கனடாவில் 1970க்கு பிறகு முதல்முறையாக அவசரநிலை பிரகடனம்
- கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து , கனடாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .
- குறிப்பாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டவா பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது .
- இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் . அதன்படி போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும் .
- ட்ரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். மேலும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார் .
- 1970 ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது . முன்னதாக கனடாவின் Quebec மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அப்போதைய கனடா பிரதமர் பியரே ட்ரூடோ அவசரநிலையை பிரகடனம் செய்தார் .
- அவர் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் .
இனி 'துருக்கி' அல்ல 'துருக்கியே' - துருக்கி அதிபர் எர்டோகன்
- துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'துருக்கி' என்ற பெயரை துருக்கியா என மாற்றியதாக அறிவித்தார்.
- துருக்கியே என்ற வார்த்தை துருக்கிய நாட்டின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
- துருக்கிய மொழியில் துருக்கி என்ற பெயர் துருக்கியே என்று அழைக்கப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு மேற்கத்திய ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, துருக்கி, துருக்கியே என்று தான் அழைக்கப்பட்டது.
- பல நூற்றாண்டுகளாக, ஐரோப்பியர்கள் இந்த நாட்டை ஒட்டோமான் மாநிலம் என்றும் பின்னர் துருக்கியே என்றும் குறிப்பிட்டனர். பின்னர் நாளடைவில் துருக்கி என்று அழைக்கப்பட்டது. அதுவே அதிகாரப்பூர்வ பெயராக மாறியது.
- அதே சமயம் பெயரை மாற்றுவது என்பது வழக்கத்திற்கு மாறான விஷயம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முடிவு நாட்டின் பிராண்டிங் தொடர்பானது எனவும் கூறுகின்றனர்.
- சமீபத்தில், நெதர்லாந்து உலகில் தனது இமேஜை எளிதாக்க 'ஹாலண்ட்' என்ற பெயரை கைவிட்டது. அதற்கு முன் கிரீஸுடனான அரசியல் தகராறு காரணமாக 'மாசிடோனியா' என்ற பெயரை வடக்கு மாசிடோனியா என மாற்றியது.
- 1935 இல், ஈரான் தனது பெயரை மாற்றியது. முன்னதாக பெர்ஷியா என அழைக்கப்பட்டது. பெர்ஷியா என்ற சொல் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஈரான் என பெயர் மாற்றப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு
- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
- பின்னர் அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.
- நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ஏர் இந்தியா சி.இ.ஓ.,வாக இல்கர் அய்சியை நியமித்தது டாடா நிறுவனம்
- கடந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது.
- இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து 'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தை, 'டாடா' குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.
- இந்நிலையில், ஏர் இந்தியாவின் புதிய சி.இ.ஓ.,வாகவும், நிர்வாக இயக்குநராகவும் இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க சிசிஐ ஒப்புதல்
- சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க சிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. போட்டியியல் சட்டம் 2002-ன் 31(1) பிரிவின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் விதிகள் படி நிறுவப்பட்டுள்ள சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியாகும் தேதி வரை இந்தியாவில் நேரடி நிறுவனங்களோ அல்லது முதலீடுகளோ இல்லை.
- இந்தியாவில் வேளாண் இராசாயணங்கள் துறைக்கான வேதியியல் பொருட்களின் தயாரிப்பு, சிறப்பு ரசாயனங்களின் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் சஜன் இந்தியா லிமிடெட் ஈடுபட்டுள்ளது.
- சஜன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை சோனா கம்பெனி பிரைவேட் லிமிடெட் வாங்க இந்தியப் போட்டியியல் ஆணையம் அளித்துள்ள ஒப்புதல் குறித்த விரிவான உத்தரவு விரைவில் வெளியாகும்.
ஜனவரி மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 6.13 சதவீதம் அதிகரித்து 79.60 மில்லியன் டன்னை எட்டியுள்ளது
- இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2020 ஆம் ஆண்டு இதே காலத்தில் 75 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், ஜனவரி 2022-ல் 6.13% அதிகரித்து 79.60 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
- மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளி விவரங்களின் படி, கோல் இந்தியா நிறுவனம் 64.50 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து 2.35% வளர்ச்சியையும், சிங்கரேனி சுரங்க நிறுவனம் 6.03 மில்லியன் டன் உற்பத்தி செய்து, 5.42% வளர்ச்சியையும் அடைந்துள்ளன.
- சுரங்கங்களில் இருந்து அனுப்பப்படும் நிலக்கரி அளவும் ஜனவரி 2022-ல் 10.80% அதிகரித்து 75.55 மில்லியன் டன்னாக உள்ளது. நாட்டில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் 35 முன்னணி சுரங்கங்களில் 14 சுரங்கங்கள் 100% க்கும் அதிகமான செயல்திறனையும், வேறு 6 சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீத செயல்திறனையும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ஜப்பான் தொழில் நகரங்களின் முன்னேற்றம் குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆண்டு சீராய்வு கூட்டுக்கூட்டம்
- இந்தியாவில் உள்ள ஜப்பான் தொழில் நகரங்களின் (JITs) முன்னேற்றம் குறித்து இந்தியத் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (DPIIT) மற்றும் ஜப்பான் பொருளாதார தொழில் வர்த்தக அமைச்சகம் (METI) இடையேயான ஆண்டு சீராய்வு கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.
- இந்தத் தொழில் நகரங்களை உருவாக்க உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலம் மற்றும் கட்டமைப்பை ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு DPIIT மற்றும் மாநிலங்கள் சமர்ப்பித்தன. மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்தத் தொழில் நகரங்களை நேரில் பார்ப்பதற்கு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- கொரோனா காரணமாக மெய்நிகர் தளம் மூலம் METIயுடன் இனைந்து DPIIT இந்தத் தொழில் நகரங்களை ஆய்வு செய்தது. ஜப்பான் சார்பாக இந்தியாவிற்கான ஜப்பான் தூதரகம் மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) இந்த ஆய்வில் பங்கேற்றது.
- இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், டோக்கியோவில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்யும் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- இந்தத் தொழில் நகரங்கள், ஜப்பான் அரசாங்கத்தின் METI மற்றும் இந்திய அரசாங்கத்தின் DPIITயிடையே ஏப்ரல் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்டு “இந்தியா-ஜப்பான் முதலீடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான செயல்திட்டம்” மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 1154.90 கோடி நிதி விடுவிப்பு
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்காக நான்கு மாநிலங்களுக்கு ரூ. 1154.90 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது.
- விடுவிக்கப்பட்ட இந்த நிதி ஆந்திரப்பிரதேசம் (ரூ.225.60 கோடி), பீகார் (ரூ.769 கோடி), குஜராத் (ரூ.165.30 கோடி) மற்றும் சிக்கிம் (ரூ.5 கோடி) வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நிதியிலிருந்து கண்டோன்மெண்ட் வாரியங்கள் உட்பட 10 லட்சத்திற்கும் மிகாத மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிதியையும் சேர்த்து 2021-22 –ல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக மொத்தம் ரூ.9,172.63 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.741.75 நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளது.