இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
- கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
- இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்திய, சீன உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. இன்றுவரை லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.
- இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அரசு முறை பயணமாக டெல்லி வந்தார்.
- இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது எல்லை பிரச்சினை, சர்வதேச நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- காஷ்மீர் விவகாரம் குறித்து அமைச்சர்வாங் யீ அண்மையில் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு அவரிடம் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
துபாய் எக்ஸ்போ, தமிழ்நாடு அரங்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு
- புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு துபாயில், எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
- கண்காட்சியின் கடைசி வாரம், தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி. எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- இந்த அரங்கில் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
- இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
- அப்போது இடம்பெற்ற செம்மொழியான தமிழ்மொழி பாடலையும், அதில் இடம்பெற்ற தொல்தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலான காட்சிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் ரசித்துப் பார்த்தார்.
உ.பி.யில் மீண்டும் முதல்வரானார் யோகி ஆதித்யநாத்
- உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.
- இந்த வெற்றியை தொடர்ந்து லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
- பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர்.
- மாலை 4.00 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. முதலாவதாக யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவி ஏற்றார். மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- கேசவ் பிரசாத் மவுரியாவும், பிரஜேஷ் பாதக்கும் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து 16 கேபினட் அமைச்சர்கள், 14 தனி அதிகாரம் மற்றும் 20 இணை அமைச்சர்கள் என 50 பேர் பதவி ஏற்றனர்.
பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா சாதனை
- ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.
- ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- 3-வது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 92.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லயன் 5, கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
- 3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2016-க்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. மேலும் ஆசியாவில் 2011-க்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது.
- ஆட்ட நாயகனான பேட் கம்மின்ஸும் தொடர் நாயகனாக உஸ்மான் கவாஜாவும் தேர்வானார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
- தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
- இதுபோன்று, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.639 கோடியும், ஒன்றியங்களுக்கு ரூ.119 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.