மத்திய அரசின் 'லக் ஷயா' திட்டத்தில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை தேர்வு
- திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை கட்டடம், மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- தினமும், சராசரியாக, 20 முதல், 30 பிரசவங்கள் நடக்கின்றன. நுாற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 'லக் ஷயா' திட்டத்தில், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை, சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை பெறப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் மூன்றாம் இடம்
- மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும் 'நிடி ஆயோக்' அமைப்பு, போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, முதன் முறையாக, 'இ.பி.ஐ.,' எனப்படும், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது.
- அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அத்துடன், ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை, அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட, 11 பிரிவுகள் அடிப்படையிலும் மாநிலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- அனைத்து அம்சங்களிலும், ஏற்றுமதிக்கு தயாராக உள்ள கடலோர மாநிலங்களில், குஜராத், மஹாராஷ்ட்டிரம், தமிழகம் ஆகியவை, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதியின் பங்கை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில், தனி நபர் அடிப்படையிலான ஏற்றுமதி, 18 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்குத் தான் உள்ளது.
- இந்தப் பட்டியலில், நிலம் சூழ்ந்த மாநிலங்களில், முதல் மூன்று இடங்களை, ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநிலங்கள் பிடித்துள்ளன.
- இமாலய மாநிலங்களில், உத்தரகண்ட், திரிபுரா, இமாச்சல பிரதேசம் ஆகியவையும், யூனியன் பிரதேசங்களில், டில்லி, கோவா, சண்டிகர் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. 'டாப் 8' கடலோர மாநிலங்கள் : குஜராத் மஹாராஷ்டிரா , தமிழகம் , ஒடிசா , கர்நாடகா , கேரளா , ஆந்திரா , மேற்கு வங்கம்
திருச்சியை புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உத்தரவு
- இந்தியாவில் உள்ள அனைத்து புராதான சின்னங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 29 வட்டங்களாகவும் 3 சிறு வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
- இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவை அனைத்தையும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரித்து வருகிறது.
- இதில் ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள், சிக்கல் சார்ந்த திட்டங்கள், பாதுகாப்பிற்கான நினைவுச்சின்னங்களை அடையாளம் காணுதல், பாதுகாத்தல், மேலாண்மை மற்றும் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பொது பராமரிப்பு ஆகியவற்றை இந்த நிறுவனம் மேற்கொள்கின்றது.
- இந்நிலையில் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பண்டைய புராதான சின்னங்களை பராமரிக்கும் வகையில் கூடுதலாக 6 வட்டங்களை உருவாக்கவுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த புதிய 6 வட்டங்கள் குஜராத்தின் ராஜ்கோட், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி மற்றும் மீரட், மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் தமிழ்நாட்டில் திருச்சி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
- டெல்லி துணை வட்டத்தையும் டெல்லி வட்டத்துடன் இணைத்துள்ளதுடன், ஹம்பி துணை வட்டத்தில், தம்பார் வட்டத்திலிருந்து ஒரு சில மாவட்டங்கள் இணைக்கப்படுவதன் மூலம் ஹம்பி துணை வட்டம் முழு நீள வட்டமாக விரிவுபடுத்தப்பட்டவுள்ளது.
- மேலும் தொல்பொருள் இடங்கள் மற்றும் கலைப்பொருட்களைப் பாதுகாத்தல், பதிவு செய்தல் மற்றும் சுய அறிவிப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் பொருட்டு, கலாச்சார அமைச்சகம் இந்த புதிய வட்டங்களை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
- சென்னையில் சோழ மன்னர்களின் புகழ்பெற்ற நினைவுகளை மனதில் வைத்தும், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் 3,000 முதல் 4,000 ஆண்டுகள் பழமையான ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன என்பதால் மேலும் ஒரு புதிய வட்டம் தமிகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில் சைக்கிளை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ரயில்வே!
- ரயில்பாதைகளை டிராக் மேன் என்ற ஊழியர்கள்தான் நாள்தோறும் கண்காணிப்பார்கள். இதற்காக அவர்கள் பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்நிலையில்தான் அவர்களுக்காக இந்த ரயில் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலை பிரிவு பணிமனையில் இந்த சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தண்டவாளங்களில் செல்லும் வகையில் இதன் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மிதிவண்டிகள் அதிகபட்சமாக 15 கி.மீ வேகத்தில் நகரக் கூடியவை. 30 கிலோ எடை என்பதால் எளிதில் தூக்க முடியும் என்பதுடன் ஒருவரே இதனை கழற்றி, பின் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.
- மழைக் காலங்களில் ரயில் பாலங்களையும், இருப்புப் பாதைகளையும் விரைவாகக் கண்காணிக்க டிராக் மேன்களுக்கு இந்த சைக்கிள் மிகவும் உதவியாக இருக்கும்.
- மேலும் கொரோனா பரவலால் ரயில் சேவைகள் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதால், இருப்புப் பாதைகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ரயில் மிதிவண்டிகள் மூலம் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளலாம் என்றும் ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நுகர்வோர் தேர்வு வரிசையில் இந்திய அளவில் 'ஆவின்' 7-ம் இடத்தில் ஆவின் நிர்வாகம்
- 'பால் உற்பத்தியில் தமிழ்நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் சேவையில் ஆவின் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. புதிய, தூய, தரமான மற்றும் பாதுகாப்பான பாலினை நியாயமான விலையில் மக்களுக்குத் தொடர்ந்து வழங்குவதையே ஆவின் நிறுவனம் தன் அடிப்படையான குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
- ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், தரவு நுண்ணறிவு நிறுவனமான காந்தரின் உலக பேனல் பிரிவு (World panel division of data insights company Kantar) நடத்திய ஆய்வறிக்கையில் இந்திய அளவில் பல கோடி மக்கள் தேர்வு செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் வரிசையில் ஆவின் ஏழாவது இடத்தைப் (TOP CHOSEN BRANDS) பிடித்துள்ளது.
- இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் உள்ள பால் உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாதிரியான ஆய்வறிக்கைகள் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.