தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட பேருந்து முனையம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
- சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரபி கல்லூரி அருகே 66 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான பேருந்து முனையம் (பஸ் போர்ட்) தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் அமைக்கப்பட உள்ளது.
- சேலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 948 கோடி மதிப்பில் குடிநீர் வழங்க ரூ.165 கோடியும், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு ரூ.145 கோடியும், ரூ.92 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி திறப்பு
- சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
- சேலம் மணியனூரில் தற்காலிக அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். கோவை அரசு சட்டக்கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் சேலம் கல்லூரி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 பேர், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 பேரை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் மிக நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு
- கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது.
- இதைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை சார்பில் 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், மத்திய தொல்லியல் துறை தனது அகழாய்வுப் பணியை அத்துடன் நிறுத்திக் கொண்டது.
- இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு, ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழக அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- இந்த அகழாய்வுப் பணிகள், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்டுள்ளன.
- நவீன கட்டுமானம் படுக்கை வசத்தில், செங்கற்களை ஒரு வரிசையாகவும் உயரவாக்கில், ஒரு வரிசையாகவும் வைத்து, கட்டடம் கட்டியுள்ளனர்.மேலும், சுவர் சாயாமல் இருக்க, உயர வரிசை செங்கற்களுக்கு நடுவே, படுக்கை வசத்திலும், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரின் தன்மையை காணும் போது, படைக்கலன் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
- முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரிய சோரகை பகுதியில் குறைதீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் 5 முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர்.
மகாராஷ்டிரா ராஜ்பவனில் 'பங்கர் மியூசியம்' திறப்பு
- மகாராஷ்டிரா மாநிலம் கவர்னர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பவனில் 15ஆயிரம் சதுரஅடி பரபப்பளவிலான 'பங்கர் மியூசியம்' எனப்படும் பதுங்கு குழி அருங்காட்சியகத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
- இந்த மியூசியம் வரும் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த ராஜ்பவனில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்ட பதுங்கு குழிகள் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பதுங்குகுழிகள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
- அதன்படி, ராஜ் பவனின் வரலாற்றையும் மகாராஷ்டிரா வின் பாரம்பரியங்களையும் விளக்கும் வகையில், ஹாலோகிராபிக் திட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேலும், அந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஒரு மெய்நிகர் ரியாலிட்டி அறையில் ராஜ் பவனின் வரலாற்றை விவரிக்கும் ஆடியோ காட்சி அறைக்கு சென்று ஜனாதிபதி பார்வையிட்டார்.
பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
- பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
- அரசு முறை பயணமாக வரும் 23, 24ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 24, 25 ஆகிய தேதிகளில் பக்ரைனிற்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை 2வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மித்
- டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
- பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்மித், தண்டனை காலம் முடிந்து மீண்டும் களமிறங்கி விளையாடி வருகிறார்.
- இங்கிலாந்து அணியுடன் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய அவர் (144, 142), லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் 92 ரன் அடித்து அசத்தினார்.
- இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட தரவரிசையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். எனினும், இருவருக்கும் இடையே 9 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளதால் முதலிடத்துக்கான போட்டி கடுமையாகி உள்ளது.