசிற்கு உதவி புரியும்.
- ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பினை ஒருங்கிணைப்பிற்கான பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளில் அரசிற்கு உதவியாக இருக்கும்.
டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு? அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு விசாரணை மாற்றம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
- டெல்லியில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, டெல்லி அரசும், டெல்லி துணை நிலை ஆளுநரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
- இந்நிலையில், அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வதற்கான அதிகாரம் மற்றும் திருத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டங்கள், வணிக பரிவர்த்தனை விதிகள் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி அரசு தரப்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது.
- இவ்வழக்கில் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'டெல்லியின் நிர்வாக சேவை அதிகார கட்டுப்பாடு தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
- நிர்வாக பகிர்வு தொடர்பாக ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, சேவை அதிகார கட்டுப்பாடு தொடர்பாக வரும் 11ம் தேதி முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். இதில் வரும் 15ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராகும் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண் கரீன் ஜீன்-பியர்
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புதிய செய்தி தொடர்பாளராக கரீன் ஜீன்-பியரை (Karine Jean-Pierre) நியமித்துள்ளார். ஆப்பிரிக்க - அமெரிக்கரை, அதிலும் தன் பாலீர்ப்புடைய பெண் செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.
- 44 வயதான ஜீன்-பியர், பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
மதநல்லிணக்க ஊராட்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போகலூர் தேர்வு
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் மதநல்லிணக்க ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான 10 லட்சம் காசோலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
- இந்த பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்கள் பருத்தி, நெல், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
- இவர்களின் ஒருமைப்பாட்டை பாராட்டும் வகையில் தமிழக அரசு மத நல்லிணக்க கிராமமாக போகலூர் ஒன்றியத்தைச் தேர்வு செய்து அதற்கான காசோலை ஊராட்சி ஒன்றிய தலைவர் கலையரசி பாலசுப்ரமணி அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமவாத் வழங்கினார்.
- அதிகாரப் பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 2வது தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வெள்ளியன்று விடுவித்தது. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டது.
- 2022-23-ம் நிதியாண்டிற்கு ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.86,201 கோடி விடுவிக்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது.
- இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் இதுவரை ரூ.14,366.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
- மும்பையில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், எரிசக்திதுறையில் இந்தியா தனித்து விளங்க உதவிசெய்யும் விதமாக, நிலக்கரியில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது போன்ற வாய்ப்புகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.
- கோல் இந்தியா மற்றும் ஃபிக்கி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நிலக்கரி எரிவாயு தயாரித்தல்- மேலும் முன்னெடுத்து செல்லுதல்’ என்ற தலைப்பிலான இந்த முதலீட்டாளர் கூட்டத்தில் நிலக்கரித்துறை இணையமைச்சர் திரு ராவ் சாகேப் பாட்டீல் தன்வே, நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலாளர் திரு எம் நாகராஜூ, கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு பிரமோத் அகர்வால் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.