பாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் முதலீடு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
- பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான ரூ.20 லட்சம் கோடி நிதிச் சலுகை அறிவிப்புகளை, தொடர்ந்து 4வது நாளாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
- இதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,' என்று தெரிவித்தார்.
- அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை 'தற்சார்பு இந்தியா திட்டம்' என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து வருகிறார்.
- முதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
- இதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
- அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:நிலக்கரி: நிலக்கரி இறக்குமதியை குறைந்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்க, இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
- வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்காக நிலக்கரி துறையின் கட்டமைப்பை மேம்படுத்த ₹50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நிலக்கரி சுரங்க ஏல முறை, வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றப்படும். டன் ஒன்றுக்கு இவ்வளவு என்ற கட்டணம் நிர்ணய முறை நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் முடியும்.
- நிலக்கரி சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயுவும் ஏலத்தில் விடப்படும்.
- கனிமங்கள்: கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். சுரங்க துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
- விமான போக்குவரத்து: இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதன் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை ₹1,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 விமான நிலையங்களில் 3 விமான நிலையங்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு ₹2,300 கோடி நிதி உதவி கிடைக்கும்.
- 12 விமான நிலையங்களில் தனியார்கள் கூடுதல் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம், ₹13,000 கோடி வரையில் முதலீடு கிடைக்கும். 2ம் கட்டமாக மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தேர்வு செய்யப்படும்.
- சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள்: சமூக உள்கட்டமைப்பு தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இதற்கான திட்டம் விரைந்து முடிக்கப்படும். இதற்காக ₹8,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காக அரசு தரப்பிலிருந்து தரப்படும் 20 சதவீத நிதியுதவி 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
- விண்வெளி: விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படும். செயற்கை கோள், ஏவுதல் மற்றும் விண்வெளி தொடர்பான சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
- இஸ்ரோவின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.
- அணுசக்தி: மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், உணவு பாதுகாப்பிற்காக கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.
- அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க, தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும்.
- புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம், மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்.
- மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.
- மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைய சீர்த்திருத்தம் செய்யப்படும். குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது இறக்குமதி செலவை பெருமளவு குறைக்க உதவும்.
- ராணுவ தளவாடங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்
நலவாரியத்தில் அல்லாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு
- தமிழகத்தில் முடி திருத்துவோா் நல வாரியத்தில் 14 ஆயிரத்து 667 போ உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது முடக்கக் காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்கவில்லை.
- இதனால் நலவாரியத்தில் பதிவு செய்யாத நபா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.
- நலவாரியத்தில் அல்லாத முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்
மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
- சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக, மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே ஜங்ஷன் வழியாக தினமும், 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- கொரோனா ஊரடங்கிற்கு முன் வரை, ஜங்ஷனுக்கு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து சென்றனர்.முதல் பிளாட்பாரத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை, இரண்டாம் வகுப்பு பயணியர் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகங்கள் உள்ளன.
- ஆறு ரயில்வே லைன்கள் வழியாக, ரயில்கள் கையாளப்படுகின்றன. தெற்கு ரயில்வேக்கு கணிசமான வருவாய் ஈட்டி தருவதில், மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது.