மைகோவ் கொரோனாவுக்கு ‘கோவிட் -19 - சொசைட்டிக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ மற்றும் ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் கோவிட் -19 ஒட்டுமொத்த வெற்றியாளர்’ என்ற பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது:
- மத்திய அரசின் இரண்டு இணைய தளங்கள் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவுப் பிரிவுடன் இயங்கும் கொரோனா உதவி மையம் (MyGov Corona Helpdesk) மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகத் தலைமைப்பண்பு உச்சிமாநாடு (CogX 2020) ஆகியவற்றுக்கான இணைய தளங்கள் இந்த விருதினை வென்றுள்ளன.
- நுண்ணரிவு சார்ந்து, லண்டனில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில், இந்த தளங்களை நிர்வகிக்கும் ஜியோஹாப்டிக் நிறுவனம் விருதுகளை பெற்றுள்ளது.
'கெயில்' இந்தியா லிமிடெட் நிறுவன இயக்குனராக, இ.எஸ்.ரங்கநாதன் பொறுப்பேற்றார்
- கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், வர்த்தக பிரிவு இயக்குனராக, இ.எஸ்,ரங்கநாதன் பொறுப்பேற்றார்.இவர், சந்தைப்படுத்தல் துறையில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர்.
- எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், 35 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். இவர், எரிவாயு சந்தைப்படுத்தல், செயல்முறை மேலாண்மை, இயற்கை எரிவாயு, குழாய்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு, நிறுவன வள திட்டமிடல், தொழில்நுட்ப மேம்பாடு, தர உறுதி ஆகியவற்றில் மேலாண்மை பெற்றவர்.
- இதற்கு முன், 'இந்திரபிரஷ்ட கேஸ் லிமிடெட் மற்றும் கெயில்' ஆகிய நிறுவனங்களில், நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். மேலும், தஹேஜ் -- விஜய்பூர், விஜய்பூர்- - தாத்ரி மற்றும் பவானா நங்கல் குழாய் பதிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், முக்கிய பங்கு வகித்தார்.
- ஐ.ஜி.எல்., நிர்வாக இயக்குனராக, ஹரியானா, உ.பி., மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில், சில விரிவாக்க திட்டங்களுக்கு, ரங்கநாதன் தலைமை தாங்கி உள்ளார். திரவக் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப உறுப்பினர்.
- இந்திய தர நிலைகளின் அளவீட்டு வடிவமைப்பு மற்றும் பணியகத்திற்கான இந்திய தரநிலைகளின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆகவும் உள்ளார்.
- ஐ.ஜி.எல்., நிறுவனத்தில் இவரது செயல்பாட்டிற்காக, 2019ம் ஆண்டு 'போர்ப்ஸ் இந்தியா லீடர் ஷிப்' விருதும், 2019ல், 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' ஆண்டு விருதும், ஸ்டார் பி.எஸ்.யு., பிரிவில் பெற்றுள்ளார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்பு
- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவராகவும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்து முடித்த வேதியியல் பொறியாளரான இவர் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியன் ஆயில் இயக்குனர் குழுவில் ரீபைனரீஸ் இயக்குனராக இருந்தவர்.
- பெட்ரோலியம் ரீபைனரீஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறைகளில் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.
- போபாலில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவா்கள், அதிகாரிகள் முன்னிலையில், ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் குமாா் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
- மத்திய பிரதேச ஆளுநா் லால்ஜி டாண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது ஆளுநா் பொறுப்பு, உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ 5,625 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
- கொரோனா பரவலால் இந்தியாவில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன.
- இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும், லட்சகணக்கான மக்கள் வேலை வாய்ப்பினை பெறும் விதத்திலும் உலக வங்கி இந்த நிதி உதவியை வழங்கி உள்ளது.
- இந்தியாவிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் ரூ.5,625 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது.
- கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை இந்தியாவுக்கு உலக வங்கி சாா்பில் ரூ.38,475 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
- கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.20,625 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே அழகன்குளத்தில் ராஜராஜசோழன் வெளியிட்ட ஈழக்காசு, திருவிதாங்கூர் கால காசுகள் கண்டெடுப்பு
- ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இவ்வூர் 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிகமையமாகவும் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்நிலையில் அழகன்குளத்தில் ஒருவீட்டில் கண்டெடுக்கப்பட்ட காசுகள் மூலம் இவ்வூரின் வெளிநாட்டு வணிகத்தொடர்பு சமீபகாலம் வரை இருந்துள்ளதை நிரூபிக்கிறது.
- அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞருமான அசோகனின் முன்னோர்கள் வெளிநாடுகளில் வணிகம் செய்தவர்கள். அவர் பூர்வீகவீட்டின் பழமையான பெட்டிகளை சுத்தம் செய்தபோது அதில் ஒரு பெட்டியில் பழைய நாணயங்கள் இருந்துள்ளன.
- இதில் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக் காசு ஆகியவை இதில் முக்கியமானவை.
- இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு ஆகும். இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்தது ஆகும். இந்த காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, நான்கு பந்துகள் உள்ளன.
- அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. திரிசூலம், விளக்கும் உள்ளன. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். தேவநாகரி மொழியில் 'ஸ்ரீராஜ ராஜ' என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை போல உள்ளான்.
- இலங்கையை சோழர்கள் வென்றபின் அந்நாட்டின் புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.
- ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, திருப்புல்லாணி உள்ளிட்ட கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. தற்போது அழகன் குளம் பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதன் மூலம் இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டு பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
- திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் பணம் ஒன் என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டு ஆகும். இதனுடன் 825 ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்காசு மூலம்திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1921-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மன்னரைக் குறிக்க ஆர்.வி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
- இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகள். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையின் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
- மேலும் விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909இல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் இதில் உள்ளன.
ஆந்திராவில் புதிதாக 1,088 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்
- கொரேனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஆந்திராவில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதி மருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
- இதில் 656 ஆம்புலன்ஸுகள் நடமாடும் மருத்துவமனையாக '104' என்ற அழைப்பிற்காக இயக்கப்பட உள்ளது. இதில் 77 பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
- எஞ்சிய வாகனங்கள் அனைத்தும் '108' அழைப்பிற்கான சேவை ஆம்புலன்ஸாக இயக்கப்படவிருக்கின்றன.
- இவை கிராமப்புற சிகிச்சை மையங்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஒன்றிணைக்கும். இந்த நடமாடும் மருத்துவமனைகள், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் உடல்நிலை குறித்த சுகாதார அட்டையை பராமரிக்கும்.
- குழந்தைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று கூறினார். இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இந்த ஆம்புலன்ஸ்களில் நவீன மருத்துவ கருவிகளுடன் வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆம்புலன்ஸில் பணியில் இருக்கும் மருத்துவர், மற்றொரு மருத்துவருடன் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடத்த முடியும்.
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ராணுவ லெப்டினன்ட் ஜெனரலாக பெண் நியமனம்
- அடிப்படையில் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உள்ளதால் அவர்களின் மத சட்டதிட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அரசு வேலைகள் மற்றும் ராணுவம் உள்ளிட்ட உயர் துறைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் பெண்கள் ஆண்களை சார்ந்தே வாழவேண்டிய நிலை இருந்து வருகிறது.
- ஆனால் சமீப காலமாக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும், மாறி வரும் கால சூழ்நிலைக்கேற்ப தற்போது அனைத்து துறைகளிலும் பெண்களை அனுமதிக்க தொடங்கியுள்ளன.
- அதில் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக ஒரு பெண்ணை அந்நாடு நியமித்துள்ளது.
- மேஜர் ஜெனரலாக இருந்த பெண்மனி நிகர் ஜோஹர், தற்போது லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு பாகிஸ்தானின் முதல் பெண் அதிகாரியாக மாறியுள்ளார்.
- நிகர் ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இராணுவத்தின் மருத்துவப் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
- இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ராணுவத்தில் மூன்றாவது பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற நிகர் ஜோஹர், தற்போது லெப்டினன்ட் ஜெனரலாக உருவெடுத்துள்ளார்.
- இந்த தகவலை பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) இயக்குநர் ஜெனரல் மேஜ் ஜென் பாபர் இப்திகார் ட்வீட் செய்துள்ளார். இதனிடையே நிகர் ஜோஹரின் தந்தை மற்றும் கணவர் இருவரும் ராணுவத்தில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.