இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
- சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
- இந்த நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 18) இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்திய பொருளாதாரம் சரிவினைக் காணலாம் - எஸ்&பி கணிப்பு
- முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 7.8 சதவீதமாக இருக்கலாம் என ஆய்வு நிறுவனமானது கணித்திருந்தது. இது தற்போது 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.
- இது நாட்டில் பணவீக்கமானது உச்சத்தில் உள்ள நிலையில், வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் 2022
- ஜெர்மனியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு இந்திய அணி 17-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 12வது தங்கம்.
- கலப்பு அணிகளுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் விஜய்வீர் சித்து, சிம்ரன்பிரீத் கவுர் அடங்கிய இந்தியா '1' அணி 17-9 என்ற கணக்கில் அனிஷ், தேஜஸ்வனி அடங்கிய இந்தியா '2' அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
- பெண்கள் அணிகளுக்கு இடையிலான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் 3வது இடம் பிடித்த இந்தியாவின் பரினாஸ், தர்ஷனா, அரீபா கான் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றியது.
- இதுவரை 13 தங்கம், 14 வெள்ளி, 5 வெண்கலம் என, 32 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் இத்தாலி (4 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) உள்ளது.
உலக குத்துச்சண்டை - நிகாத் கலக்கல், மணிஷா, பர்வீனுக்கு வெண்கலம்
- துருக்கியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 93 நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
- 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா, இத்தாலியின் இர்மா டெஸ்டாவை சந்தித்தார். இதில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- அடுத்து நடந்த 63 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, அயர்லாந்தின் சாரா அமியிடம் 1-4 என்ற கணக்கில் வீழ்ந்து, வெண்கலப்பதக்கம் வென்றார்.
கேரளத்தில் இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்
- கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் புதிய ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. கேரள கலாசாரத் துறை அமைச்சா் சாஜி செரியன் ஓடிடி தளத்தின் பெயரான 'சி ஸ்பேஸ்' என்பதை அறிவித்தாா்.
- கேரள மாநில உருவாக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதிமுதல் இந்த ஓடிடி தளம் செயல்படத் தொடங்கும். இந்தியாவில் அரசு சாா்பில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளமும் இதுவாகும்.
போர்க் கப்பல் தகர்ப்பு ஏவுகணை கடற்படை பரிசோதனை வெற்றி
- போர் ஹெலிகாப்டரில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, இலக்கை துல்லியமாக தகர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒடிசாவின் பாலசோர் அருகே உள்ள கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் சேர்ந்து, இந்திய கடற்படை செய்துள்ளது.
- போர்க் கப்பல்களை தகர்க்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம், துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம் - ஒன்றிய அமைச்சரவை அனுமதி
- பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்கள் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பதற்கோ அதன் நிர்வாகக் குழுவே முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் வழங்க அனுமதி தரப்பட்டது.
- தற்போதைய விதிகளின்படி, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழு அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், அவற்றை கையகப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே அதிகாரம் உண்டு.
- பங்குகள் விற்பனை, துணை நிறுவனங்களை மூட அதிகாரம் இல்லை. தற்போது ஒன்றிய அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, பங்குகளை விற்க பொதுத்துறை நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம். இதன் மூலம் முடிவெடுக்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும்.
டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா
- டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் பைஜால், 2016ம் ஆண்டு டில்லியில் துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
- பதவி காலத்தில் அவருக்கும், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அனில் பைஜால், கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பேரறிவாளன் மீது வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
- கடந்த 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
- இந்நிலையில், பரபரப்பான இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
- உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை நேரடியாக விடுதலை செய்கிறோம். இந்த உத்தரவை ஏற்று பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை 2018க்கான திருத்தங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
- நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடுமுழுவதும் 01.04.2023 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன
- உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான கூடுதல் மூலப்பொருட்கள் இருப்பு வைக்க அனுமதித்தல்
- பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது என்ற இலக்கை 2030 என்பதிலிருந்து நிதியாண்டு 2025-26க்கு மாற்றுதல்
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல்
- தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்
- குறிப்பிட்ட பிரிவுகளில் உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்தல் போன்றவை உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியமான திருத்தங்களாகும்
- உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கூடுதலான மூலப்பொருட்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்காப்பு இந்தியாவை மேம்படுத்தும். மேலும் 2047க்குள் எரிசக்தி சுதந்திரம் உள்ளதாக இந்தியா மாறவேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஊக்கமளிக்கும்