தமிழக அமைச்சரவையில் மணிகண்டன் நீக்கம்
- முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.
- தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் பொறுப்பாக , வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அளிக்கப்படுகிறது என ஆளுநர் மாளிகையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார் மம்தா
- கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
- வெண்கலத்தாலான எழுத்தோவியம் தீட்டுவது போன்ற கருணாநிதியின் சிலை 6.5 அடி உயரமும், 6.3 அடி அகலமும் கொண்டதாகும்.
- சிலையின் பீடம் மைசூர் சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களால் முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. பீடம் 30 டன் எடை கொண்டது. சிலையை சிற்பி தீனதயாளன் வடித்துள்ளார்.
- பீடத்தில் கருணாநிதியின் 5 கட்டளைகளான "அண்ணா வழியில் அயராது உழைப்போம்', "ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்', "ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்', "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி', "வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம்' ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள் அகலமான செங்கல் சுவர் கட்டடம் கண்டுபிடிப்பு
- கீழடியில் தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பலரது நிலங்களில் தோண்டப்பட்ட 20 -க்கும் மேற்பட்ட குழிகளிலிருந்து மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
- இந் நிலையில் புதன்கிழமை போதகுரு என்பவர் நிலத்தில் அகலமான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களை விட இவை அகலமானவை என தெரியவந்துள்ளது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது.
- ஏற்கனவே 6 உறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 7 -ஆவது உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
4வது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு வீடு, வாகன கடன் இஎம்ஐ குறையும்
- ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கை வெளியிடுகிறது. இதில் 6 பேர் குழுவில் எடுக்கப்பட்ட பெரும்பான்மை கருத்துக்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 5ம் தேதி துவங்கியது.
- நேற்று கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.35 சதவீதம் குறைத்து 5.4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
- இதனால் இஎம்ஐ குறையும். வழக்கமாக ரெப்போ வட்டி கால் சதவீதம்தான் குறைக்கப்படும். தற்போது அதை விட கூடுதலாக குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ 5.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்பு கணித்திருந்தது. இது தற்போது 6.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. அடுத்த நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடக்கிறது.
24 மணி நேரமும் என்இஎப்டி அனுப்பலாம்
- ஆன்லைன் வங்கிச்சேவை பயன்படுத்துவோர், என்இஎப்டி முறையில் வேறு வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி முறையில் பணம் அனுப்புவதற்கு கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
- இதை தொடர்ந்து, என்இஎப்டியில் 2 லட்சம் வரை பணம் அனுப்பலாம். ஆர்டிஜிஎஸ் முறையில் ₹2 லட்சத்துக்கு மேல் உள்ள பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
- தற்போது, என்இஎப்டி முறையில் 2வது, 4வது சனிக்கிழமை, விடுமுறை நாட்கள் தவிர வங்கி வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும்.
- வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணம் அனுப்ப முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒப்புதல் அவசியம் - மேகதாதுவில் அணைகட்ட அனுமதி மறுப்பு
- காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் அதற்கு மத்திய சுற்றுசூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது.
- இது சம்மந்தமாக டெல்லியில் நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுக் கூட்டம் கடந்த ஜூலை 19 ஆம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூடுதல் விவரம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- மேலும் இந்த அணைக் கட்ட தமிழக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அம்மாநிலத்தின் ஒப்புதல் இன்றியமையாதது எனவும் இருமாநிலங்களும் இணைந்து இணக்கமான தீர்வை எடுத்தால் மட்டுமே மேற்கொண்டு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 -ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை 33 - ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனம் குறித்த மசோதாவுக்கு மக்களவையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 33-ஆக அதிகரிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் சிந்து
- அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகை போர்ப்ஸ். சர்வதேச விளையாட்டு அரங்கில் அதிக வருமானம் பெறும் 'டாப்-15' வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சம்பளம், பரிசுத்தொகை, விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டுள்ளது.
- கடந்த ஜூன் 1 2018 முதல் ஜூன் 1 2019 வரையிலான காலகட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இந்திய பாட்மின்டன் நட்சத்திரமான சிந்து, 24, இடம்பெற்றுள்ளார். இவர், ரூ. 39 கோடியுடன் 13வது இடத்தை, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மடிசன் கீசுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
- சிந்துவுக்கு பரிசுத்தொகை ரூ. 4 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ. 35 கோடி, விளம்பர ஒப்பந்தம் மூலம் கிடைத்துள்ளது.
- கடந்த 2018ல் நடந்த உலக பாட்மின்டன் டூர் பைனல்சில் கோப்பை வென்றார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நட்சத்திரம் சிந்து மட்டுமே.
- செரினா ஆதிக்கம்இப்பட்டியலில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ், 'நம்பர்-1' இடத்தில் உள்ளார். சமீபத்திய விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில், பைனல் வரை முன்னேறிய இவர், ரூ. 207 கோடி வருமானம் பெற்றுள்ளார்.
- கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற, ஜப்பானின் நயோமி ஒசாகா, இரண்டாவது இடம் பிடித்தார். இவர், நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில், ரூ. 172 கோடி வருமானம் பெற்றுள்ளார்.
- இவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் முகுருஜாவுடன் 10வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீராங்கனை அலெக்ஸ் மார்கன் (12வது இடம்), ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா (7) உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.