எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவருக்கு தனி ஒதுக்கீடு: அமைச்சரவை ஒப்புதல்
- எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூடியது.
- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட வகை செய்வது குறித்து ஆராய நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது கடந்த 8-ஆம் தேதியன்று தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.
சிவகளை அகழாய்வில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
- சிவகளையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடைக் கற்கள், செம்பினால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன.
- இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையினர் சிவகளையில் அகழாய்வுப் பணிகளை கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கினர். கடந்த 5-ஆம் தேதி 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
- இனவெறிக்கு எதிராக உலக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
- அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு மினியாபொலிஸ் நகரில் கருப்பின இளைஞரான ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இனவெறி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாகக் கூறி, இதனை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு
- கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- இந்த நாட்களில் வங்கிகள் 10 நாட்கள் மூடப்படும். கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
- ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளான 21, 28ம் தேதிகளில் மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும்.
- அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.