ஜெகன் மோகன் ரெட்டி - ஐந்து துணை முதல்வர்களோடு ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம்
- ஆந்திர அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். நாட்டில் முதல்முறையாக மாநிலத்தில் 5 பேர் துணை முதல்வர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
- அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் அந்த கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது.
- தெலுங்கு தேசத்துக்கு 23, ஜனசேனா கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தன. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
2026ம் ஆண்டுக்குள் 40 சதவீத டாக்சிகளை மின்சார வாகனங்களாக மாற்ற திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் பரிந்துரை
- டாக்சி இயக்கும் நிறுவனங்கள், 2026ம் ஆண்டுக்குள் தங்களிடம் உள்ள வாகனங்களில் 40 சதவீதத்தை மின்னணு வாகனங்களாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக மின்சார வாகனங்களுக்கு டாக்சிகள் மாறவேண்டி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் சாலை போக்குவரத்து, எரிசக்தி, ஸ்டீல் துறை அமைச்சகங்கள் இடையே ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது.
- இதில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கு விற்கப்படும் புதிய வாகனங்கள் கண்டிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாகத்தான் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 2023ம் ஆண்டில் இருந்து, மின்சாரத்தில் இயங்கும் பைக், ஸ்கூட்டர்களை விற்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இதன்படி, டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் 2021ம் ஆண்டு 2.5 சதவீத வாகனங்களையும்,, 2022ல் 5 சதவீதம், 2023ல் 10 சதவீதம் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டியிருக்கும் என்றனர்.
- சில டாக்சி நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இயக்கி வருகின்றன. ஆனால் அவற்றுக்கான கடந்த நிதியாண்டில் மின்சார வாகன விற்பனை 3 மடங்கு அதிகரித்து 3,600 ஆக இருந்தது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களோடு ஒப்பிடுகையில் இது 0.1 சதவீதம்தான்.
நிதி அமைச்சர் - தொழில் கூட்டமைப்பினர் ஜூன் 11-இல் சந்திப்பு
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக தொழில் துறையினரின் ஆலோசனைகளை பெறும் வகையில் ஜூன் 11-ஆம் தேதி வர்த்தக கூட்டமைப்புகளை சந்தித்துப் பேச உள்ளார்.
- இதில், சிஐஐ, ஃபிக்கி, அசோசேம் உள்ளிட்ட முக்கிய கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே ராஜினாமா
- ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, 2019 மார்ச் 29-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து முறைப்படி விலக முடிவானது.
- இந்நிலையில், பிரெக்ஸிட்டை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, தெரசா மே புதிய பிரதமரானார். பதவியேற்றதும் பிரெக்ஸிட் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.
- இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
- எதிர்கட்சி மட்டுமல்லாது,தெரஸா மேயின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.
- இதனால், பிரெக்ஸிட் ஒப்பந்தம் 3 முறை தோல்வியடைந்தது.
- இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மேயின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
- பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்பிக்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் வெள்ளிக்கிழமையன்று தெரசா மே ராஜினாமா செய்தார்.
செம்மீன் ஷீலாவுக்கு ஜேசி டேனியல் விருது
- மலையாள திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் சீனியர் நடிகை செம்மீன் ஷீலா. செம்மீன் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றதால் செம்மீன் ஷீலா என அனைவராலும் அழைக்கப்படும் இவரின் வாழ்நாள் சாதனைகளை பாராட்டி, 2௦19ஆம் ஆண்டுக்கான கேரளா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ஜேசி டேனியல் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் செம்மீன் ஷீலா. இவற்றில் 130 படங்களில் நடிகர் பிரேம் நசீருடன் மட்டுமே இணைந்து நடித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான செம்மீன் ஷீலா, பாலாக்கட்டு மாதவன் படத்தில் விவேக்கின் தாயாகவும் நடித்திருந்தார்.
டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி
- 179 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான டென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 179 ஆசனங்களில் 96 ஆசனங்களைக் கைப்பற்றி இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
- இந்த வெற்றியின் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான 41 வயதான மெட் பிரெடிரிக்சன் டென்மார்க் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதுடைய பிரதமராக அவர் டென்மார்க் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மரப் பட்டறைகளுக்கு இலங்கை அரசு தடை
- மரப் பட்டறைகளுக்கும், மர அறுவைக் கருவிகளின் இறக்குமதிக்கும் இலங்கை அரசு 5 ஆண்டுகள் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
- சட்டவிரோத மரக் கடத்தல் காரணமாக இலங்கையின் வனப் பகுதிகள் சுருங்கி வருவதாகவும், எனவே அதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் உறுதியளித்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது
- கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தியவர் கிரேட்டா தன்பெர்க்.
- இந்நிலையில், லண்டனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரேட்டாவுக்கும், அவரது தலைமையிலான "எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமைகள்" இயக்கத்திற்கும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.