சென்னை பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு
- சென்னையில் அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். ரூ.6,087 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி
- இந்திய சிறைகளில் நடக்கும் வன்முறைகள் மற்றும் கைதிகளின் கூட்ட நெரிசல் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் வகையில் 199 புதிய சிறைகளை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
- இந்திய சிறைகளின் நிலை குறித்து காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதைத்தொடர்ந்து தற்போது சிறைகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய சிறைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, 1572 சிறைக்காவலர்கள் தங்குமிடம் மற்றும் 8568 சிறை அலுவலர்கள் தங்குமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய 199 சிறைகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இதில் தாதாக்கள் மற்றும் தீவிரவாதிகளை எப்படி கையாளுவது என்பது தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
வானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
- ஒடிஸா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா என்ற ஏவுகணைக்கான சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை அஸ்திராவாகும்.
- அதில் வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை அஸ்திரா, சுகோய் 30 ஐ ரக போர் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
- நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதையடுத்து சோதனை வெற்றி அடைந்துள்ளது. மணிக்கு 5,555 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அஸ்திரா, 70 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் குறிவைத்து தாக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் ஆரோக்கியத்தைப் பேணும் திட்டம் அறிமுகம்
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிறப்பு செயல் திட்டத்தை (ப்ரோ ஹெல்த்) அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துடன் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஒப்பந்தம்
- தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகமும் (ஐ.ஐ.எப்.பி.டி.), திருச்சி தாயனூரிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும் (என்.ஆர்.சி.பி.) செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
- இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாழையிலிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் தயாரித்தல், மக்கக்கூடிய பிளாஸ்டிக், உண்ணக்கூடிய பேக்கிங் பொருள்களை உருவாக்குதல், வாழையை நீண்ட நாள் பாதுகாக்க மற்றும் பழுக்கும் காலத்தை அதிகப்படுத்துவதற்கான நானோ தொழில்நுட்பத்திலான சென்சார்களை உருவாக்குதல் போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், வாழைப்பூ, தண்டு மற்றும் பழங்களில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உருவாக்கப்படவுள்ளன.
- வாழை சார்ந்த ஆராய்ச்சியில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நவீன பொருள்கள் உருவாக்குவதிலுள்ள இடைவெளியைப் போக்குவதற்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைப் புரியும்.
- வாழையில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வீணாகிறது. அவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளவே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.