Type Here to Get Search Results !

74-வது சுதந்திர தின விழா முதல்வர் விருது பெற்றோர் பட்டியல் 2020

 

  • ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வகையான சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம் முதல்வர் விருதுகள் வழங்கப்படும். 
  • இந்த ஆண்டு கூடுதலாக கோவிட் தொற்றுப்பணியில் சிறப்பாக செயல்பட்ட முன் களப்பணியாளர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.தமிழக அரசிடம் விருது பெற்றோர் விவரம் வருமாறு:

டாக்டர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது

  • செல்வகுமார் என்பவரே ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர் நாகப்பட்டினர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவருடைய பள்ளி நாட்களில் அவருடைய நண்பர்கள் பலர் வறுமையின் காரணமாக தங்கள் படிப்பினை இடைநிறுத்தம் செய்ததை கண்கூடாகக் கண்டார். இதுவே இது போன்றதொரு அறக்கட்டளையினை தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது.
  • ஆனந்தம் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின்னர் கல்வியைத் தொடர இயலாத பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட முழுக் கல்விச் செலவினையும் ஏற்கிறது.
  • செல்வகுமாரின் நோக்கம் சில பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்லாது, வாழ்க்கைத் திறன் மற்றும் நீதி நெறிக் கல்வி ஆகியவற்றில் தொடர்ந்து பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுமாறு அவர்களை உருவாக்குவதே ஆகும்.
  • இந்த அறக்கட்டளையானது அதிகாரம் பெற்ற வேலை செய்யக்கூடிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் சமூக அக்கறையுள்ள அடுத்த தலைமுறையினரை உருவாக்க தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகரமான, புனிதமான, கொண்டாடத்தக்க வாழ்க்கையானது நேர்மறையாகப் பரவி, ஒரு காலகட்டத்தில் முழு சமுதாயமும் சமம் என்ற நிலையை அடையும்.
  • செல்வகுமார் கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை அவர்களுடைய உயர்கல்விக்கான நோக்கத்தை அடைய உதவி செய்துள்ளதுடன் அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவி செய்துள்ளார்.
  • 2020ஆம் ஆண்டு வரை, ஆனந்தம் அறக்கட்டளையானது மருத்துவம், பொறியியல் கல்வி, அறிவியல் மற்றும் இதர பல்வேறு பிரிவுகளிலும் பயிலும் 365 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது

  • ஆகஸ்டு 08 அன்று செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள் மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோர் கொட்டரை நீர்த்தேக்க பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த வேளையில், நான்கு இளைஞர்கள் உபரிநீர் வடிகால் வாய்க்காலில் குளிக்கச் சென்றதைக் கண்டு தண்ணீர் அதிகமாக உள்ளதெனவும், குளிக்க வேண்டாமெனவும், நீரில் இறங்குவது ஆபத்து எனவும் எச்சரித்துள்ளனர்.
  • பெண்களின் எச்சரிக்கையையும் மீறி நீரில் இறங்கிய நிலையில் பவித்ரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக வழுக்கி நீரில் விழுந்து தத்தளித்தனர். இவர்களைக் காப்பாற்றுவதற்காக கரையில் இருந்த செந்தில்வேலன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நீரில் இறங்கினர். நால்வரும் நீரில் மூழ்கக்கூடிய நிலையில் தத்தளித்ததால், கரையில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.
  • கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த செந்தமிழ், திருமதி முத்தம்மார் மற்றும் ஆனந்தவள்ளி தக்க சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டு தாங்கள் அணிந்திருந்த சேலையின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு, மறுமுனையை நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் தூக்கி வீசி, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பவித்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோரைக் காப்பாற்றினர். எனினும், அதீத முயற்சி எடுத்தும் மற்ற இரு இளைஞர்களையும் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.
  • தங்களது உயிரை துச்சமென மதித்து இரு உயிர்களைக் காப்பாற்றியமைக்காக செந்தமிழ், முத்தம்மாள் மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோருக்கு 2020ஆம் வருடத்திற்கான துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான ""கல்பனா சாவ்லா விருத"" வழங்கி அரசு சிறப்பிக்கிறது.

கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதலமைச்சரின் சிறப்பு விருது

  • இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகளாகிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
  • கொரோனா தொற்று (கோவிட்-19) காலத்தில் கரோனா பரவலை தடுக்க அரசுக்கு பல்வேறு நிர்வாக ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
  • மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகளை அங்கீகரிக்கும் வகையில் அரசு அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி சிறப்பிக்கிறது.

முதல்வரின் நல் ஆளுமை விருது:

  1. கருவூல கணக்குத் துறைக்கு மாநிலத்தின் நிதி, கருவூலம், மனிதவள மேலாண்மை மற்றும் ஓய்வூதிய மேலாண்மை ஆகிய பணிகளை கணினிமயமாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்த நிதி (ம) மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கருத்துவாக்கியமைக்காக,தற்போதைய நடைமுறையில் உள்ள வரவு-செலவு திட்டத் தயாரித்தலுக்கான நடைமுறைகள், மின்னணு தீர்வு அமைப்பு செயல்முறைகள், பொதுமக்கள் அரசுக்கு பணம் செலுத்தும் முறை, கணக்குகளின் தொகுப்பு ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடப்படுவதால் நிதி (ம) கருவூல செயல்பாடுகளை தானியக்கமாக்குவதற்கு ஒருங்கிணைந்த நிதி (ம) மனிதவள மேலாண்மைத் திட்டம் கருத்துருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நிதி, கருவூலம், மனிதவள (ம) ஓய்வூதிய மேலாண்மை செயல்முறை போன்றவை கணிப்பொறி மூலம் ஒன்றிணைக்கப்பட்டு விரைராக செயல்படுத்தப்படுகிறது.
  2. பெருநகர சென்னை மாநகராட்சி காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தி கோவிட்-19 நோய்த் தொற்றின் சங்கிலியை உடைத்ததற்காக,மண்டல மருத்துவ அலுவலர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் கண்டு காய்ச்சல் மருந்தகங்கள் செயல்படுவதற்கான இடத்தைத் தேர்வு செய்த பின்னர் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அவ்விடத்தில் முகாம்களை நடத்துகிறார்.இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எளிதில் அடையாளம் காணப்படுவதோடு அவர்களை எளிதில் தனிமைப்படுத்தவும் மற்றும் விரைவில் சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இதன்மூலம் பல்வேறு தரப்பினருக்கு நோய்த் தொற்று பரவாமலும், சமூகப் பரவலாக மாறாமலும் தடுக்க இயல்கிறது.
  3. வேளாண்மை, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் ஆதாரத்தினை பேணுவதற்கான புதுமையான உத்திகளை கையாண்டதன் மூலம் நுண்ணீர்ப் பாசனத்தில் நாட்டில் முதலிடத்தை தமிழ்நாடு பெறுவதற்கு உதவியதற்காக,இத்திட்டம் நுண்ணீர் பாசனம் மூலம் விவசாயத்தில் ஈடுபடாதவர்களையும் அத்திட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கோடு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் நுண்ணீர்ப் பாசனம் மூலம் விவசாயத்தில் ஈடுபடாதவர்கள் தொடர்பான விவரங்கள் தோற்றுவித்தல், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை மின்னணு மூலம் விரைந்து செயல்படுத்துதல் (ம) அதிகப்படியான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒன்றிணைத்தல் ஆகிய அங்கங்களை உள்ளடக்கியது.

மாற்றுத் திறனாளிகக் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள்

  1. சிறந்த தொண்டு நிறுவனம் -சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி:சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி என்ற நிறுவனம் 1912ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியினை செய்து வருகிறது. விடுதி வசதியுடன் கூடிய 180 செவித்திறன் குறைவுடைய மாணவர்கள் பயிலும் இந்நிறுவனத்தின் சைகை மொழி, விரல்கள் மூலம் எழுத்துப் பயிற்சி, உதடு அசைவின் மூலம் கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், அடுமனை, ஒப்பனை, தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 351 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளது.எனவே, செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுப் பணிக்காக நீண்ட கால சேவை செய்து வரும் இப்பள்ளிக்கு ""மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருது"" வழங்கப்படுகிறது.
  2. சிறந்த மருத்துவர்:டாக்டர் சியாமளா என்பவர் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து தற்பொழுது 35 ஆண்டுகளுக்கு மேலாக முற்றிலும் மரபு வழியிலேயே சிகிச்சை அளித்து வருகிறார். இவர் இயற்கை பிரசவ டாக்டர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். 1,144 முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கியும், தனது சுயசம்பாத்தியம் மற்றும் நன்கொடையின் மூலம் 68 லட்சத்திற்கு மேலாக மருத்துகளை வழங்கியுள்ளார்.காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகள் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன் உயர்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அரசு மற்றும் தனியார் அறக்கட்டளை மருத்துவமனைகளுக்கு அனுப்பி உதவிகள் செய்து வருகிறார். சுமார் ஒரு லட்சம் நடக்க இயலாத பயனாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் வழங்கி உதவியுள்ளார்.மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு வகையான பயனாளிகளுக்கு மரபு முறையில் சிகிச்சை மேற்கொண்டு சிறப்பான முறையில் தடுப்பு நடவடிக்கையுடன் கூடிய மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் சியாமளா, சேலம் மாவட்டம், அவர்களைப் பாராட்டி ""மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கான தமிழக அரசின் விருது"" வழங்கப்படுகிறது.
  3. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம்:சக்தி மசாலா நிறுவனம் நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 1,172 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 105 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.இதில் பெரும்பான்மையாக பார்வையற்றவர்கள் 40 நபர்களும், கை, கால் செயல் இழந்தவர்கள் 38 நபர்களும், மனவளர்ச்சி குன்றியவர்கள் 19 நபர்களும், செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் 8 நபர்களும் அடங்குவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே, இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்தியும், அவர்களுக்கு சமநிலை வழங்கியும், வசதிகள் செய்த கொடுத்தும், ஊக்கத்தொகை வழங்கியும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான ""மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த சிறப்பு தனியார் நிறுவனம்"" என்ற தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த சமூகப் பணியாளர்

  • சாந்தகுமார் என்பவர் கடந்த 36 ஆண்டுகளாக ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி நிறுவனத்தின் மூலம் சமூக பணியாற்றி வருகிறார். இவர் தம்முடைய நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.குழந்தைகளக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், பகல் நேர பராமரிப்பு மையம், கிராமிய மறுவாழ்வு திட்டம், சமுதாய மறுவாழ்வு திட்டம், ஒருங்கிணைந்த கல்வி, சிறப்பு கல்வி, மறுவாழ்வு பயிற்சி உள்ளிட்ட பல்nறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார்.8 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிராமப்புறங்களில் சுயதொழில் தொடங்க வழிவகை செய்துள்ளார். இவர் மூலம் சுமார் 3,515 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து அவர்களுக்கான பல்வேறு வகையான சேவைகளை செய்து வரும் திருச்சி மாவட்டம் சாந்தகுமாரைப் பாராட்டி, ""மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த சமூக பணியாளருக்கான தமிழக அரசின் விருது"" வழங்கப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் ""சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி:

  • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட், சேலம்.:சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்ட ஏதுவாக வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது.2019-2020ஆம் நிதியாண்டில், 1,465 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.33 கோடி மதிப்பீட்டில் சிறு தொழில்கள் தொடங்கி வருமானம் ஈட்டிட கடனுதவி வழங்கியுள்ளது.மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ்ந்திட ஏதுவாக அவர்தம் வருமானத்திற்கும் வாழ்வாதாரத்துக்கும் இவ்வங்கி உறுதுணையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி அளிப்பதில் முன்னிலையில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவையை பாராட்டி இவ்வங்கிக்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கான தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது.

மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள்

1.சிறந்த சமூக சேவகர் (பெண்களுக்காக செய்யப்படும் சிறந்த பணிக்காக)

  • கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோதனவள்ளி, சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.பி.வேலனின் மகள் ஆவார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக குடும்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.இவர் 1998 முதல் தனது குடும்ப ஆலோசனை சேவையைத் தொடங்கி சுமார் 45,000 குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது ஆலோசனையின் மூலம் 2,500 குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்ப நெருக்கடிகளில் இருந்து வெளியே வந்து மீண்டும் தம்பதிகளாக இணைந்துள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டத்தில், அவர் 45-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று 60,000 பெண் மாணவர்களுக்கு பொது இடங்களில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.விசாகா கமிட்டி உறுப்பினராகவும், டி.என்.சி.எஸ்.சி., பி.எஸ்.என்.எல்., காவல் அலுவலக ஆணையாளர், தபால்துறை போன்ற பல்வேறு அரசு நிறுவனங்களில் வழங்கப்பட்ட சேவைகளுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். அவர் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களிலிருந்து ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் தனது சமூக மற்றும் சட்ட ஆலோசனை சேவைகளுக்கு பல விருதுகளை பெற்றுள்ளார்.கோதனவள்ளி அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி அரசு சிறப்பிக்கிறது.

2.சிறந்த நிறுவனம் (பெண்களுக்கு சேவை செய்வதற்காக)

  • கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம் கடந்த 33 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் கிராமப்புற ஏழைகள், குறிப்பாக, பெண்கள் வாழ்வாதாரத்தின் நலன், மேம்பாடு மற்றும் வலுவூட்டலுக்காக செயல்பட்டு வருகிறது. பொருளாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் பெண்களை ஒருங்கிணைப்பதே பெண்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அந்த அடிப்படையில் க்ரீட் 3,007 சுயஉதவிக் குழுக்களை (சுயஉதவிக் குழுக்கள்) கடலூர் மாவட்ட கிராமங்களில் அமைத்துள்ளது.2,075 பெண்களுக்கு வங்கி மூலம் ரூ.64,32,38,000 வரை மைக்ரோ கடன் வசதிகள் வழங்கப்பட்டன. இது அந்தப் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்க உதவியது. சில சந்தர்ப்பங்களில், வரதட்சணை மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் காரணமாக பெண்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள். 
  • எனவே, கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம் பெண்கள் நலனுக்காக வழங்கிய சமூக சேவைகளை அங்கீகரிப்பதன் மூலம், கடலூர் மாவட்ட கலெக்டர், பெண்கள் சேவைக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான மாநில அளவில் சிறந்த நிறுவன விருதை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது  வழங்கப்படுகிறது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்காக முதல்வர் விருதுகள்:

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் முதல்வர் சிறப்பாக செயல்படும், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு முதல்வர் விருது சுதந்திர தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறந்த மாநகராட்சி :

  1. வேலூர் ரூ.25 இலட்சம்

சிறந்த நகராட்சிகள்:

  1. முதல் பரிசு விழுப்புரம் ரூ.15 இலட்சம்
  2. இரண்டாம் பரிசு கரூர் ரூ.10 இலட்சம்
  3. மூன்றாம் பரிசு கூத்தநல்லூர் ரூ. 5 லட்சம்

சிறந்த பேரூராட்சிகள்:

  1. முதல் பரிசு வனவாசி, சேலம் மாவட்டம் ரூ.10 இலட்சம்
  2. இரண்டாம் பரிசு வீரபாண்டி, தேனி மாவட்டம் ரூ. 5 இலட்சம்
  3. மூன்றாம் பரிசு மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம் ரூ. 3 இலட்சம்

முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள்

  • மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பின்படி, ""முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது"" நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது ரூ.50,000/- ரொக்கப்பணம், பாராட்டுச் சான்று மற்றும் பதக்கம் உள்ளிட்டதாகும். முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக தகுதியானவர்களைப் பரிந்துரை செய்ய அரசு, முதல்வரின் மாநில இளைஞர் விருது தேர்வுக் குழுவினை அமைத்துள்ளது.
  • இவ்விருதானது, இளைஞர்கள் சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மேம்படுத்தி, ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கிடவும், இளைஞர்கள் ஆற்றிய தலைசிறந்த பணிகளை அங்கீகரித்து, சமூக சேவையில் இளைஞர்கள் ஈடுபட ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.
  • 2020-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  1. அருண்குமார், மதுரை மாவட்டம்: இவ்விருதானது கைவிடப்பட்ட, ஆதரவற்ற மக்களுக்கு இவர் ஆற்றிய மகத்தான சேவைக்காக வழங்கப்படுகிறது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ உதவி வழங்குதல், கேட்பாரற்று இருக்கும் சடலங்களை அடக்கம் செவ்து போன்றவையும் இவரின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். இவர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு, மருத்தவ உதவி செய்வதுடன் தெருவிலிருந்து மீட்கப்பட்ட முதியோர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாமல் இருக்க இவர் தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் மாற்று தங்குமிடம் வழங்குதல் மூலம் உறுதி செய்கிறார்.
  2. ராம்குமார், கடலூர் மாவட்டம்: இவ்விருதானது ஆதரவற்ற மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு இவர் ஆற்றிய தன்னார்வ பணிகளுக்காக வழங்கப்படுகின்றது. இவர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம்களில் கலந்து கொண்டு நடத்தியுள்ளார். தற்போதுள்ள கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் இவர் ஆதரவற்றவர்களுக்கு நிவாரணப் பொருட்களும், சுகாதார மற்றும் இதரகளப்பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவற்றையும் வழங்கியுள்ளார். 80 நபர்களுக்கு தனது சொந்த முயற்சியில் தனியார் அமைப்புடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தி வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்.
  3. அம்பேத்கர், சென்னை: இவ்விருதானது ஜல்சக்தி அபியான், நெகிழியல்லாநிலை, தூய்மை இந்தியா போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இவரின் ன்ங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது. இவர் தூய்மை இந்தியா வேலைவாய்ப்பு முகாமில் ஆற்றிய அளப்பறிய பணிக்காக இந்திய அளவில் சிறந்த இளைஞர் / குழுத் தலைவர் பட்டம் வென்றுள்ளார். இவர் குழந்தை தொழிலாhர்களை மீட்பது, நீர்நிலைகளை புனரமைப்பது, மரங்களை நடுதல், சுவரோவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற சேவைகளையும் மேற்கொள்கிறார்.
  4. புவனேஸ்வரி, கடலூர் மாவட்டம்:இவ்விருதானது கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகளிடையே அரசின் பல்வேறு நலத் திட்டங்களான போஷன் அபியான், ஃபிட் இந்தியா மற்றும் தாய்ப்பால், கண்தானம், மகளிர் மேம்பாடு குறித்த தனது விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் ஆற்றிய சேவைக்கு வழங்கப்படுகிறது. இவர் குழந்தைகளிடையே தனது பொம்மாலாட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். இவர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்”.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel