உத்தரமேரூர் அருகே பல்லவர் காலத்து சிலைகள் கண்டெடுப்பு
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காவனூர் புதுச்சேரி கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி, ஐயனார் சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இக்கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை தேவி சிலை 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. 8 கரங்களுடன் வலது புறம் பெரிய சூலாயுதம் காணப்படுகிறது.
- தலையில் மகுடமும், காதில் குழையும், கழுத்தில் அணிகலன்கள், கைககளில் வளையல்கள், கால்களில் சிலம்புடன் எருமை தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறது.
- கொற்றவை தேவியின் இடது புறம் தன் தலையை தானே வாளால் வெட்டி பலி கொடுக்கும் அரகண்ட வீரன் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.
- இதே கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே உள்ள புளிய மரத்தடியில் கவனிப்பாரின்றிக் கிடந்த கல்லை ஆய்வு செய்தபோது அந்தக்கல்லில் ஐயனார் சிலை செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
- ஐயனார் சிலை 4 அடி அகலமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது.
- அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள ஐயனார் சிலையின் இருபுறங்களிலும் மகளிர் கையில் சாமரம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கின்றனர். ஐயனாரின் காலடியில் இரண்டு குதிரைகள் காணப்படுகின்றன என்றார்.
- கண்டெடுக்கப்பட்ட இந்த ஐயனார் சிலையும், கொற்றவை சிலையும் 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது என்றார்.
`2015ல் எடுத்த ஆக்ஷன்... உயர்ந்த பிறப்பு விகிதம்'- நாமக்கல் மாவட்டத்துக்கு கிடைத்த விருது
- தேசிய அளவில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' எனும் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, தமிழகத்தின் நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
- `பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' எனும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஜனவரியில் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேசிய அளவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களும், தமிழகத்தின் திருவள்ளூர், நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களும் தேர்வுசெய்யப்பட்டன.
- டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.
- திருவள்ளூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை சிறந்த முறையில் உயர்த்தியதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், அதன் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தற்காக, அதன் ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்ததையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் தஹில்ரமணி ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
- நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை முடிவு செய்வார் எனத் தெரிகிறது.
ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற SC உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சுற்றறிக்கை
- ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- ஒரு வேலை நிரந்தர தொழிலாளர்களின் வேலையும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலையும் வெவ்வேறாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் ஊதியம் தொடர்பாக என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையே கடைபிடிக்கலாம்.
- ஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் வேலையை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவுகிறது.
அமெரிக்க ஓபன்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் இறுதி போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு - அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் பலப்பரிட்சை நடத்தினர்.
- பரபலப்பாக சென்ற இப்போட்டியில் பியாங்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதனால் கனடா நாட்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பியான்கா பெற்றுள்ளார்.
துலிப் கோப்பை: இந்திய ரெட் அணி சாம்பியன்
- துலிப் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய கிரீன் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ரெட் அணி.