இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும், கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தார்கள்.மேலும் பிறகு சிலஹதி - ஹல்திபாரி இடையே ரயில் சேவையை இரு நாட்டு தலைவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
- இதனிடையே இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வங்கதேசத்துக்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் வங்கதேச அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
- ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- வங்கதேசம் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியா-வங்கதேசம் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி
- சர்வதேச விளையாட்டுபோட்டிகளில் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறியும் பணியில் ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனம் ( World Anti-Doping Agency) ஈடுப்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் புதுமையான பரிசோதனை முறைகளைக் கண்டறிய ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளது.இதற்காக பல நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. உலகளவில் நேர்மையான விளையாட்டுச் சூழலை ஏற்படுத்த, இந்த ஆராய்ச்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.
- உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் புலனாய்வு மற்றும் உளவுத்துறைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்தியா அளித்துள்ள நிதி சீனா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் அளித்த நிதியைவிடவும் அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உறுப்பு நாடுகளின் மொத்தப் பங்களிப்பு மற்றும் அதற்கு இணையாக சர்வதேச ஒலிம்பிக்குழுவின் அளிக்கும் நிதியுடன் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் டாலர் தொகுப்பு நிதி உருவாக்கப்படவுள்ளது.
உலகக்கோப்பை மல்யுத்த போட்டி.. இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் சாதனை
- உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தகுதி பெற்றார்.
- அதன்படி அவர் இறுதிப்போட்டியில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவை எதிர்கொண்டார். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அன்ஷு மாலிக் இறுதிப் போட்டியில் பெரிதும் தடுமாறினார்.
- பின்னர் போட்டியின் முடிவில் 1-5 என்ற செட் கணக்கில் அன்ஷு மாலிக் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
இந்திய பொறியாளருக்கு ஐ.நா.வின் உலக இளம் சாதனையாளர் விருது
- தற்போதுள்ள சுற்றுச்சூழல் சவால்களில் இருந்தும் காலநிலை மாற்ற நெருக்கடிகளில் இருந்தும் உலகைக் காப்பற்றக் கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக 7 இளைஞர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உலக இளம் சாதனையாளர்கள் விருதை வழங்கியுள்ளது.
- இதில் இந்திய பொறியாளர் வித்யுத் மோகன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 29 வயதாகும் இவர் 'தகாச்சர்' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
- இவர் அறுவடைக்குப் பிறகான விவசாய கழிவுகளைத் தீயிட்டு எரிக்காமல், அவற்றில் இருந்து ஆக்டிவேட்டட் கார்பன் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுக்கு அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
- வழக்கமாக விவசாய கழிவுகள் அப்படியே தீயிலிட்டு எரிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு உள்ளாகி வருகிறது. இதைத் தடுக்கவும் அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வித்யுத் மோகன் வழி செய்துள்ளார்.
- வித்யுத் மோகன் மற்றும் கெவின் கங் இணைந்து 2018-ல் தொடங்கிய தகாச்சர் நிறுவனம் இதுவரை 4,500 விவசாயிகளிடம் இருந்து 3,000 டன்னுக்கும் மேலான விவசாய கழிவுகளைப் பெற்று அவற்றில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறது.
சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
- இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த உதவும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் டிசம்பர் 17ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.
- இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 3.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
- ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 20 நிமிடம் 11 விநாடிகளில் 545 வது கிலோ மீட்டர் தொலைவில் சி.எம்.எஸ் 01 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
ரூ.28 ஆயிரம் கோடியில் ஆயுதம் வாங்க ஒப்புதல்
- ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து, முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் யோகா மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல்
- விளையாட்டுப் போட்டிகளில் யோகாவை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
- யோகாவை ஊக்குவிப்பதற்கும், அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மக்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
- மேலும் எதிர்கால கெலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் யோகா சேர்க்கப்படும் என்றும் இதன்மூலம் தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் யோகா இடம்பெறும் எனவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 திட்டங்களுக்கு உலக வங்கி ஒப்புதல்
- இந்தியாவின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் விவசாயத்தை ஊக்குவித்தல், நாகாலாந்தில் தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதலுக்கு உதவுகிறது.
- இந்த நான்கு திட்டங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகள், கல்வி, நீர் வழங்கல் ஆகியவற்றிக்கு உதவுகிறது என்று உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறினார்.
- அங்கீகரிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் 100 மில்லியன் டாலர் சத்தீஸ்கர் உள்ளடக்கிய கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சி திட்டம் மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வகைப்பட்ட மற்றும் சத்தான உணவை வழங்க உதவுகிறது.
- இரண்டாவது திட்டம் நாகாலாந்தில் 68 மில்லியன் டாலர் வகுப்பறை, கற்பித்தல் மற்றும் வளங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இந்தியாவின் அணை மேம்பாடு மற்றும் புனர்வாழ்வு திட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்களுக்கும் உலக வங்கி நிதியளிக்கிறது.
சீனாவுக்கான ஐ.நா., பிரதிநிதியாக இந்தியர் நியமனம்
- ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் சீனாவுக்கான தன் பிரதிநிதியாக இந்தியாவைச் சேர்ந்த சித்தார்த் சட்டர்ஜியை நியமித்துள்ளார்.
- ஐ.நா.வில் பணியாற்றும் சித்தார்த் சட்டர்ஜி தேசிய ராணுவ அகாடமியில் பயின்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.யில் பொது கொள்கையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
- இவர் தற்போது ஆப்ரிக்க நாடான கென்யாவிற்கு ஐ.நா. பிரதிநிதியாக உள்ளார். கென்யாவில் ஐ.நா. வளர்ச்சி திட்டம் தேசிய மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.
- அத்துடன் இந்தோனேஷியா சோமாலியா சூடான் நாடுகளுக்கான ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
- சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முதன்மை துாதராக செயல்பட்டுள்ள சித்தார்த் சட்டர்ஜி 1997ல் ஐ.நா.வில் இணைவதற்கு முன் இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.இவர் 2021 ஜனவரியில் சீனாவில் ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்க உள்ளார்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு 3,500 கோடி மானியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாட்டில் தற்போது, 5 கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். மேலும், 5 லட்சம் தொழிலாளர்கள் சர்க்கரை ஆலைகளிலும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
- கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பு உள்ளதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் வைக்கப்படுகிறது.
- இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் சர்க்கரை இருப்பை அகற்ற மத்திய அரசு உதவி வருகிறது. அந்த வகையில், 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ₹3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.