தமிழகத்தில் முதன் முறையாக பால் வழங்க ஏ.டி.எம்., மையம்
- தமிழகத்தில் முதன் முறையாக, அரூரில், பால் வழங்க, ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கொளகம்பட்டியைச் சேர்ந்தவர், முருகன், 40; விவசாயி. பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், 12 ஆண்டுகளாக, விவசாயிகளிடம் இருந்து, பாலை கொள்முதல் செய்து, தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வந்தார்.
- மக்களுக்கு, 24 மணி நேரமும், பால் வழங்க திட்டமிட்ட அவர், ஹரியானா மாநிலத்தில் இருந்து, 4 லட்சம் ரூபாய்க்கு, இயந்திரம் வாங்கி வந்து, அரூர், நான்கு ரோட்டில், இரண்டு மாதத்திற்கு முன், பால் வழங்கும், ஏ.டி.எம்., மையத்தை நிறுவினார். தினமும் சேகரிக்கும் பாலை, மிஷினில் நிரப்பி விடுகிறார்.
- இதில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான அளவு பாலை, பணம் செலுத்தி பெறலாம்.
- பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ள இந்த பால் வழங்கும் ஏ.டி.எம்., மையம், தமிழகத்தில் முதன் முறையாக, அரூரில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சாரப் பேருந்து இயக்கம்: முதல்வர் தொடக்கி வைத்தார்
- வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கும் நோக்கில் தமிழக முதல்வர் முன்னிலையில் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், லண்டன் மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சி-40 அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 64 நகரங்களுக்கு 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 525 மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதற்கான முன்னோட்டமாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கான புதிய மின்சார பேருந்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
செய்யாறு அருகே பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கீழ்பழந்தை கிராமத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பல்லவர் கால கல்வெட்டும், விஜயநகர கால கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- நிருபதுங்கவர்மனின் ஆட்சியில் 16-ஆவது ஆண்டில் (கி.பி.866) கீழ்பழந்தையில் உள்ள மகாதேவர் கோயில் வழிபாட்டிற்காக காலூருடையான் என்பவர் கழஞ்சு பொன் கொடுத்து, இவற்றின் மூலம் வரும் வட்டியைக் கொண்டு, தினந்தோறும் நாழி அரிசியும் உழக்கு நெய்யும் பூசைக்கு வழங்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
- இந்தக் கல்வெட்டு நீண்ட செவ்வக வடிவ கல்லில் இருபுறங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் முற்றிலும் பொரிந்த நிலையில் காணப்படுகின்றன.
- விஜயநகர கால கல்வெட்டு கி.பி.1597-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு இரு துண்டுகளாகச் சிதைந்து காணப்படுகிறது. இந்தக் கள ஆய்வின்போது, இப்பகுதியில் பல்லவர் கால விநாயகர், சண்டிகேசுவரர் சிற்பங்கள் ஆகியவையும் கண்டு பிடிக்கப்பட்டன.
கீழடி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில், திங்கள்கிழமை 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.
- இந்த தொட்டியானது, 3 அடி உயரம், 3 அடி நீளம், இரண்டரைஅடி அகலத்தில் செங்கற்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம் அறிமுகம்
- நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் மற்றும், காவல்துறையினருக்கான சிறப்பு ரோந்து வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
- இந்த தக்காளி கூழாக்கும் இயந்திரம்,இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருட்களின்விற்பனை மந்தமாகும் நிலையில், விவசாயப்பொருட்கள் வீணாகமல் இருக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்கவும் இந்த இயந்திரம் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- இதில், போக்குவரத்து துறை சார்பில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ளபெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கானரோந்து வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டது.
- இந்த இயந்திரம் மூலம் தக்காளி, நெல்லிக்காய், பப்பாளி, மாம்பழம் உள்ளிட்டவைகளை மதிப்பு கூட்டப்பட்ட ஜாம், பழக்கூழ் போன்றவைகளாக மாற்றிக்கொள்ளலாம்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி
- தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
- மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
- அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கல்வி தொலைக்காட்சி அலுவலகம் செயல்பட உள்ளது. 53 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இதில் ஒளிபரப்பப்படும்.
- மழலையர் தொடங்கி முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி வரை ஒளிபரப்பாக உள்ளது. ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நற்பண்புகளை கொண்ட கதைகள் தொலைக்காட்சியில் இடம்பெறும். தமிழ், ஆங்கில மனப்பாடப் பகுதிகள், இசை, பாடல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பு நீக்கம்
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- அதற்கு பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
- பிரான்ஸ் பியாரிட்ஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவும் பியாரிட்ஸ் சென்றுள்ளார்.
- ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதற்க்கான ஏற்படுகளை சுரேஷ் பிரபு கவனித்து வருகிறார்.
கர்நாடகாவில் துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்பா சவடி ஆகியோர் நியமனம்
- கர்நாடகாவில் துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்பா சவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- துணை முதல்வர் கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு கூடுதலாக பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதி: ஆர்பிஐ ஒப்புதல்
- ஆர்பிஐ வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றின் மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் உபரி நிதியில் 14 சதவீதத்தை கைவசம் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை அந்நாட்டு அரசிடம் பகிர்ந்தளித்து வருகின்றன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.
- இதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது.
- இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
- இக்குழுவில் ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார், ஆர்பிஐ துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன், ஆர்பிஐ மத்திய வாரிய உறுப்பினர்கள் பாரத் தோஷி, சுதீர் மன்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- இது குறித்தான அறிக்கையைத் தாக்கல் செய்ய அக்குழுவுக்கு 90 நாள்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது பின்னர் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
- இந்நிலையில் ஆர்பிஐ மத்தியக் குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அக்டோபரில் வருகிறது முதல் 'தனியார் ரயில்' - இந்திய ரயில்வே அறிவிப்பு
- ரயில்வேயில் சில ரயில்களை தனியார் இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி-யின் (IRCTC) வசம் 2 தேஜாஸ் ரயில்களை தனியாருக்கு விட அரசு அனுமதித்துள்ளது.
- இந்த ரயில்களின் இயக்கச் செலவு, பயணச் சீட்டு விற்பனை ஆகியவற்றை மட்டும் தனியார் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது.
- அக்டோபரில் முதல் தனியார் ரயில் டெல்லி, லக்னோ இடையே இயக்கப்பட உள்ளது.அந்த ரயிலில் பயணிகளுக்கு 50 லட்ச ரூபாய் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ரயில் தாமதமானால், தாமதமாகும் நேரத்துக்கேற்ப இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.
பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்
- பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியாவின் வீராங்கனை மானஸி முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்