பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவருக்கே 20% ஒதுக்கீடு உயர் நீதிமன்றம் உத்தரவு
- மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி அலுவலர் உட்பட 181 பணியிடங்களை நிரப்ப 2019-ல் அறிவிப்பு வெளியானது. இத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றும் நான் தேர்வாகவில்லை.
- தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசு வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டிலும் நான் தேர்வாகவில்லை. விசாரித்தபோது, தொலைநிலைக் கல்வியில் படித்தோருக்கும் தமிழ் வழிக்கல்விச் சலுகை வழங்கியது தெரிய வந்தது.
- தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்கள் சில படிப்புகளை ஆங்கில வழியிலும், சில படிப்புகளை தமிழ் வழியிலும் படிக்கின்றனர். இவர்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களாகக் கருத முடியாது.
- எனவே கல்லூரிகளுக்கு நேரில் சென்று தமிழ் வழிக் கல்வி பயின்றோரை அடிப்படையாகக் கொண்ட புதிய பட்டியல் தயாரித்து குரூப் 1 நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்து.
- இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை அல்லது நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் வழியில் பயின்றோருக்கு மட்டுமே தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றம்
- தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி வந்தனர்.
- இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு,அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை, கடந்த வாரம், பார்லிமென்ட்டின் லோக்சபாவில் தாக்கல் செய்து, மத்திய அரசு நிறைவேற்றியது. இந்நிலையில், அந்த மசோதா, ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இளவேனில் தங்கம் வென்றார்
- டெல்லியில் நடந்த கலப்பு குழு 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன், திவ்யனேஷ் சிங் பன்வார் பங்கேற்றனர். பைனலில் ஹங்கேரியின் டெனெஸ் எஸ்லர், பெனி இஸ்ட்வனுடன் மோதிய இந்திய இணை 16:10 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டனர்.
- கலப்பு குழுவினருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவு பைனலில் இந்தியாவின் மானு பேக்கர், சவுரப் சவுத்ரி ஆகியோர் 16-12 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் செபகதுல்லா, ஜாவத் இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தனர்.
- இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் யாஷஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா இணைந்து துருக்கியை வீழ்த்தி3வது இடம் பிடித்தனர்.
டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவின் படி, டெல்லியில் 'அரசாங்கம்' என்றால் அது லெப்டினன்ட் கவர்னர் தான்.எந்தவொரு நடவடிக்கையும் நிறைவேற்றும் முன்னர் லெப்டினன்ட் கவர்னர் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் வேண்டும் என்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.