21 நாட்களில் 72 ரயில் பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை
- சென்னையில், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இம்மாதம், பராமரிப்பு பணி மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, 21 நாட்கள் மட்டுமே, பெட்டி தயாரிப்பு பணிகள் நடந்தன.
- இதில், 'மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்' எனும், 'மெமூ' ரயில் பெட்டிகள் தயாரிப்பு துரிதமாக நடந்துள்ளது. இதில், ஒன்பது ரயில்களுக்கான, 72 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை படைத்துள்ளது.
- இத்துடன், ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறைக்கு, புதிய வடிவமைப்புடன் கூடிய, 'விஸ்டம்' என்ற சுற்றுலா பயணியருக்கான ரயில் பெட்டியும், மஹாராஷ்டிரா மாநிலம், லாட்டூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா இடங்களில், வெளிப்புற காட்சிகளை எல்லா திசையிலும் பார்க்க ஏதுவாக, பெட்டியின் மேற்கூரை முழுதும், நவீன கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், 44 பேர் பயணம் செய்யலாம்.
- இத்துடன், ஐ.சி.எப்., உற்பத்தி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்ததற்காக, 'வெல்டிங்' பிரிவுக்கு தரச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஐ.சி.எப்., தரக்கட்டுப்பாடு மேலாண்மைக்காக, 'ஐ.எஸ்.ஓ., 9,000, ஐ.எஸ்.ஓ., 14,000' என்ற தரச்சான்றுகளும் பெற்றுள்ளன.
தஞ்சை மாணவன் கண்டுபிடித்த மிகச்சிறிய செயற்கைகோள்
- தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் ரியாஸ்தீன்(18). சாஸ்த்ரா கல்லூரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2ம் ஆண்டு படித்து வரும் இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் வரும் 2021 ஜூனில் அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.
- நாசா விண்வெளி மையம் மற்றும் 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து 'க்யூப் இன்ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் 73 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 2019 - 2020க்கான போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். இதில் நான் உருவாக்கிய விசன்-1 மற்றும் விசன் -2 இரண்டு செயற்கைக்கோள் தேர்வாகியுள்ளது.
- இரு செயற்கைகோளும், 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, 'பெமிடோ ' என, பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ் பிரிமெண்ட்டல் செயற்கைகோள்.
- இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கை கோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில் 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையான தகவல்களை அறியலாம்.
- இதில், விசன் -1 செயற்கை கோள் 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர். - 7 ராக்கெட் மூலம், ஏவப்படுகிறது. இதைப்போன்று விசன்-2 செயற்கோள் ஆர்.பி-6 என்கிற ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்படுகிறது.