பா.ஜ.வை சேர்ந்த மூவருக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி
- புதுச்சேரி 15வது சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.ஆர்.காங்., 10 இடங்களிலும், பா.ஜ., 6 இடங்களிலும் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது.மாநில முதல்வராக என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த 7ம் தேதி பதவியேற்றார்.
- இந்ந சூழ்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், பா.ஜ., நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பியும் பா.ஜ. பிரமுகருமான ராமலிங்கம் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. என்.ஆர்.காங்., கட்சியை (10) விட ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே குறைவாக உள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது.
இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.3,750 கோடி உதவி
- கொரோனா சவாலை சமாளிக்க, இந்தியாவுக்கு 3,750 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
- இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 47 நாடுகள் வழங்கியுள்ளன.
- அமெரிக்க அரசு, மக்கள், நிறுவனங்கள் ஆகியவை தாராளமாக மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை, இந்தியாவுக்கு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பியது. அதற்கு நன்றிக்கடனாக, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- 'தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப் பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள மக்களை பாதுகாத்து ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வராக பொறுப்பேற்ற மே 7-ம் தேதியன்றே, 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடியில் கரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை மே மாதத்திலேயே வழங்குவதற்கான உத்தரவில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
- அதன்படி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் தோல்வி
- நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமால் கட்சி வாபஸ் பெற்றது. இதனால், பெரும்பான்மையை இழந்த நிலையில், பிரதமர் கே.பி.ஒளி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் தேதியை அறிவித்தார். இதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
- இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 275 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒளி தனது பதவியை தக்க வைக்க 136 ஓட்டுகள் பெற வேண்டியிருந்தது.
- ஆனால் 232 எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 124 பேர் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 15 பேர் எந்தப்பக்கமும் ஆதரவாக இல்லை என வாக்களித்தனர்.
- இதன் மூலம் வாக்கெடுப்பில் பிரதமர் ஒளி தோல்வி அடைந்தார். அந்நாட்டு அரசியல் சாசனப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதால் தாமாக ஒளி தனது பதவியை இழக்கிறார்.
பண்டஸ்லிகா கால்பந்து பேயர்ன் 9வது முறையாக சாம்பியன்
- ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிக் தொடர்ந்து 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
- ஜெர்மனியின் பிரபல கால்பந்து ெதாடர் பண்டஸ்லிகா. மொத்தம் 18 அணிகள் மோதும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 ஆட்டங்கள் என மொத்தம் 34 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
- அதனையடுத்து பேயர்ன் 32 ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 74 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் தொடர்கிறது. இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பேயர்ன் மியூனிக் சாம்பியனாகி விட்டது.
- காரணம் 2வது இடத்தில் உள்ள ஆர்பி லிப்சிக் 32 ஆட்டங்களில் விளையாடி 64புள்ளிகளும், 3வது இடத்தில் உள்ள உல்ப்ஸ்பர்க் 32 ஆட்டங்களில் விளையாடி 60 புள்ளிகளும் பெற்றுள்ளன.
- நடப்பு சாம்பியனான பேயர்ன் மியூனிக் தொடர்ந்து 9வது முறையாக பண்டஸ்லிகா கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இப்படி ஹாட்ரிக்கில் ஹாட்ரிக் அடித்து 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோப்பையை வெல்லும் பேயர்ன் அணிக்கு இது 30வது வெற்றிக் கோப்பையாகும்.