புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம்: அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த மின் தேவை அளவான 12,021 மெகாவாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியின் பங்களிப்பு 5,932 மெகா வாட்டாக இருந்தது. (காற்று ஆற்றல் - 4,230 மெகா வாட், சூரிய ஆற்றல்- 1,702 மெகா வாட்) இது மொத்த மின் தேவை அளவில் ஏறத்தாழ 50 சதவீதம் ஆகும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மின் கட்டமைப்புக் கழகம் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையங்களை ஏழு மாநிலங்களிலும், அவை சாா்ந்த மின் பகுப்பு மையங்களிலும் நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது.
- மேலும் தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டுக்கான இலக்காகிய 1 லட்சத்து 75 ஆயிரம் மெகா வாட் திறனை அடைவதற்காகவும் இந்த மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசின் மின்துறை அமைச்சகம் சுமாா் ரூ.49 கோடி நிதி ஒதுக்கியது.
- இதன் தொடா்ச்சியாக மத்திய மின் கட்டமைப்புக் கழகம் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டன.
- அவற்றை, மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மற்றும் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தனா்.
- இதே போல், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்.
- தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் நிறுவுவதன் மூலம் 154 துணை மின் நிலையங்களின் (101 காற்றாலை மின்சக்தி மற்றும் 53 சூரிய மின்சக்தி துணை மின் நிலையங்கள்) மின் உற்பத்தி அளவை முன்கூட்டியே கணிக்கவும், நிகழ்நிலை மின் உற்பத்தியின் அளவைக் கண்காணிக்கவும் முடியும்.
- இதற்காக சோதனை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், 101 காற்றாலை மின்சக்தி துணை மின் நிலையங்கள் மற்றும் 53 சூரிய மின் நிலையங்களின் நிகழ்நிலை மின் உற்பத்தி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் மூலம் கண்காணிக்கப்பட்டது.
- இதைத் தொடா்ந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த மையங்கள் மூலமாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலின் நிகழ்கால மின் உற்பத்தி, நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.
- முன்கூட்டியே அறியப்படும் தொழில்நுட்பத்தால், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் அளவை ஒரு நாள் முன்னதாக மற்றும் ஒரு வாரம் முன்னதாக கணிக்க முடியும். மேலும் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும் உடனுக்குடன் அறியப்படுகிறது.
இந்திய பொருளாதாரம் 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தகவல்
- இந்திய பொருளாதாரம் 2019 அக்டோபர் - டிசம்பர் வரையான 3வது காலாண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தகவல் அளித்துள்ளது. 2019 ஜூலை - செப்டம்பர் காலாண்டை விட 3வது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2019 ஜனவரியில் 1.5 சதவீதம் ஆக இருந்த அடிப்படை தொழில்களின் வளர்ச்சி விகிதம் கடந்த மாதம் 2.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் நிலக்கரி உற்பத்தி 8 சதவீதமும் பெட்ரோல், டீசல் உற்பத்தி 1.9 சதவீதமும் மின் உற்பத்தி 2.8 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- ஜனவரியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உர வகைகளின் உற்பத்தி சுருங்கிவிட்டதாக அரசு தகவல் அளித்துள்ளது.
எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம்
- நாட்டில் உள்ள முக்கிய எட்டு துறைகள், கடந்த ஜனவரி மாதத்தில், 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கு நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், உள்கட்டுமான துறையில், 1.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
- நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில், உற்பத்தி முறையே, 8 சதவீதம், 1.9 சதவீதம், 2.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய், இயற்கை வாயு, உரம் ஆகிய துறைகள் வளர்ச்சி குறைந்து, எதிர்மறையாக உள்ளன. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி குறைந்து, 0.6 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோந்து கப்பல், 'வரத்' நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- இந்திய கடலோர காவல் படைக்கு, ஏழு அதி நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்க, எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன், 2015ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- அதன்படி, 'விக்ரம், வீரா, விஜயா, வராஹா' என, நான்கு ரோந்து கப்பல்கள், கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
- இந்நிலையில், 'வரத்' என்ற, ஐந்தாவது ஆழ்கடல்ரோந்து கப்பலை, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நடந்தது.
- 'வரத்' ரோந்து கப்பல், 2100 டன் எடை, ௧௫ மீட்டர் அகலம், 98 மீட்டர் நீளம் உடையது. 'ஆசிர்வாதம் வழங்குதல்' என பொருள்படும் வகையில், 'வரத்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. முழுமையாக இந்திய தொழில்நுட்பங்கள் அடிப்படையில், இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதில், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள், சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன. குறைந்த மாசை வெளியிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கப்பல் உருவாக்கப் பட்டுள்ளது.
- அதிகபட்சமாக, 26 நாட்டிகல் மைல் வேகத்திலும், தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., வரையிலும், இக்கப்பலால் பயணிக்க முடியும். இடைவிடாமல், 20 நாட்கள் வரை, தொடர் ரோந்து மற்றும் மீட்பு பணியில் ஈடுபட முடியும். இரட்டை இன்ஜின் பொருத்திய ஹெலிகாப்டர்கள், இந்தக் கப்பலில் இறங்க முடியும்.
டில்லி போலீஸ் கமிஷனராக ஸ்ரீவஸ்தவா நியமனம்
- டில்லி போலீஸ் கமிஷனராக உள்ள அமுல்யா பட்நாயக் பிப்.,29 ஓய்வு பெற உள்ளதை தொடர்ந்து, புதிய போலீஸ் கமிஷனராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை சரியாக கையாளவில்லை என டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் மீது விமர்சனம் எழுந்தது.
- இதனையடுத்து எஸ்என் ஸ்ரீவஸ்தாவாவை சட்டம் ஒழுங்கு சிறப்பு கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் அடுத்த போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கான உத்தரவை டில்லி கவர்னர் பிறப்பித்துள்ளார். 1985ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஸ்ரீவஸ்தவா, மார்ச் 1ம் தேதி பொறுப்பேற்று கொள்ள உள்ளார்.
- பலி அதிகரிப்பு இதனிடையே, டில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 265 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டை திட்டம்: நாட்டிலேயே முதலில் அமலுக்கு கொண்டு வந்த மத்திய பிரதேசம்
- நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் தங்களுக்கென பிரத்யேக முத்திரைகளுடன் வாகனத்திற்கான பதிவு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்களை வழங்கி வருகின்றன.
- ஒவ்வொரு மாநிலத்துக்கும் இது மாறும். எனவே அதை சீரமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் சீரான அடையாளங்களுடைய அட்டையாக வழங்கும்படி கூறியிருந்தது. இந்த அறிவிப்பு ஒராண்டுக்கு முன்பு வெளியானது.
- இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் வாகனங்களுக்கான பதிவெண்ணில் ஒருங்கிணைந்த அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டிலேயே இத்திட்டத்தை கொண்டுவரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் தான்.
- ஒருங்கிணைந்த வாகன ஓட்டுநர் உரிம அட்டை திட்டத்தையும் மத்திய பிரதேசம் கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டம் ஏற்கனவே உத்தர பிரதேசம் அமல்படுத்தி உள்ளது.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கான ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டுகள் ஒவ்வொன்றும் க்யூஆர் குறியீட்டை கொண்டிருக்கும்.
- இது அட்டைகளில் அச்சிடப்பட்ட தரவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும். இந்த அட்டைகளில் பெயர், முகவரி, இரத்தக் குழு, பிறந்த தேதி, வைத்திருப்பவரின் புகைப்படம், செல்லுபடியாகும் காலம் மற்றும் பிற விவரங்கள் ஒரு சிப்பில் சேமிக்கப்படும் என்றார்.
பயணிகளுக்குப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம்
- இயற்கைப் பேரழிவுகள், நாட்டின் சுகாதாரம், வன்முறைகள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு காரணிகளை ஒப்பிட்ட `insurly' என்கிற வலைதளம் 2020-ல் பயணிகளுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கனவு நாடான சுவிட்சர்லாந்து (Switzerland), 100-க்கு 93.4 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகள் மற்றும் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் போன்ற போக்குவரத்து அபாயங்களை வைத்துப் பார்க்கும்போது 98 சதவிகிதம் பாதுகாப்பான பயணங்களுக்கு சுவிட்சர்லாந்து உறுதியளிக்கிறது.
- சிங்கப்பூர் 92.7 மதிப்பெண்ணுடன் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் ஆசிய அளவில் முதல் இடத்திலும் உள்ளது. நீங்கள் சிங்கப்பூரில் பயணம் செய்யப் போகிறவராக இருந்தால் 93 சதவிகிதம் இயற்கை இடையூறுகளற்ற பயணங்களை மேற்கொள்ள முடியும்.
- மூன்றாம் இடத்தில் உள்ள நார்வேக்கு 91.1 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் அதிக அளவில் இருப்பதால் வட ஐரோப்பாவில் உள்ள இந்த அழகிய நகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
- இப்பட்டியலில் ஆஸ்திரேலியா 31-வது இடத்திலும், பிரான்ஸ் 32-வது இடத்திலும், ஐக்கிய அரபு நாடுகள் 37-வது இடத்திலும், பொருளாதாரத்தில் நம்பர் ஒன் நாடான அமெரிக்கா 44-வது இடத்திலும் உள்ளது.
- 42.6 மதிப்பெண்களுடன் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ள தெற்குச் சூடான், காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் பயணிகளுக்கு ஆபத்தான நாடுகளாக அறியப்படுகின்றன.
ரூ.3,195 கோடி நிதியுதவி; பாக்., - ஐ.எம்.எப்., ஒப்பந்தம்
- விலைவாசி உயர்வு, அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிக்க, சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடம், பாக்., கடன் வாங்கியுள்ளது.
- அத்துடன், பன்னாட்டு நிதியத்திடம், 42 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, வெளிநாட்டு கடன்களை சமாளிக்க, உடனடியாக, 7,000 கோடி ரூபாயும், எஞ்சிய தொகையை, மூன்று ஆண்டுகளில், தவணை முறையில் பெறவும், பாக்., ஒப்புக் கொண்டது.
- பன்னாட்டு நிதியம் கூறும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், பாக்., நிதியுதவியை பெற முடியும் என்பது, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
- அதன்படி, இரண்டாம் கட்ட நிதியுதவியை பெறுவது தொடர்பாக, பாக்., எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள், சீர்திருத்தங்கள் குறித்து, அந்நாட்டின் உயரதிகாரிகள் மற்றும் பன்னாட்டு நிதியத்தின் பிரதிநிதிகள் இடையே, இரண்டு வாரங்களாக நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இதற்கு, வரும் ஏப்ரலில், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், பாக்.,கிற்கு 3,195 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கும்.