குஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்
- இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் டைனோசருக்கான அருங்காட்சியகத்துடன் கூடிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
- குஜராத் மாநிலத்தில் உள்ள பாலசினோர் அருகே இருக்கும் கிராமம் ரையோலி. இங்கு உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய புதைப்படிவங்களும், அதுமட்டுமல்லாது உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய டைனோசருக்கான எலும்புக்கூடு இருக்கிறது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.
- மேலும், இந்த ரையோலி கிராமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தற்போது வரை பாதுகாத்து வரப்படுகிறது. இங்கு மட்டும்தான் 65 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் முட்டைகளை தொட்டுப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு
வட கிழக்கு பகுதியின் என் பி பி கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது
- வட கிழக்கு இந்திய பகுதியை சேர்ந்த தேசிய மக்கள் கட்சி (நேஷனல் பியூப்பிள்ஸ் பார்ட்டி) தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய கட்சியாக ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட மொத்த மக்கலவை இடங்களில் 2% இடங்கள் அதாவது 11 இடங்களில் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் அல்லது சட்டப்பேரவை தேர்தல்களில் 6% வாக்குகள் மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
- தேசிய மக்கள் கட்சி கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் மக்களவை சபாநாயகர் புர்ணோ அஜிடோக் சங்மாவால் அவர் காங்கிரஸை விட்டு நீக்கப்பட்ட பிறகு ஆரம்பிக்கபட்டது.தற்போது இந்த கட்சி கான்ராட் சங்மாவின் தலைமையில் இயங்கி வரும் இந்த கட்சி பாஜகவின் அணியான தேசிய ஜனநாயக அணியில் இந்த பகுதியில் முதலிடம் பெற்றுள்ளது. மொத்த வாக்குகளில் 14.5% இந்தக் கட்சி பெற்றுள்ளது.
- ஏற்கனவே மணிப்புர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள இக்கட்சி தற்போது அருணாசலப் பிரதேசத்திலும் மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவில் முதல்வராகவும் இக்கட்சியின் ஜாய்குமார் மணிப்பூர் மாநில துணை முதல்வராகவும் உள்ளனர்.
- தேர்தல் ஆணையம் இந்த கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி உள்ளது. வடகிழக்கு இந்திய பகுதியில் இவ்வாறு அங்கீகாரம் பெறும் முதல் கட்சி என்னும் பெருமையை இக்கட்சி பெற்றுள்ளது, இக்கட்சிக்கு அகில இந்திய அளவில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்ற எட்டாவது கட்சி ஆகும்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன-பிரதமர் மோடி சந்திப்பு
- நரேந்திர மோடி பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார்.பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.
- இன்று இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உளவுத்துறை தலைவர் திடீர் நீக்கம்
- இலங்கையில், 'ஈஸ்டர்' தினத்தன்று (ஏப்.,21), தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவகளில், 300-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
- இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு குறித்து வழக்கமான ஆலோசனை கூட்டத்தினை அதிபர் சிறிசேனா கூட்டவில்லை எனவும் அப்படி கூட்டத்தை கூட்டியிருந்தால் தாக்குதல் சம்பவத்தினை தடுத்திருக்கலாம் என உளவுத்துறை சார்பில் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்டது.
- இந்நிலையில் இலங்கை உளவுத்துறை தலைவர் சிஸ்ரா மெண்டீசை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதற்கு அதிபர் அலுவலகம் விளக்கம் அளிக்கவில்லை.
தமிழ்நாடு பாட்மிண்டன் சூப்பர் லீக்: சென்னை சாம்பியன்
- 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை முகப்பேரில் நடைபெற்றது. திருச்சி பிளாஸ்டர்ஸ்-சென்னை பிளையிங் கிராவிட்டி அணிகள் மோதிய இறுதிச் சுற்றில் சென்னை அணி வெற்றி பெற்றது.
- ஜூனியர் பிரிவில் சென்னை வீரர் சித்தாந்த் குப்தாவும், சீனியர் பிரிவில் திருச்சி வீரர் மணிகண்டனும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையின் அர்ஜுன்-கோபிநாத்தும், கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகண்டன்-ஞானந்தாவும் வெற்றி பெற்றனர்.
- வெற்றி பெற்ற சென்னை அணிக்கு மாநில சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரிசளித்தார். ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. சூப்பர் லீக் சேர்மன் டி. சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.
பிரெஞ்ச் ஓபனில் 12-வது முறையாக தொடர் வெற்றி: நடால் சாதனை
- பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டு வீரரான ரபெல் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மும் மோதினர்.
- 3 மணி ஒரு நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
- நடாலுக்கு ரூ.18 கோடியும், 2-வது இடத்தைக் கைப்பற்றிய டொமினிக் திம்முக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.