சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசு விருது
- மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் ஆண்டுதோறும் உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் காப்பகங்களுக்கு பல்வேறு பிரிவின்கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- அதன்படி, இந்த ஆண்டு புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகம் கடந்த 2008-இல் தொடங்கப்பட்டதாகும். 1,411 சதுர கி.மீ. கொண்ட இந்த காப்பகம் தமிழ்நாட்டின் மிகப் பெரிய புலிகள் காப்பகமாகும்.
பழனி அருகே மலைப்பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம்
- திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் மலைப் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம் கண்டறியப்பட்டுள்ளது.
- மலையின் தென்கிழக்கு பகுதியில் பிரம்மாண்ட அளவிலான பெருங்கற்கால கல்திட்டை எனப்படும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.பெரிய அளவிலான 3 பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துள்ளது போல இது அமைந்துள்ளது.
- இறந்தவர்கள் நினைவாக, புதைத்த இடத்திலோ அல்லது வேறு பகுதியிலோ இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- இதே போன்ற வடிவமைப்பு கொண்ட கல் திட்டைகள் ஆஸ்திரேலியாவில் ஊரூ என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இப் பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்கள் தமிழர்களை போன்றே உள்ளது. தமிழர்கள் பயன்படுத்திய வளரி என்ற ஆயுதமும், அவர்கள் பயன்படுத்தும் பூமராங் என்ற ஆயுதமும் ஒரே வடிவமைப்பை கொண்டது.
- இவர்கள் நெற்றியில் இடும் குறியீடு பழனியை அடுத்த ரவிமங்கலத்தில் கிடைத்த பண்டைய கால முதுமக்கள் தாழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு வசிக்கும் பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- அண்மையில், அப் பழங்குடியினரிடமும், தமிழகத்தின் கடலோரப் பகுதி தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம்130 வகையிலான மரபணு பரிசோதனையில் இருவருக்குமிடையே ரத்த மாதிரிகள் ஒன்றாக இருப்பதை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில், 'ரேஷன் போர்ட்டபிலிட்டி' முறை அமல்
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், அம்மாநில குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளன. ஆக., 1ம் தேதி முதல், 'ரேஷன் போர்ட்டபிலிட்டி' முறை, சோதனை முறையில் துவங்கப்பட உள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் சார்பில், மக்களுக்கு, குடும்ப அட்டைகள் வழங்கி, வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு, மானிய விலையில், அரிசி, கோதுமை, ராகி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
- இந்நிலையில், ஒரு மாநிலத்தில் வசிப்போர், வாழ்வாதாரத்துக்காக, அருகில் உள்ள வேறு மாநிலத்திற்கு குடியேறும் போது, தங்களின் குடும்ப அட்டையை பயன்படுத்த முடிவதில்லை. இது, மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
- மேலும், மூன்று மாதங்களுக்கு, தொடர்ந்து குடும்ப அட்டையை பயன்படுத்தாவிட்டால், அது ரத்து செய்யப்படுவதும் வழக்கத்தில் உள்ளது.இதன் மீது, விசாரணை மேற்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, குடியேறும் இடங்களில் பயன்படுத்தும் வகையில், 'ரேஷன் போர்ட்டபிலிட்டி' என்ற திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார்.
- இதுகுறித்து, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடமும் ஆலோசித்தார்.இதையடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கிடையில் உள்ள குடும்ப அட்டைகளை ஒருங்கிணைக்க, இரு மாநில முதல்வர்களும், ஒரு மனதாக முடிவு செய்தனர்.
- இதுகுறித்து, மத்திய அரசிடம் கலந்துரையாடி, முறையான அனுமதி பெற்றனர். இதற்கான ஒப்பந்தம், இரு மாநில அரசுகளுக்குமிடையே கையெழுத்தானது. எனவே, இதற்கான பணிகள், ஆக., 1ம் தேதி முதல், சோதனை முறையில் துவக்கப்பட உள்ளது.
14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு
- கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா முதல்வர் ஆகியிருக்கிறார். எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.
- இந்நிலையில் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருப்பதால், மொத்தன் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் 17 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 207ஆக குறைந்துள்ளது.பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 106 உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் எடியூரப்பா ஆட்சியமைப்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது.
- மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் அறிவித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் அதிநவீன ஆயுதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் சேர்ப்பு
- உலகிலேயே அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்த ஹெலிகாப்டரான அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்க அரசு இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.
- இந்தியா தனது விமானப்படையை மேலும் வலுவாக்க அமெரிக்க தயாரிப்பான போயிங் ஏஹெச் -64 இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க உத்தேசித்திருந்தது. இதற்காக அமெரிக்க ராணுவத்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
- 22 ஹெலிகாப்டர்களை வழங்க கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்த இந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா முதல் நான்கு ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது. புது டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங் ஒப்படைத்துள்ளது.
- ஒரு ஹெலிகாப்டரின் விலை ரூ. 4,168 கோடி என்ற அளவில் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் இப்போது இந்திய விமானப்படைக்கு வந்து சேர்ந்துள்ளது, அடுத்த வாரம் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வரவுள்ளது. 2022க்குள் 22 ஹெலிகாப்டர்களும் ஒப்படைக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.
- இந்த ஹெலிகாப்டர்கள் லேசர் மற்றும் இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. அதோடு இரவு பகல் என எந்த நேரத்திலும் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்திய விமானப்படையில் MI 35 என்ற ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.
- இப்போது அமெரிக்காவின் ஏஹெச் -64 இ அப்பாச் ஹெலிகாப்டர்கள் வந்துள்ளதால் ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இந்திய விமானப்படையிலிருந்து அப்புறப்படுத்தப் படுகின்றன. இதனால் இந்திய விமானப்படையின் புதிய அங்கமாக உலகின் அதிநவீன ஆயதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பறக்கப் போகின்றன.
உலக நீச்சல் போட்டியில் 'இரும்பு பெண்மணி' கதின்கா ஹோஸ்ஜூ சாதனை
- உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குவாங்ஜூ நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ 4 நிமிடம் 30.39 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
- 'இரும்பு பெண்மணி' என்று செல்லமாக அழைக்கப்படும் 30 வயதான கதின்கா ஹோஸ்ஜூ உலக நீச்சலில் குறிப்பிட்ட பிரிவில் 5 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற அரிய சாதனையை அவர் படைத்தார்.
பிரசிடென்ட் கோப்பை: தங்கம் வென்றார் மேரி கோம்
- இந்தோனேஷியாவில் நடந்த பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் (51 கி.கி.,) தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவில், 23வது பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடந்தது.
- இதன் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு பைனலில், இந்தியாவின் மேரி கோம், ஆஸ்திரேலியாவின் பிராங்க்ஸ் ஏப்ரல் மோதினர். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சுவாமி (49 கி.கி.,), ஆனந்தா பிரல்ஹத் (52 கி.கி.,), அங்குஷ் தஹியா (64 கி.கி.,), ஜமுனா போரோ (பெண்கள் 54 கி.கி.,), சிம்ரன்ஜித் கவுர் (பெண்கள் 60 கி.கி.,), மோனிகா (பெண்கள் 48 கி.கி.,) ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றனர்.
- பைனலில் தோல்வி கண்ட இந்தியாவின் கவுரவ் பிதுரி (56 கி.கி.,), தினேஷ் தாகர் (69 கி.கி.,) தலா ஒரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.