தமிழர் வரலாறு - கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகள்
- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.
- காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், 'எகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.
- அடுத்ததாக, வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி. 7 - 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- தமிழில் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் 'பள்ளிப்படை' என்ற வார்த்தை இடம்பெற்ற பழமையான கல்வெட்டாக இது இருக்கலம் என மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
- இதற்குப் பிறகு அந்தக் கோயில் வளாகத்தில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையை விஜயரங்க சொக்கநாதன் ஆண்ட காலத்தில் கி.பி. 1722ல் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மிகவும் விரிவாக அமைந்திருந்த இந்தக் கல்வெட்டில் 43 வரிகள் இடம்பெற்றிருந்தன.
- மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியலிட்டிருக்கும் இந்த கல்வெட்டு, அந்த கோயிலை பள்ளிப்படை சமாதி எனக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையானது என கூறுகிறது.
- "இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன. முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் 'அதன் ஏகன் கோட்டம்' என்ற வார்த்தைகளில் நான்கு இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன.
- ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான் முதன்முதலில் புள்ளி இருந்தது. 'ட்' என்ற ஒரு எழுத்தின் மேல் இந்தப் புள்ளி அமைந்திருந்தது. ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டார்.
- இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழி கல்வெட்டில் இதுவரை கோட்டம் என்ற சொல் இதுவரை இடம்பெற்றதில்லை. டபூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக கோட்டம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம் என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான்" என்கிறார் சாந்தலிங்கம்.
- 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
- "திருச்சுழியில் உள்ள சுந்தர பாண்டிய ஈஸ்வரன் பள்ளிப்படைதான் இதுவரை கிடைத்ததிலேயே பழைய பள்ளிப்படையாக கருதப்பட்டு வந்தது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால், இந்த கல்வெட்டை வைத்து இதனை பள்ளிப்படை என்று கொண்டால், இதுதான் பழமையான பள்ளிப்படையாக இருக்கும்" என்கிறார் சாந்தலிங்கம்.
- மூன்றாவது கல்வெட்டான கி.பி. 1722 ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் கால கல்வெட்டில் வரிசையாக நாயக்க மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, பாண்டிய மன்னர்களின் பெயரான நெடுஞ்செழியன் பெயரும் பராந்தகப் பாண்டியன் பெயரும் இடம்பெற்றிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. "விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்டபடி" என்று இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- நெடுஞ்செழியன் என்ற பெயருடன் சங்ககால பாண்டியர்கள் மூவர் இருந்துள்ளனர். பராந்தக பாண்டியனின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த மன்னர்களைப் பற்றி 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விசயரங்க சொக்கநாதனுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
- "இந்த இடம் தொடர்பான பட்டயங்கள் ஏதும் இருந்திருக்கலாம். அந்த பட்டயங்களில் இந்த மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அதை வைத்து விசயரங்க சொக்கநாதன் இந்த மன்னர்களின் பெயர்களையும் கல்வெட்டில் பொறித்திருக்கக்கூடும்" என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு.
- புகழ்பெற்ற வேள்விக்குடி செப்பேட்டில், சங்ககாலத்தில் வழங்கப்பட்ட நிலத்தை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுகளைக் காண்பித்து திரும்பப் பெற்ற செய்தி இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ராஜவேலு.
- தற்போது இந்த இடத்தில் உள்ள ஏகநாதர் கோவில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள 1942ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டிலும் அந்த இடம் ஜீவசமாதி என்றே குறிப்பிடப்படுகிறது.
சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் ஜெனரலாக ஜூடித் ரேவின் நியமனம்
- சென்னையில் இருக்கும் அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதரக ஜெனரலாக ராபர்ட் ஜி புர்கேஸ் இருந்தார். இவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது தூதரக ஜெனரலாக ஜூடித் ரேவின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பான கட்டமைப்பு வசதி; சிறப்பான சிகிச்சை: தேசிய தரச்சான்று பெற்ற அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
- அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆண்டுதோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அப்போது, மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
- விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய்ப் பிரிவு, நெஞ்சக நோய்ப் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சிசு பராமரிப்புப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவ அறுவைச் சிகிச்சை அரங்கம், கண் நோய்ப் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- ஒவ்வொரு துறையின் செயல் பாடுகளையும் மதிப்பிட்டு மதிப் பெண்கள் வழங்கப்படும். 70 மதிப்பெண்கள் பெற்றால் அந்த மருத்துவமனைக்கு தேசியத் தர உறுதிச் சான்று வழங்கப்படும்.
- அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சை, கட்டமைப்பு வசதிகளை பாராட்டி மத்திய மருத்துவக் குழு 92 மதிப்பெண்களை வழங்கியுள் ளது.
- இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய தர உறுதிச் சான்று இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.