இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திடீர் ராஜினாமா
- இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜினாமாவிற்கு பின்னர் நியூயார்க்கில் உள்ள பிசினஸ் கல்லூரி ஒன்றுக்கு பேராசிரியராக அவர் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது
முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனி விளையாட்டு மைதானம்
- தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.20 கோடி செலவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்கள் தடகளம், நீச்சல், வீல் சேர் டென்னிஸ், வீல் சேர், கால்பந்து உள்ளிட்ட 13 வகையான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
- ரூ.20 கோடி செலவில் 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்தில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல் குளம், கூடைப்பந்து உள்பட மாற்றுத்திறனாளிகள் விளையாடும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன்
- உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய இறுதி போட்டி இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரானி ரம்பால் 3வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
- இதனை சமன்செய்யும் வகையில் ஜப்பான் வீராங்கனை கனோன் மோரி 11வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர், 45வது மற்றும் 60ஆவது நிமிடங்களில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் என்ற வீராங்கனை அசத்தலாக இரண்டு கோல் அடித்து இந்திய அணி 3-1 என்ற முன்னிலைக்கு உதவினார்.
- அதன்பின்னர் ஜப்பான் வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை என்பதால் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது இந்த வெற்றியின் மூலம் வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய பெண்கள் ரக்பி அணியின் முதல் சர்வதேச வெற்றி - ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தியது
- இந்திய மகளிர் ரக்பி அணி தனது முதல் சர்வதேச அளவிலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
- ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் தொடர்களில் ஒன்றாக இது உள்ளது.
- அனுபவம் மிக்க சிங்கப்பூர் அணியின் வீராங்கனைகளின் முயற்சி கடைசி வரை பலனளிக்காததால் 21-19 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தங்களது வரலாற்று சிறப்புமிக்க முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்ததோடு, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றது.
- முதலிடத்துக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சீனா 68-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.
பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
- 2019 ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
- இதில் 309.69 கிலோமீட்டர் கொண்ட பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார்.
- 1 மணி 24 நிமிடம் 31.198 வினாடிகளில் முதலாவதாக வந்த ஹாமில்டன் 25 புள்ளிகளை வசப்படுத்தினார். இந்த சீசனில் அவரது 6-வது வெற்றி இதுவாகும்.
- அவரை விட 18.056 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார்.