'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் தொடக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி பேரவையில் விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், '6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது' என்று அறிவித்தார்.
- அதை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயத்துக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதற்காக, 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' என்ற புதிய திட்டத்தின்கீழ் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
- மேலும், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று 'உதகை - 200' விழாவில் முதல்வர் அறிவித்தார்.
பிரதமரின் தனிச்செயலராக விவேக் குமார் நியமனம்
- பிரதமரின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ்.,அதிகாரி விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இப்பதவியில் இருந்து வரும் ஐ.எப்.எஸ்.,அதிகாரி சஞ்சீவ்குமார், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதையடுத்து , விவேக் குமாரை பிரதமரின் தனிச்செயலாளராக மத்திய அமைச்சரவையில் நியமனக்குழு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
- 2004ம் ஆண்டு ஐ.எப்.எஸ்.கேடரான விவேக் குமார் , தற்போது பிரதமர் அலுவலக உயர் பொறுப்பு வகித்து வரும் நிலையில், தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- கடந்த வாரம் நீளமான சுடுமண் செங்கல் சுவரின் இருபுறமும் பெரிய சிவப்பு நிற பானைகள கண்டறியப்பட்டன. இந்த சுவரின் அருகில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சிய பின் வெளியாகும் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- எனவே இந்த இடத்தில் இரும்பு தொழிற்சாலை இயங்கி இருக்க கூடும் என தெரிகிறது. மேலும் சுவரின் அருகில் சிறிய சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன.
- கீழடியில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு 500க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் 5ம் கட்டத்தில் மணலூரிலும், 6ம் கட்டத்தில் கீழடியிலும் இது போன்ற உலைகலன் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ.3,006 கோடி நிதி அரசு அறிவிப்பு
- மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் புதிதாக 388 வட்டார அளவிலான நாற்றங்கால்கள் மற்றும் 1,500 தோட்டக்கலை நாற்றங்கால்கள் ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன் ரூ.92.12 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது.
- இரும்பு சத்துக் குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 3,500 புதிய முருங்கை நாற்றங்கால்களில் 21 லட்சம் முருங்கை நாற்றுகள் வளர்க்கப்பட்டு, 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 2 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
- ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் விதமாக ஊரக பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து 500 குழந்தை நேய அங்கன்வாடி மையங்கள் ரூ.59.85 கோடியில் கட்டப்படும்.
- இக்கட்டடங்கள் கட்டுவதில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் குக்கிராமங்கள், கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட எதுவாகவும் திட்ட பணிகளுக்காகவும் மொத்தமாக ரூ.3.006.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி - பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
- ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோற்றார். ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
- மொத்தமுள்ள 151 எம்பி இடங்களில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.
- வெற்றிப் பெற 76 இடங்கள் தேவை என்ற நிலையில், 72 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியதன் முலம், அல்பானிஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது. தனது தோல்வியை ஸ்காட் மோரிசன் ஒப்பு கொண்டுள்ளார்.