'டாப் 10' கோடீஸ்வரர் - அதானி இடம் பிடித்தார்
- துறைமுகம், சுரங்கம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தாண்டில் மட்டும், 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
- இதையடுத்து இவரின் மொத்த சொத்து, 3.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக அவர் உலகின் 'டாப் 10' கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
- இந்த பட்டியலில் முதலிடத்தில் 'டெஸ்லா' குழுமத் தலைவர் எலன் மஸ்க், இரண்டாவது இடத்தில் அமேசான் குழுமத் தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளனர்.
- கடந்த பிப்ரவரியில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெருங்கோடீஸ்வரர் என்ற சிறப்பை கவுதம் அதானி பெற்றார்.
- தற்போது, உலகின் முதல், 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக, புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் - நேபாளப் பிரதமர் சந்திப்பு
- இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் கடந்த 2020ம் ஆண்டில் சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. அப்போதைய பிரதமராக இருந்த சர்மா ஒலி தலைமையிலான நேபாள அரசு, இந்தியப் பகுதிகளான லிம்பியாதுரா, கலாபானி மற்றும் லிபுலேக் ஆகியவற்றை நேபாளத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் புதிய வரைபடத்தை வெளியிட்டது.
- இது இந்தியா, நேபாளம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு புதிய பிரதமரமாக பகதூர் டியூபா பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் அவர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - நேபாளம் இடையே ரயில் சேவையை பிரதமர் மோடியும், டியூபாவும் தொடங்கி வைத்தனர்.
- மேலும், இந்தியாவின் ரூபே பரிவர்த்தனை அட்டைகள் சேவையை நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட 4 துறைகளில் இந்தியா, நேபாளம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
வரியற்ற பரஸ்பர வர்த்தகம் இந்தியா - ஆஸி., ஒப்பந்தம்
- இந்திய பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள தீவு நாடு ஆஸ்திரேலியா. இந்நாட்டுடன், இந்தியா வரியற்ற பரஸ்பர வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஆஸி., வர்த்தகத் துறை அமைச்சர் டான் டெஹன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஜவுளி, ஆயத்த ஆடை, வேளாண் மற்றும் கடல் உணவுப் பொருட்கள், தோல், காலணிகள், ஆபரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவர். இப்பொருட்கள் ஏற்றுமதிக்கு ஆஸி., தற்போது 4 - 5 சதவீத சுங்க வரி விதிக்கிறது.
- புதிய ஒப்பந்தம் காரணமாக இப்பொருட்களை வரியின்றி ஆஸி., இறக்குமதி செய்யும். அதுபோல, ஆஸி.,யின் மூலப்பொருட்கள், தாதுப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை, இந்தியாவில் வரியின்றி இறக்குமதி செய்யலாம்.
நெசவு 2022 கைத்தறி கண்காட்சியை மத்திய அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்
- இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், நெசவாளர்களின் கைவினைப் பொருட்களைக் கொண்ட "நெசவு 2022" கைத்தறி கண்காட்சியை மத்திய குடிசைத் தொழில் கழகம் நடத்துகிறது.
- 2022 ஏப்ரல் 2 முதல் 12 வரை, சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் உள்ள ஷோரூமில், காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
- சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் 13,000 சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசைத் தொழில் கழகம் கொண்டுள்ளது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரத்தியேகமாக கையால் நெய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், துணிகள், ஆடைகள், அணிகலன்கள், தளவாடங்கள், வீட்டுத் துணிகள் மற்றும் பலவற்றைக் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது.
- வளமான ஜவுளி பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. கண்காட்சி இதை வெளிப்படுத்துவதோடு, நெசவாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே கலாச்சார மற்றும் கலை பரிமாற்றத்திற்கான ஒரு தளமாகவும் உள்ளது.
- பெருமையுடன் கைத்தறிகளை அணிய பார்வையாளர்களை ஊக்குவிப்பதும், கைத்தறி பொருட்களை அவர்களது அன்றாட வாழ்வில் பின்பற்ற வைப்பதும் கண்காட்சியின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
- இந்திய நெசவாளர்கள் மற்றும் ஜவுளிக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை இத்தகைய முன்முயற்சிகள் தக்கவைத்து, அவர்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை அளித்து, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும்.