வெற்றிகரமாக செலுத்தப்பட்டது 'சந்திரயான் - 2' ண நிலவு ஆய்வில் இந்தியா மீண்டும் சாதனை
- சந்திரயான் - 2' விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் 'இஸ்ரோ' நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
- நிலவின் தென்துருவ பகுதியில் கனிம வளங்கள் தண்ணீர் இருப்பு உள்ளதா மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய 'சந்திரயான் -- 2' என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' உருவாக்கியது.
- அந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 'சதீஸ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
- 'ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 - எம் 1' ராக்கெட் 'சந்திரயான் - 2' விண்கலத்தை சுமந்தபடி நேற்று மதியம் 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்கள் 33 வினாடிகளில் 'சந்திரயான் -- 2' விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- மொத்தம் 3850 கிலோ எடையுள்ள 'சந்திரயான் -- 2' விண்கலம் நேற்று முதல் 23 நாட்களுக்கு குறைந்தபட்சமாக 170 கி.மீ. துாரத்திலும் அதிகபட்சமாக 39 ஆயிரத்து 120 கி.மீ. துாரத்திலும் புவி வட்டப் பாதையில் சுற்றிவரும்.
- பின் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு அந்த விண்கலம் மாறும்.நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் 'சந்திரயான் - 2' விண்கலம் இருக்கும்போது அதிலிருந்து 'லேண்டர்' என்ற கருவி தனியே பிரிந்து நிலவை நோக்கி செல்லும். அப்போது மணிக்கு 6000 கி.மீ. வேகத்தில் செல்லும்.
- தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு 48வது நாளில் புவியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. துாரத்தில் உள்ள நிலவில் லேண்டர் என்ற ஆய்வுக் கருவி தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
ஸ்காட்லாந்து கல்வி நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முடிவு
- முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதென ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (எடின்பரோ) கல்வி நிறுவனமும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் முடிவு செய்துள்ளன.
- இதன் மூலம் தமிழக மருத்துவ மாணவர்களும், ராயல் காலேஜ் மாணவர்களும் பரஸ்பரம் பலனடைய உள்ளனர். அதுமட்டுமன்றி தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வியின் தரத்தை அடுத்தகட்டத்துக்கு மேம்படுத்த இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்
- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
'டார்னியர்' ரக விமானங்கள் கடற்படைக்கு அர்ப்பணிப்பு
- இந்திய கடற்படைக்கு, இரண்டு டார்னியர் விமானங்கள் அடங்கிய, ஐந்தாவது, 'கடற்படை - 313 பிரிவு' அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, சென்னை விமான நிலையத்தில் உள்ள, கடற்படை விமான தளத்தில் நடந்தது.
- சென்னைக்கும், கடல் பாரம்பரியத்திற்கும் நீண்ட தொடர்பு உண்டு. இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தில், பல்வேறு பகுதிகள், இயற்கை சீற்றத்திற்கு உள்ளாகின்றன; இதில், தமிழகமும் ஒன்று.
- இயற்கை சீற்றத்தின் போது, மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட, இரண்டு, டார்னியர் ரக விமானங்கள், தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இது, மிகுந்த உதவியாக இருக்கும். இந்த படை பிரிவை, மேலும் பலப்படுத்த, நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இப்பிரிவில் சேர்க்கப்படும்.
ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
- பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்தச் சட்ட மசோதா கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
- இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்டிஐ சட்டத்தின்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. மேலும் அவரின் ஊதியம் தேர்தல் ஆணையருக்கு நிகராக உள்ளது.
- இனிமேல் தகவல் ஆணையரின் ஊதியம், பதவி காலம் மற்றும் நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 13,16,27 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் மோசடி : 3வது இடத்தில் தமிழகம்
- ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி, 2018 - 19 ம் நிதியாண்டில் அதிகபட்சமாக தலைநகர் டில்லியில் ஏடிஎம் மோசடி தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின்படி, ஏடிஎம் மோசடியில் நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 233 வழக்குகள் பதிவாகி உள்ளன. டில்லி, ஏறக்குறைய ரூ.2.9 கோடியை ஏடிஎம்., மோசடியில் இழந்துள்ளது.
- முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா ரூ.4.81 கோடியையும், 3வது இடத்தில் உள்ள தமிழகம் ரூ.3.63 கோடியையும் இழந்துள்ளன. ஏடிஎம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏடிஎம் மோசடி கூட நடந்தது இல்லை.
இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
- இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக்கொள்ள டில்லி வந்துள்ளார்.
- சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய், சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார்.
அவெஞ்சர்ஸ் உலக வசூலில் முதலிடம்
- அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் படம், உலக வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த படம் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அவதார் படம் 2.7897 (ரூ.19,210 கோடி) பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
- கடந்த 9 வருடமாக எந்த படமும் இதன் சாதனையை முறியடிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைசி காட்சியுடன் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 2.7897 பில்லியன் டாலர் வசூலை கடந்தது. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.