வாணியம்பாடி அருகே சோழர் காலத்து நடுகல் கண்டெடுப்பு
- வாணியம்பாடியில் இருந்து நாட்டறம்பள்ளிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் உள்ளது.
- நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது. இதன் காலத்தை வைத்து கணக்கிடுகையில் இது, சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது.
- 1.5 அடி உயரம் மண்ணில் புதைந்த நிலையில், 2 அடி உயரம் மேலே தெரிந்த நிலையில் உள்ளது. 3 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.
- உருவம் தேயாமல் நேர்த்தியான வடிவில் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரன் வலது புறம் கொண்டையிட்டு, கையில் வில், அம்புடன் உள்ளார்.
- காதுகளில் காதணிகள், முதுகுப்புறம் அம்புக் கூடு காணப்படுகின்றன. கைகளில் வீரக் கடகங்களும் உள்ளன.
இந்திய விமானப் படையின் முதல் 'பெண்கள் ஒன்லி' வான் குழு
- இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவது, பல இளம் பெண்களுக்கும் உத்வேகம் தரும் வகையில் உள்ளது.
- அதன் மற்றொரு பாய்ச்சலாக, இந்திய விமானப் படையின் Mi-17 V5 ஹெலிகாப்டரை இயக்கி வான்போர் பயிற்சி பெற்றிருக்கிறது பெண்கள் மட்டுமே கொண்ட குழு.
- கேப்டனாக ஃபிளைட் லெப்டினன்ட் பருல் பரத்வாஜ், கோ-பைலட்டாக ஃபிளையிங் ஆபீஸர் அமன் நிதி மற்றும் ஃபிளைட் இன்ஜீனியராக ஃபிளைட் லெப்டினன்ட் ஹினா ஜெய்ஸ்வால். இந்த மூன்று பெண்கள் இணைந்த குழுதான் அந்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளது.
- பைலட் பருல், பஞ்சாபைச்சேர்ந்தவர். Mi-17 V5 ஹெலிகாப்டரை இயக்கிய முதல் பெண். கோ-பைலட் அமன், ராஞ்சியைச் சேர்ந்தவர்.
டில்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம்
- ஜனாதிபதி மாளிகையில் நடந்த கோலாகலமான விழாவில், நரேந்திர தாமோதர தாஸ் மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
- நாட்டின், 17வது லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்காளருக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கு, தேர்தல் நடக்கவில்லை.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு வாடிக்கையாளர் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெறலாம்
- வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சரிபார்ப்பதற்கு அவர்களின் ஒப்புதலுடன்தான் ஆதார் விவரத்தை கேட்டுப் பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்பட பல்வேறு வங்கி சேவைகளின்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்கின்றன.
- வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கும்போதும், புதிய கைபேசி இணைப்பு பெறும்போதும் வாடிக்கையாளர் தாமாக முன்வந்து 12 இலக்க ஆதார் எண் விவரத்தை கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்த்திற்கு கடந்த பிப்ரவரியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
10 % இடஒதுக்கீடு ; மகாராஷ்டிரா உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
- மகாராஷ்டிர மாநில அரசு முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், "அரசு சட்டத்தின் கீழ் உரிய விதிகளை உருவாக்கி செயல்பட முடியும். ஆனால், ஆனால் மருத்துவ மருத்துவ கவுன்சில் (MCI) கூடுதல் இடங்களை உருவாக்காத சூழ்நிலையில், தற்போது இருக்கும் இடங்களை EWS இட ஒதுக்கீடு திருத்தத்திற்கு உட்படுத்த முடியாது." என்று கூறி தற்காலிகமாக, மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
- ஜெர்மனியின் முனிச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி நாளான நேற்று 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில்-திவ்யனாஷ் சிங் பன்வார் ஜோடி 16-2 என்ற கணக்கில் சக நாட்டு ஜோடியான அபுர்வி சண்டிலா- தீபக்குமார் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
- இதே போல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சவுரப் சவுத்ரி - மானுபாகெர் ஆகியோர் அனுபவம் வாய்ந்த உக்ரைனின் கோஸ்டெவிச்-ஒமெல்சக் ஜோடியை 17-9 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சாதனை
- இந்திய அணி உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
- 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன் ரஷியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
ஐரோப்பா லீக் கால்பந்து: செல்ஸி சாம்பியன்
- அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐரோப்பா லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் செல்ஸி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- ப்ரீமியர் லீக் அணிகளான செல்ஸி-ஆர்செனல் இடையே ஐரோப்பா லீக் போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி செல்ஸி 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்செனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் அற்புதமாக 2 கோல்களை அடித்தார்.
- பெல்ஜிய வீரரான ஹசார்ட் விரைவில் ரியல் மாட்ரிட் அணிக்கு இடம் பெயர உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் செல்ஸி அணிக்கு ஐரோப்பா லீக் பட்டத்தை பெற்றுத் தந்துள்ளார்.
பப்புவா நியூ கினியா: முன்னாள் நிதியமைச்சர் பிரதமராகத் தேர்வு
- பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமராக, முன்னாள் நிதியமைச்சர் ஜேம்ஸ் மராபேவை அந்த நாட்டு எம்.பி.க்கள் தேர்வு செய்துள்ளனர்.
- அமெரிக்க நிறுவனமொன்றுக்கு 1,300 கோடி டாலர் (சுமார் ரூ.90,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் பீட்டரோ நீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த ஜேம்ஸ் மராபே தற்போது புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் ஆட்சியமைக்கத் தவறினார் நெதன்யாகு: இஸ்ரேலில் மறுதேர்தல் நடத்த முடிவு
- இஸ்ரேல் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியாத நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தலை நடத்த அந்த நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
- இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
- இதன் மூலம், அவர் 5-ஆவது முறையாக அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. பழமைவாதக் கட்சியான ஐக்கிய டோரா யூதக் கட்சிக்கு 7 இடங்களும், ஆளும் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சி 35 இடங்களையும் கைப்பற்றின.
- இந்தச் சூழலில், வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சியமைக்க நெதன்யாகு முயற்சி செய்து வந்தார்.
- எனினும், இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதிலிருந்து பழைமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு நிலவியதால் நெதன்யாகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
- புதன்கிழமை நள்ளிரவுக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், கெடு முடிவடைந்த பிறகும் நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை.
- அதனைத் தொடர்ந்து, 21-ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
- அதில், மறு தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக 75 எம்.பி.க்களும், எதிராக 45 பேரும் வாக்களித்தனர். அதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.