- வங்க கடலில் இந்திய ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுகின்றன.
- கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.
- இந்திய-ரஷ்ய கடற்படைகளின் 11-வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு அழைப்பின் பேரில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கியது.
- கூட்டுப்பயிற்சி தொடங்கிய தகவலை இந்திய கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.'இந்திரா நேவி-2020' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன.
- ரஷ்ய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடற்படை வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் உரிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.